10 September 2014

தமிழ்விடு தூது



என் வாழ்வை அணிசெய்யும் மணிமொழியாம் தமிழே, உனக்கு என் வந்தனம். இன்று நீ இருக்கும் நிலைமையை நன்கறிந்தபின்னும் நான் உன்னை நலமா என்று உசாவுவது பொருளற்றது. ஆயினும் உன்னால் நானிங்கே நலமென்று உரைப்பதில்தான் எனக்கெவ்வளவு இறும்பூது!

பொருளீட்டும் பொருட்டு கடல்கடந்துவந்து அந்நிய மண்ணை மிதித்தபோது அகம் கொண்ட ஆற்றாமையோடு அலைபாய்ந்த என் மனத்தைத் தேற்றியது நீதான். மனத்தின் பாரமிறக்க உன் தோள்களைத் தந்து உற்ற தோழனானாய். உற்றார் உறவுகளின் பிரிவை எண்ணிக் கலங்கும்போதெல்லாம் தாயாய் மடி தந்து தயை புரிந்தாய். கதைகளாய், கவிதைகளாய், தேன்சுவைப் பாடல்களாய், அலமாரிப் புத்தகங்களாய், பேச்சாய், மூச்சாய் என்னைச் சூழ்ந்து, என்னுள் இறங்கி, கரைந்து என்னை நானாக வாழவைத்துக்கொண்டிருக்கும் தண்டமிழே, உன் தாள்பணிந்து வணங்குகிறேன்.

பிறந்தமண்ணில் இருந்தபோது உன்மேல் எனக்குதான் எவ்வளவு உதாசீனம்! ஒருவரிக் கடிதம் எழுதவும் சோம்பிக்கிடந்த நான் இன்று பக்கம் பக்கமாய் எழுதிக்கொண்டிருக்கிறேன். நிழலின் அருமை போல தமிழே.. உன் அருமையும் தாமதமாகத்தான் புரிகிறது. தாய்மண்ணைவிட்டு என் கால்கள் பலகாத தூரம் விலகி நடந்தாலும், தாய்மொழியே, செல்லுமிடமெல்லாம் உன்னை என் நாவில் சுமந்தே செல்கிறேன். எத்தனை மொழிகளைக் கற்றாலும் ஏற்றாலும் எப்போதும் மனம் ஏங்குவதென்னவோ உன்னைப் பார்க்கவும் கேட்கவுமே.

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே

என்று அன்று பாடிய முண்டாசுக்கவிஞனின் பாடலை முழுவதுமாய் அனுபவிக்கிறேன் இன்று. எங்காவது பொது இடத்தில் நீங்க தமிழா?” என்று கேட்பதிலும் கேட்கப்படுவதிலும் உள்ள சுகம்அதை அனுபவிப்பதுதான் இதம். கன்னற்தமிழே, உன் சுவையைக் காதுகுளிரக் கேட்கும்போது என்னை மறந்துபோகிறேன். என் காதல்மனைவியின் பிரிவையும் மறந்துபோகிறேன்.

பயிலுறும் அண்ணன் தம்பி -- அக்கம்
பக்கத்துறவின் முறையார்
தயைமிக உடையாள் அன்னை -- என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை
குயில்போல் பேசிடும் மனையாள் -- அன்பைப்
கொட்டி வளர்க்கும் பிள்ளை
அயலவராகும் வண்ணம் -- தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர் !

என்னும் பாவேந்தரின் பாடலை இன்று அனுபவத்தால் உணர்கிறேன். தாய் தந்தையை இழந்த எனக்கு ஒற்றைச் சொந்தமான, என் மனையாளின் பிரிவையும் தாங்கும் மனத்திடத்தைத் தந்த மகோன்னதத் தமிழே நீ வாழி!
என்றுமில்லாத வழக்கமாய் எதற்கித்தனை பீடிகையென்று உனக்குள் ஐயம் தோன்றியிருப்பதில் வியப்பில்லை. விவரமாய்ச் சொல்கிறேன். என்னை வாழவைக்கும் நீ, என் மனையாளையும் வாழ்விப்பாயென்ற நம்பிக்கையோடு வரையப்படுகிறது இம்மடல்.

