29 December 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (31)




"அம்மா! எல்லாம் தயாரா? கிளம்பலாமா?"

"ம்!" நாகலட்சுமியிடமிருந்து சுரத்தில்லாமல் பதில் வந்தது.

"அம்மா! பயப்படுறீங்களா? தைரியமா இருங்க! ஒரு பிரச்சனையும் இருக்காது." விக்னேஷ் அவரைத் தேற்றினான்.

"அது எனக்குத் தெரியும்பா. இருந்தாலும் ஆபரேஷன்னாலே ஒரு பயம் இருக்கத்தானே செய்யிது?"

"அதெல்லாம் அப்போ. டெக்னாலஜி முன்னேறின இந்தக்காலத்தில இதுக்கெல்லாம் பயப்படக்கூடாது. இப்ப உங்களுக்கு ஆபரேஷன் பண்ணப்போற டாக்டர் இதில ஸ்பெஷலிஸ்ட். அதனால எந்தப் பின்விளைவும் இருக்காது. பயப்படாம கிளம்புங்க."

நாகலட்சுமி பூஜையறைக்குச் செல்ல உதவினாள், வித்யா.

"பாவம், நீயும் என்கூட சேர்ந்து சிரமப்படுறே!" அவளுக்காக இரங்கினார், நாகலட்சுமி.

"பரவாயில்லம்மா, எங்க அம்மாவா இருந்தா செய்யமாட்டேனா?" வித்யாவின் பதிலைக்கேட்டு மலைத்தார்.

சுந்தரி முகம் வெளிறி நின்றிருந்தாள்.என்றுமில்லாத வழக்கமாய் நெற்றி நிறைய திருநீறு பூசியிருந்ததில் அவள் பயம் புரிந்தது. 

"அக்கா, அம்மாவைப் பாத்துக்கங்க,  என்னாலதான் வந்து துணைக்கிருக்க முடியாமப் போச்சு!"

"சுந்தரி, நீ கவலைப்படாதே. நான் அவங்களை நல்லா பாத்துக்கறேன். தைரியமா இரு.”

"எத்தன நாள் தங்கவேண்டியிருக்கும்க்கா?"

"அஞ்சாறு நாள் ஆகலாம். அதுக்கப்புறம் ஒருமாசம் போல தெரபிஸ்ட் ஒருத்தங்க வீட்டுக்கு வந்து காலை மடக்க, நீட்ட பயிற்சி தருவாங்க. அப்புறம் அம்மா தானாவே நடக்க, உட்கார, எழுந்திரிக்க எல்லாம் செய்வாங்க."

சுந்தரி ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டாள்.

“இந்தப் பசங்க ஏதாவது வம்பு பண்ணினா எனக்குப் போன் பண்ணு. என்ன?"

"அஜயும், அஸ்வத்தும் ரொம்ப நல்ல புள்ளைங்க. ஒரு வம்பும் பண்ணமாட்டாங்க."

மருத்துவமனையில் உதவிக்கு ஒரு பெண் அருகில் இருந்தால் நல்லது என்று டாக்டர் கூற வித்யாவை வரவழைத்தான், விக்னேஷ். அவளும் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு வந்துவிட்டாள். அஜயும், அஷ்வத்தும் இங்கிருந்தே பள்ளி செல்ல ஏற்பாடு செய்தாகிவிட்டது. குழந்தைகளை கவனித்துக்கொண்டு சுந்தரி வீட்டிலிருந்துவிட்டாள். அவளிடம் விடைபெற்றுக்கிளம்பினர் மூவரும்.  


*******************************************************************************************

குறித்த நாளில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாய் நடந்தேறியது. நாகலட்சுமிக்கு எல்லாம் கனவுபோல் இருந்தது. இன்றுதான் புதிதாய்ப் பிறந்ததுபோல் உணர்ந்தார்.

