18 September 2011

உறைக்குள்ளிருந்தே உயிர்மாய்க்கும் கத்தி!


சுவாதீனமாயிருங்கள்!
எந்நேரமும் எதிர்கொள்ளநேரிடும்
வலியின் சுவையறிந்த நாவுகளை!

வன்சொற்கள் விதைத்து
ரணங்களை அறுக்கும் கலையில்
கைதேர்ந்த அவை,
பதுக்கும் வலிகளையும் கண்டறிந்து
பரிகசிக்கும் வல்லமை பெற்றவை!

மேலாடையில் ஊர்ந்துசெல்லும்
சிற்றெறும்பைத் தட்டிவிடுவதுபோல்
அசட்டையாய் இருக்கக்கூடும் எனினும்,
குத்தீட்டிவெல்லும் கொடுஞ்சொற்கள் ஏந்தி
உதட்டு உறைக்குள் பதுங்கி
 உங்கள் பலவீனத்தைப் பார்த்திருக்கும் அவற்றிடம்
உங்கள் பாசாங்கு பலிக்காமல் போகலாம்.

பாராமுகமாய் ஒதுங்கும்போதும்
பாய்ந்திழுத்துப் பேசி வளைத்து
வன்மப்புன்னகையினுள் வெஞ்சினம் மறைத்து
விடைபெறும் தருணம்
விருட்டென்று குரல்வளையில் செருகப்படும்
கூரிய சொற்களின் வீரியம் குறைக்கக்கூடும்,
மற்றுமொரு தருணம்
முனைப்புடன் தாக்கும் சொற்கள்
முன்னிலும் கூர்தீட்டப்பட்டும்
முனைகளில் நச்சு தோய்க்கப்பட்டும்!

சுதாரித்துக்கொள்ளுங்கள்!
வக்கணை பேசும் இந்நாவிலும்
வஞ்சனை கொஞ்சம் இருக்கலாம்.

12 comments:

  1. தாரித்துக்கொள்ளுங்கள்!
    வக்கணை பேசும் இந்நாவிலும்
    வஞ்சனை கொஞ்சம் இருக்கலாம்.


    அழகாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  2. இந்த ஆயுதத்திற்க்கு காயப்படுத்தவும் காயபடவும் வைக்க முடியும்...

    உலகில் மிகவும் கூர்மையான ஆயுதம்...

    கவிதையில் அழகாக சொல்லியிருக்கீறீர்கள்..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. உலகத்திலே பயங்கரமான ஆயுதம் என
    பட்டுக்கோட்டையார் நாவைத்தான் சொல்வார்
    அது குறித்து தங்கள் படைத்துள்ள கவிதை
    மிக மிக அருமை
    விளக்கமாக பின்னூட்டமிடவேண்டும் எனில் நிச்சயம்
    ஒரு கட்டுரைதான் எழுதவேண்டும்
    அத்தனை ஆழமான கருத்துடைய கவிதை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்

    ReplyDelete
  4. நீங்கள் கையாண்டிருக்கும் வார்த்தகளே என்னை மிகவும் ஈர்க்கிறது.வாழ்த்துகள்

    ReplyDelete
  5. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவரே.

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி செளந்தர்.

    தொடர்ந்துவந்து ஊக்கமளிப்பதற்கும் பாராட்டுக்கும் நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  6. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆச்சி.

    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சிசு.

    தமிழ்மண வாக்குப்பதிவுக்கு நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  7. பழைய திரைப் பாடல் ஒன்றில் வரும், 'உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?' என்ற கேள்விக்கு பதிலாக, 'நிலை கெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்குத் தான் அது!' என்று. அருமையான, கருத்துடைய கவிதை. பாராட்டுக்கள்!

    ReplyDelete
  8. முதல் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றிங்க ஜனா.

    ReplyDelete
  9. கவிதையின் வரிகள் மிக அருமை.
    வரிகள் ஒவ்வொன்றும் புதுமை.
    வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  10. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க முத்தரசு.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.