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்
நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
"எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே"

என்று தன் வறுமை நிலையைப்பாடி, வடதிசையில் வாடிக்கிடக்கும் தன் மனைவியிடம் நாரையைத் தூதனுப்பிய சத்திமுத்தப் புலவரைப் போன்று, இன்றுன்னை நான் தென்திசைக்குத் தூதனுப்புகிறேன். காதற்தலைவனின் பிரிவால் நலிந்து, தனிமைத் துயருற்றுத் தவித்திருக்கும் என் தலைவியிடம் செல்வாய் செந்தமிழே! பிரிவாற்றாமையால் தவிக்கும் பேதை நெஞ்சம் அமைதிகொள்ளும் வண்ணம் அவள் மனத்துயரைப் போக்குவாய் பைந்தமிழே! என்னை மடியிருத்தி தாலாட்டி மனத்துயர் ஆற்றினாற்போல் அவளையும் ஆற்றுப்படுத்துவாய் என் அன்னைத்தமிழே!

அலம்பலும் சலம்பலுமாய் அக்கறையற்று வாழ்க்கை நதியின் போக்கில் போகவிருந்த என்னை அக்கறையாய் கரை சேர்த்தவள் என் அன்புக் காதற்கிழத்தி. இன்று அக்கரையில் புலம்பலுடன் கழிகிறது என் வாழ்க்கை, அவளை என் நெஞ்சகத்தில் இருத்தி. காற்றும் புகமுடியாவண்ணம் காதலுடன் வாழ்ந்திருந்த எங்கள் இருவருக்கிடையில் கடல் புகுந்த கதையைக் கேட்கவிரும்புவாயாயின் சொல்கிறேன், கேள்!

வீசுகமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா!

என்று நானும் அவளும் காதலால் கலந்து களித்துக்கிடந்த உன்மத்த வேளையொன்றில் தன் உள்ளக்கிடக்கையொன்றைத் தெரிவித்தாள். என் கண்மணியின் விருப்பத்தை நிறைவேற்றும்பொருட்டு, அவள்வழி உறவொன்றின் விழாவுக்காக, அழையாத வாயிலை மிதித்தோம். அவமானமுற்றுத் திரும்பினோம்.  

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு

என்னும் குறளுக்கேற்ப பொருள் இல்லாதவர்களை ஏளனம் செய்வதும் இருப்பவர்களைப் போற்றுவதும்தான் உலக இயல்பு என்பதை அறிந்திருந்தும் மதியாதார் தலைவாசல் மிதியாதேஎன்னும் ஒளவையின் வாக்கை மதியாது சென்ற காரணத்தால் மனமுடைந்துபோனோம்.

காதற்பித்து தலைக்கேறிவிட்டதால், கால்காசுக்கும் வழியில்லாதவனைக் கட்டிக்கொண்டுவிட்டாள் என்று தூற்றும் ஊரின் வாயை அடைக்க ஒரு உபாயம் சொன்னேன். ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தொரு அருமையான வாய்ப்பு அழைப்பு விடுத்திருக்கிறது, ஒப்பந்தத்தில் கையொப்பமிட, உன்னிடம் அனுமதி கேட்கும் துணிவின்றி அவதியோடு காத்திருக்கிறேன் கண்ணாட்டி என்றேன். என் வெற்று மார்பைச் சுட்டன அவளது பெருமூச்சும், சில கண்ணீர்த்துளிகளும். நெடிய மெளனத்திற்குப் பின் உம்மென்றாள் உம்மென்ற முகத்தினளாய்.

இதோ, சொடக்குப் போட்டாற்போல் ஓடிவிடும் மூன்றுவருடங்கள் என்று பொய் சொல்லிப் புறப்பட்டுவிட்டேன். என்  பொருளிலா வாழ்க்கையின் இன்னல் களைய கடல் கடந்து கண்காணா தேசம் புகுந்துவிட்டேன். அலைபேசியின் நல விசாரிப்புகளிடையே அவ்வப்போது எழும் அவளது விசும்பல்களும் அவற்றை அடக்க அவள் படும் பாடும் என் உள்ளத்தை உருக்கி கண்ணீரை உகுக்கவைக்கின்றன. எவ்வளவு தேறுதல் சொன்னாலும் பேதையவள் நெஞ்சம், பிரிவாற்றாமையினின்று விடுபடும் வழியறியாது பித்தாய்க் கரைகிறது. என்னை அயல்தேசம் செல்ல அனுமதித்ததன் மூலம் தான் தவறிழைத்தாற்போன்று குமுறிக் குறுகும் அவள் நெஞ்சுக்கு நான் எங்ஙனம் ஆறுதலளிப்பேன்? ஆதலால்தான் உன்னைத் துணைக்கழைக்கிறேன் தீந்தமிழே!