அப்பப்பா! எத்தனை வலியும், வேதனையும் அனுபவித்தாயிற்று. இனி தனக்கு யார் உதவியும் தேவையில்லை என்ற நினைவே இரண்டாள் பலத்தைத் தந்தது. இத்தனை நாளும் விக்னேஷ் தவித்துவிட்டான். வித்யா மட்டும் இல்லையென்றால் இன்னமும் தவித்திருப்பான்.

வித்யாவின் அன்பான அனுசரணையான கவனிப்பில் உள்ளம் உருகி நின்றாலும், அவள் தனக்காக தன் காலடியிலேயே பழியாய்க் கிடப்பதை எண்ணி குற்ற உணர்வு மிகுந்தாலும், அவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளி இவை யாவும் அவள் தனக்கு செய்யவேண்டிய கடமையென்றே நாகலட்சுமியின் மனம் எண்ணியது.

வித்யாவின் அப்பா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும், அவள் அக்கா வீட்டை விட்டு வெளியேறிய அதிர்ச்சியில் அவர் திடீரென  இறந்தபோதும், விக்னேஷ் எப்படியெல்லாம் ஓடி ஓடி உதவினான். சாப்பாடு, தூக்கம் மறந்து எத்தனை நாள் அலைந்திருப்பான்? அன்று அவன் செய்த உதவிக்கு பிரதியுபகாரமாய் இன்று இவள் எனக்கு சேவை செய்கிறாள். அவ்வளவுதான். இதில் எனக்கெதற்கு குற்ற உணர்வு என்று தன்னை சமாதானப்படுத்திக்கொண்டார்.

மருத்துவமனையில் இருந்தபோது ஒருநாள் கனகவல்லி வந்து பார்த்தார். அவரை வரவேற்ற வித்யா, நாகரிகம் கருதி அறையை விட்டு வெளியேறி, வெளியிலிருந்த பார்வையாளர்களுக்கான நாற்காலியொன்றில் அமர்ந்திருந்தாள்.

இங்கு வந்து ஐந்து நாட்களாகிவிட்டன. அஜயும், அஷ்வத்தும் நல்லவிதமாய் இருப்பதாக சுந்தரி சொன்னாள். பாவம், அவளுக்குதான் எத்தனை சிரமம்? சுபாவும் வளர்ந்துவிட்டதால் ஒரு இடத்தில் இருப்பதில்லை. எதையாவது பிடித்துக்கொண்டு  எழுந்துநிற்கத் துவங்கிவிட்டதால் அவளைக் கண்காணிப்பதே பெரும்வேலை. கொஞ்சம் அசந்தாலும் கீழே விழுந்து அடிபட்டுவிடுகிறது. சுந்தரிக்காக பரிதாபப்பட்டுக்கொண்டிருந்த வேளை,

"ஏய், வித்யா! இங்க என்ன பண்றே?" சமீபத்தில் விக்னேஷின் குரல் கேட்டு திடுக்கிட்டாள்.

"வாங்க, விக்கி! உங்க வருங்கால மாமியார் வந்திருக்காங்க! ரெண்டுபேரும் ஏதாவது பேசுவாங்க, நான் எதுக்கு குறுக்க இருக்கணும்னு வந்திட்டேன்."

"வித்யா! நீ இப்படி பேசுறது எனக்குப் பிடிக்கலை."

விக்னேஷ் இறுக்கமானான்.

"விக்கி, நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் அவங்கதான்....."

"வித்யா, நிறுத்துறியா? இங்க பாரு, எனக்கு அவங்களையும் பிடிக்கலை, அவங்க பொண்ணையும் பிடிக்கலை. பொண்ணா அது? சரியான ராங்கி!"

வித்யா சிரித்தாள்.

"விக்கி! உங்களுக்கு அந்தப் பொண்ணைப் பிடிக்குதாங்கிறது முக்கியமில்ல. உங்கம்மாவுக்கு அவளைப் பிடிச்சிருக்கு!"

"அம்மாவுக்குப் பிடிச்சு என்ன பண்றது? வாழப்போறது நான்."

விக்னேஷ் எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னான். வித்யா என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாயிருந்தாள்.