பொருள்வயின் பிரிதல் பற்றி நீ அறியாததா? பரத்தையிற் பிரிவு, ஓதல் பிரிவு, காவல் பிரிவு, தூதிற் பிரிவு, துணைவயின் பிரிவு, பொருள்வயின் பிரிவு என கற்பு வாழ்க்கையில் கணவன் மனைவியருக்கிடையே ஆறுவகையான பிரிவுகளை சங்க இலக்கியம் பகர்வதைச் சொல்லி பொருள்வயிற்பிரிதலொன்றும் ஆடவர்க்குப் புதிதல்ல என்று அவளிடம் எடுத்துரைப்பாய் தங்கத்தமிழே!

'நன்று'' எனப் புரிந்தோய்; நன்று செய்தனையே;
செயல்படு மனத்தர் செய்பொருட்கு
அகல்வர், ஆடவர்; அது அதன் பண்பே.

என்னும் சங்கத் தோழி போன்று, ‘உன் கணவன் பொருளீட்டச் செல்லும்போது அதைத் தடுக்காமல், சென்றுவாருங்கள் என்று மலர்ந்த முகத்தினளாய் வழியனுப்பிவைத்தாய் தலைவி, நீ செய்தது சரிதான்என்று அவளுக்கு ஆறுதல் மொழி சொல்லத் தக்க அருந்தோழியரும் அருகில் இலர். ஆகவே என் வாழ்வை அணிசெய்யும் மணிமொழியாம் அழகுத்தமிழே, உன்னையே அவளுக்கு உற்ற துணையாக தூதனுப்ப விழைகிறேன். அதற்கு அச்சாரமாகவே இக்கடிதத்தை உனக்கு எழுதுகிறேன் அருந்தமிழே!

என் காதல் கனிமொழியாளைப் பிரிந்துவந்து ஆறு திங்கள் ஆகின்றன. புதிய பணியும், சூழலும், புதிய நண்பர்களோடு முத்தமிழே நீயும், காலத்தைக் கடத்தும் முயற்சியில் எனக்குத் துணைபுரியும் இவ்வேளையில் அங்கு அவளது ஒவ்வொரு நாளையும் நெட்டித்தள்ள அவள் படும் பிரயத்தனங்கள் மனக்கண்ணில் விரிந்து வேதனை தருகின்றன.  

இன்பத்தை விடவும் கடமையே கரம்பற்றியவனுக்கு அழகென்று காட்டுதற்கு ஆயிரம் ஆதாரங்கள் உன்னிடம் உண்டல்லவா? ஆயினும் இந்தக் குறுந்தொகைப் பாடலைக் கோடிட்டுக் காட்டினால் அவள் கொஞ்சம் ஆசுவாசங்கொள்ளலாம்.

வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சிற்  
குளவி மொய்த்த வழுகற் சின்னீர்  
வளையுடைக் கைய ளெம்மொ டுணீஇயர்  
வருகதில் லம்ம தானே  
அளியளோ வளியளெந் நெஞ்சமர்ந் தோளே.

பாலைவழிச்செல்லும்போது குடிக்க நீர் கிடைக்காது. வேட்டையாடிக் களைத்த செந்நாயொன்று காலால் மண்ணில் தோன்றிய சிறுபள்ளத்தில் ஊறும் நீரைக் குடிக்கும். நாய் குடித்தது போக மீந்திருக்கும் குறையளவு நீரில் அருகிலிருக்கும் மரத்தின் காட்டுப்பூக்கள் விழுந்து அழுகி நாறிக்கிடக்கும். என்னுடைய தாகத்துக்கு அந்த நீரை நான் பருகலாம். ஆனால் அழகிய வளைக்கரத்தால் நீ அந்நீரைப் பருகிட என் மனம் எப்படி இசையும்? எண்ணிப்பார்க்கவே வேதனை மிகுகிறதே என்று அரற்றுகிறான் பொருட்வயிற்பிரிதலின்போது தானும் அவனுடன் வருவதாய் சொன்ன தலைவியிடம். தனக்காக தன் உற்றார் உறவுகளை விட்டுவந்த காதல் மனைவியை இன்பமுற வைத்திருப்பதுதானே முறை? அதைச் செய்யத்தவறுதல் அன்றோ குறை? என்று எடுத்துரைப்பாய் சங்கத்தமிழே!

பிரிவுழிக் கலங்கல் வேண்டாம் கண்ணேவந்துழி மகிழ்ச்சிக்கான காலம் விரைவிலேயே கைகூடிவரும், உன் எண்ணம் போல் ஊரும் உறவும் மெச்ச உன்னத வாழ்க்கை வாழுங்காலம் ஓடிவரும் என்று நல்வாக்கு சொல்லி அவளை நலமோடு வாழ்விப்பாய் நற்றமிழே! நான் மீண்டும் அவளைச் சேருங்காலம் வரையிலும் அவளை உன்பால் ஈர்த்து இணக்கமாக்கி இன்புறச் செய்வாய் இன்தமிழே!

வெந்தழல் நீராகும்; வெள்ளெலும்பு பெண்ணாகும்;
வந்தமத வேழம் வணங்கிடுமே; - சந்தமெழப்
பாடுவார் உள்ளுருகிப் பாடும் தமிழிசைக்கு
நீடுலகில் உண்டோ நிகர்?

என்னும் கவிமணியின் பாடலுக்கேற்ப இசையாய், பாடலாய் அவள் இதயத்துக்கு இதமூட்டி, கவியாய், காவியமாய் அவள் கருத்தினில் நுழைந்து, எழுத்தாய், எண்ணமாய் அவளைச் சேர்ந்து, உன் கரங்களுக்குள் அவளைக் கோர்த்து சற்றே என்னை இளைப்பாற்றுவாய் இயற்றமிழே! கன்னற்சுவையும் கற்கண்டுப்பாகும் தோற்கும் நல்லிலக்கியச்சாற்றினை அவள் பருகச் செய்வாய் தேன்மொழி! என் கண்மணியின் கண்ணீர் துடைக்கும் கரங்கள் இனி உனதே! அவள் பிரிவுத்துயராற்றும் வல்லமை, வண்டமிழேஉனையன்றி வேறெவருக்குண்டு?

உன் பொறுப்பில் அவளை ஒப்படைத்துவிட்டு முழுச்சிரத்தையோடும் உத்வேகத்தோடும் என் கடமையில் கண்ணாவேன். காலநீட்டிப்புக்கு இடங்கொடாமல் செவ்வனே பணிக்காலம் முடித்து என் பாரியாளைப் பார்க்கப் பரவசத்தோடு வீடு திரும்புவேன்.  

பைங்கண் யானைப் பரூஉத்தா ளுதைத்த     
வெண்புறக் களரி விடுநீ றாடிச்     
சுரன்முதல் வருந்திய வருத்தம் பைபயப்     
பாரம் மலிசிறு கூவலின் தணியும்  
நெடுஞ்சேண் சென்று வருந்துவர் மாதோ   
எல்லி வந்த நல்லிசை விருந்திற்குக்     
கிளரிழை அரிவை நெய்துழந் தட்ட     
விளரூன் அம்புகை எறிந்த நெற்றிச்   
சிறுநுண் பல்வியர் பொறித்த
குறுநடைக் கூட்டம் வேண்டு வோரே

பசிய கண்களையுடைய யானை தன் பருத்தக் காலால் உதைத்துப் பொடியாக்கிய பாழ்நிலத்தின் புழுதியில் நடந்து களைத்த வருத்தமெல்லாம் சுனைநீரால் தணியும். அதுபோல் தலைவன் படும் துயரமெல்லாம், வாழ்க்கைக்குத் தேவையான பொருளீட்டிப் பின்னர், உன்னோடு இனிதே இல்லறம் நடத்துதற்பொருட்டன்றோஇரவு நேரத்திலும் வீட்டுக்கு வரும் விருந்தினர்க்கு, அடுப்பூதிப் புகைபடிந்த நெற்றியில் வியர்வைத் துளிகள் துளிர்க்க, நெய் மணக்கும் ஊண்சோற்றை குறுநடையுடன் நீ பரிமாறும் அழகில் மயங்கி நிற்பாரன்றோ? என்று அன்றைய தோழி, தலைவியைத் தேற்றியது போல் நீயும் என் தலைவியைத் தேற்றி இன்புறச் செய்திடுவாய்.