சற்றுநேரத்தில் விக்னேஷ் எழுந்து அம்மாவைப் பார்க்கச் சென்றான். வித்யா தானும் தொடர்ந்தாள்.

விக்னேஷைப் பார்த்ததும் நாகலட்சுமி முகம் மலர்ந்தார்.

விக்னேஷ் கடமைக்கு கனகவல்லியிடம், "வாங்க," என்று சொல்லிவிட்டு அம்மாவிடம், "அம்மா! எப்படிம்மா இருக்கீங்க? டாக்டர் வந்து பாத்தாரா?" என்றான்.

"பாத்தார். ரெண்டு நாளில வீட்டுக்குப் போலாம்னு சொன்னார். எனக்கும் எப்படா வீட்டுக்குப் போவோம்னு இருக்கு. சுந்தரி எப்படி இருக்கா?"

"நல்லாயிருக்காம்மா!"

"குழந்தைங்க எப்படி இருக்காங்க?"

"ம்! எல்லாரும் நல்லாயிருக்காங்க."

அம்மா, சுபாவைத் தனியே குறிப்பிடாமல் குழந்தைகள் என்று அஜயையும், அஷ்வத்தையும் சேர்த்துக் குறிப்பிட்டது விக்னேஷுக்கு ஆறுதலை அளித்தது. 

தாங்குகட்டைகளின் உதவியாலும் வித்யாவின் கைத்தாங்கலாலும் மெல்ல நடக்கப்பழகினார், நாகலட்சுமி. மருத்துவமனையில் அவரது அந்தரங்கத் தேவைகளை வித்யா கவனித்துக்கொண்டாள் என்றால் வீட்டுக்கு வந்தபின் அந்தப் பொறுப்பை சுந்தரி எடுத்துக்கொண்டாள்.

நாகலட்சுமியின் உடல்நிலை வெகுசுலபத்தில் தேறியது. மகனின் திருமண ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்ற உத்வேகமும், சுந்தரியின் அதீத கவனிப்பும் அவருக்கு ஒத்துழைத்தன. பிஸியோதெரபிஸ்ட்டின் பயிற்சியும் சேர்ந்துகொள்ள, ஒரே மாதத்தில் தானே தன் அடிப்படைக் காரியங்களைச் செய்யும் அளவில் முன்னேறியிருந்தார்.

மருத்துவமனையில் சந்தித்தபோது, கனகவல்லி, இன்னமும் தன் மகன் முரளியிடம் தாராவின் திருமணவிஷயமாய் பேசவில்லை என்றும் கூடியவிரைவில் பேசி தகவல் சொல்வதாகவும் கூறியிருந்தார். இன்றுவரை தகவல் இல்லை.

நினைத்துக்கொண்டிருக்கும்போதே கனகவல்லியிடமிருந்து போன் வந்தது. இன்று மாலை வருவதாக சொல்ல, நாகலட்சுமி மிகவும் மகிழ்ந்தார்.

கனகவல்லியுடன் தாராவும் வந்திருந்தாள். சுந்தரி, தேநீர் உபசரிப்பை முடித்து, முத்துவைச் சந்திக்கும் ஆவலில், அறையை விட்டு வெளியேறினாள். விக்னேஷ் தன் அறையில் தஞ்சம் புகுந்திருந்தான்.

கனகவல்லி மிகவும் கரிசனத்துடன் தோழியின் உடல்நிலை குறித்து விசாரித்தார். ஆனால் தாரா விக்னேஷ் திருமணம் குறித்து எதுவும் பேசவில்லை. நாகலட்சுமி தவித்தார். கனகவல்லியிடம் தானே திருமணப்பேச்சைத் துவக்கினார்.

"என்ன கனகா, உன் பையன்கிட்ட பேசினியா?"

"எதைப்பத்திக் கேக்குறே, நாகு?"

நாகலட்சுமி அதிர்ந்தார்.

"என்ன கனகா? புதுசா கேக்கிறே? அதான் தாராவை விக்னேஷுக்குக் கொடுக்கறதைப் பத்தி உன் பையன்கிட்ட கேட்டு சொல்றேன்னு சொன்னியே?"