எங்கள் உயிருக்கு நிகராய், எங்கள் உயர்வுக்கு வானாய், எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேனாய், எங்கள் பிறவிக்குத் தாயாய், எங்கள் வளமிக்க உளமுற்ற தீயாய்… தமிழே என்றென்றும் நீ வாழீ!

இங்ஙனம்,
உன்னால் வாழ்ந்துகொண்டிருப்பவன்.
*******************

(படத்துக்கு நன்றி - இணையம்)


28 comments:

  1. இப்படி எல்லாம் தமிழைச் சொல்ல முடியுமா...!!!!

    எல்லார்க்கும் புத்தி இயம்பிக் கரையேற்ற
    வல்லாய் உனக்குரைக்க வல்லேனோ?
    ......................................................................
    என்றென் றிரங்கினேன் என்கவலை யெல்லாம்பொற்
    குன்றனையா யுன்னுடனே கூறுகேன்
    ...............................................................

    ---------------------------------தமிழ்விடு தூது--------------------------------------
    பலபல செய்திகள் கொண்ட பதிவு!
    அறியாத பலவற்றை அறிய முடிந்தது.
    பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தூதாய் தமிழனுப்ப துயரம் பறந்துபோம் அன்றோ?

      தங்கள் வருகைக்கும் பாடல் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      Delete
  2. வாவ் கீதமஞ்சரி! மிகவும் அருமை, தூய தமிழ்ச் சொற்களும் சங்கப் பாடல்களும் அவை சொல்லும் வாழ்வுமுறையும் பாவேந்தரின் கவிதையும்- ஆகா ! ஒன்றல்ல இரண்டல்ல - இத்தனைப் பாடல்களா! என் தீந்தமிழிழா!! வாய்விட்டுப் படித்தேன், இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே! தலைவனின் உள்ளத்து உணர்வுகள் அருமையாய்க் கோர்க்கப்பட்டு மனதைத் தொடுகின்றன.
    உங்கள் எழுத்துநடையும் எண்ணக்கோர்வையும் மிகவும் அழகு, அருமை!
    இனியதொருப் பகிர்விற்கு நன்றி தோழி...வாழ்த்துக்கள்!
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. தமிழ்ச்சுவை பரப்பும் உங்களுடைய மனந்திறந்த பாராட்டு என்னை மிகவும் மகிழ்விக்கிறது கிரேஸ்.

      Delete
  3. வணக்கம்
    சகோதரரி

    தமிழின் சிறப்பை மிக அருமையான பாடல்கள் மூலம் விளக்கிய விதம் கண்டு மிகிழ்ந்தேன்..
    அறிய முடியாத தகவலை அறிந் தேன் பகிர்வுக்கு நன்றி. த.ம2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ரூபன்.

      Delete
  4. தங்களால் தங்கத் தமிழினில் கொடுக்கப்பட்டுள்ள ’தமிழ்விடு தூது’ மிகவும்
    அருமையாக உள்ளது.

    ரஸித்துப்படித்தேன். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    இது தங்களின் சமீபத்திய தமிழ்நாட்டுப்பயணத்தின் தாக்கமாக இருக்குமோ :)

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோபு சார். இது வல்லமையில் முன்பு நடைபெற்ற கடித இலக்கியப் போட்டிக்காக எழுதியது. நான் எழுதிய வேறொரு கடிதத்துக்குப் பரிசு கிடைத்தது.

      Delete
  5. ஆஹா மிகவும் அருமை....நல்ல மொழி நடை...வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கீதா.

      Delete
  6. அருமையான கட்டுரை. தமிழகத்தினை விட்டு வெளியேறிய பிறகு தான் நமக்கு தமிழ் மேல் பற்று அதிகமாகி விடுகிறது!

    ReplyDelete
    Replies
    1. இருப்பின் மதிப்பு இல்லாமையின் போதுதானே உணரப்படுகிறது. உண்மைதான். நன்றி வெங்கட்.

      Delete
  7. இணையத்தால் இவ்வுலகையே இணைக்கும் என்தமிழே வாழ்க

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  8. தமிழ் விடு தூது - தங்கத்தமிழும் சங்கத்தமிழுமாய் மணக்கிறது..பாராட்டுக்கல்..

    ReplyDelete
  9. அன்னைத் தமிழை, அன்புத் தமிழை அதன் மணத்துடன் நுகர்ந்து ரசித்து இன்புற முடிந்தது. அருமையான கடிதம் எழுதி அசத்திட்டீங்க..

    ReplyDelete
  10. அயல்நாட்டில் குடும்பத்தைப்பிரிந்து வாழும் ஒருவனின் மனத்துயரத்தை, உணர்ச்சிகளை தீந்தமிழில் சங்க காலப்புலவர்களையும் தமிழ்க்கவிஞர்களையும் துணைக்கழைத்துக்கொன்டு எத்தனை அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள் கீதமஞ்சரி!! இனிய வாழ்த்துக்கள்!! மனம் நிறைந்த பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  11. அந்நிய தேசத்தில் இருக்கும்போது பிறந்த மண்ணுடனும் கலாச்சாரத்துடனும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கும் தாய் மொழி தமிழ் மீது இந்தக் காதல் தேவைதான். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. இத்தனை அழகாய்
    எத்தனை சிறப்பாக
    அத்தனை தமிழ் பாவில்
    நல்லெண்ணம் சுட்டி
    நற்றமிழ் விளக்கிய
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  13. இலக்கியத் தமிழில் உங்கள் ஆற்றல் கண்டு மலைத்தேன்.
    ஆனாலும் புரியாமல் இருக்கவில்லை. மிக மிக அருமை!
    தொடருங்கள் தோழி!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. Anonymous12/9/14 16:05

    மிக நன்றாக எழுதப்பட்டுள்ளது.
    தங்கள் புலமையின் வெளிப்பாடு.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  15. மிக அருமை மஞ்சரி. இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதில் மட்டுமல்ல என் கணினியிலும்தான். நன்றி :)

    ReplyDelete
  16. அக்கா! இந்த போஸ்ட்டை கொஞ்சம் படிச்சுபாருங்க ப்ளீஸ்:)
    http://makizhnirai.blogspot.com/2014/09/award-thanks.html

    ReplyDelete
  17. ஆஹா... கண்ணையும் கருத்தையும் கன்னித் தமிழால் இனிப்பேற்றி விட்டது தங்கள் தமிழ் விடு தூது !

    எடுத்தாண்ட எல்லாப் பாடல்களுமே நினைவடியில் கிடந்த ரத்தினங்கள்! அதிலும் சத்திமுத்தப் புலவர் தன் வாழ்வையே ஒரு பாடலில் அடக்கி, அதனுள் யாப்பின் சுவை பலவும் கூட்டி எழுதிய திறத்தினுள் சுழல்கிறது மனசு, தேன் சுமந்த மலர் மொய்க்கும் வண்டாக!

    ReplyDelete
  18. வணக்கம் சகோதரி
    உங்கள் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டவன் என்ற முறையில் ஒரு விருதினைத் தங்களோடு பகிர்ந்திருக்கிறேன். அன்போடு பார்க்க அழைக்கிறேன் http://pandianpandi.blogspot.com/2014/09/the-versatile-blogger-

    ReplyDelete
  19. அழகு நடை அற்புதப் பாடல்கள் சொல்லிக் கொள்ளாமலே மன அரங்கில் மஞ்சமிடும் பதிவு. அழகாய் இரசித்தேன். மிக்க நன்றி

    ReplyDelete
  20. ஆகா .படிக்க படிக்க மனம் பேரானந்தம் கொள்கிறது. என் தமிழ் என் தமிழ் என்று இறுமாப்பு கொள்கிறது.
    அழகியதோர் இலக்கிய சோலையில் நுழைந்த மகிழ்ச்சி.நன்றி மஞ்சரி .

    ReplyDelete
  21. //பொருளீட்டும் பொருட்டு கடல்கடந்துவந்து அந்நிய மண்ணை மிதித்தபோது அகம் கொண்ட ஆற்றாமையோடு அலைபாய்ந்த என் மனத்தைத் தேற்றியது நீதான்.// மனசு வலித்தது

    தொடருங்கள் சகோதரி

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.