"சொன்.....னேன்......."

"என்ன கனகா, இழுக்கிறே?"

"அது வந்து நாகு.... என் பையன்கிட்ட சொன்னேன். அவன் என்ன சொல்றான்னா.... "

"ம், சொல்லு, கனகா!"

"நீ தப்பா நினைக்காதே, நாகு.என் மகனுக்கு  இதில விருப்பமில்ல."

கனகவல்லி இப்படி சொன்னதும் நாகலட்சுமி பெரிதும் வியந்தார்.

"விருப்பமில்லையா? ஏன்?"

"அவனுக்கு ஃபாரின் மாப்பிள்ளைதான் வேணுமாம்! முடிவாச் சொல்லிட்டான்."

இத்தனை சொத்திருந்தும் ஏன்தான் இப்படி வெளிநாட்டு மோகம் பிடித்து அலைகிறார்களோ என்று தோன்றியது. பையன் நல்லவனா? குடும்பம் நல்ல குடும்பமா? என்று பார்க்காமல் இப்படித் தேடுவதால்தான் பல சிக்கல்கள் எழுகின்றன என்று நினைத்துக்கொண்டார். இருந்தாலும் கனகவல்லி என்ன நினைக்கிறார் என்று அறியும் ஆவல் உந்தியது.

"உன் மகன் சொல்வது இருக்கட்டும், நீ என்ன சொல்றே? உனக்கு இதில் சம்மதம்தானே?"

"என் மகன் சம்மதிக்காமல் நான் எப்படி சம்மதிக்கமுடியும்?"

நீ சொன்னால் உன் மகன் கேக்கமாட்டானா?"

"அவன் என்ன இன்னும் சின்னப்பிள்ளையா, அம்மா பேச்சை தட்டாம கேக்கறதுக்கு? எப்ப தோளுக்கு மேல வளந்துட்டானோ, இனிமே அவன் பேச்சைக் கேட்டு நடக்கிறதுதானே நமக்கு மரியாதை?"

நாகலட்சுமி நம்பமுடியாமல் அமர்ந்திருந்தார்.

மேற்கொண்டு ஏதோ பேச கனகவல்லி வாயைத் திறக்குமுன் தாரா வாய் திறந்தாள்.

"அம்மா! எதுக்கு இப்படி சுத்தி வளைச்சுகிட்டிருக்கீங்க? நான் சொல்றேன்."

தாயிடம் சொல்லிவிட்டு நாகலட்சுமியிடம் தொடர்ந்தாள்.

"சாரி ஆண்ட்டீ, அம்மா  உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தயங்கறாங்க, நானே சொல்லிடறேன். ஆக்சுவலா, எனக்குதான் உங்க மகனை மேரேஜ் பண்ணிக்கிறதில இஷ்டமில்ல, ஆண்ட்டீ!”

தாராவின் அதிரடி பதிலைக் கேட்டு நாகலட்சுமி திடுக்கிட்டார்.

(அடுத்த பாகத்துடன் நிறைவு பெறும்)

*******************************************************************************************************

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

மு. உரை:
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.
--------------------------------
தொடர்ந்து வாசிக்க

முந்தைய பதிவு

7 comments:

  1. நல்ல கதை.
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    எனது சமீப பதிவு: http://kbjana.blogspot.com/2011/12/2012-gaiety-and-happiness-new-day.html

    ReplyDelete
  3. Makes me to link many incidents with real life!
    Wonderful narration!

    ReplyDelete
  4. Rathnavel said...
    \\நல்ல கதை.
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\\

    வரவுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஐயா.

    ReplyDelete
  5. கே. பி. ஜனா... said...
    \\புத்தாண்டு வாழ்த்துக்கள்!\\

    வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  6. Anonymous said...
    \\Makes me to link many incidents with real life!
    Wonderful narration!\\


    Thank you very much for your comment.

    ReplyDelete
  7. அப்பா! தாரா பளீச்சுன்னு சொன்னவரைக்கும் சந்தோஷம்

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.