10 August 2024

நீர் அல்ல, குருதி; நிலம் அல்ல, உயிர்!

 

பழங்குடிப் பெண்மணி
 (படம் உதவி Pixabay)

நேற்று ஆகஸ்டு 9-ஆம் நாள் சர்வதேசப் பழங்குடி மக்கள் தினம் கொண்டாடப்பட்டது. 1994-ஆம் ஆண்டு முதல் இந்நாள் சர்வதேசப் பழங்குடி தினமாக ஐ.நா.சபையால் அறிவிக்கப்பட்டு, கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலகெங்கும் உள்ள பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமைகளை மேம்படுத்துவதும், பாதுகாப்பதும், அவற்றைக் குறித்த விழிப்புணர்வை உண்டாக்குவதும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த பழங்குடியின மக்களின் செயலாக்கங்களையும் சாதனைகளையும் அங்கீகரிப்பதும் இந்நாளின் முக்கிய நோக்கமாகும். 

ஒரு நிலத்தின் அல்லது மண்ணின் ஆதிகுடிகளான பழங்குடி மக்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் வாழ்வியல் அம்சங்களை அழியாமல் பாதுகாப்பதும் அவர்களுடைய உரிமைகளையும் சலுகைகளையும் அவர்கள் தடையின்றிப் பெற வழிவகுப்பதும், அவர்களுடைய கல்வி, பொருளாதாரம், போக்குவரத்து, உடல்நலம் மற்றும் சமூகநலம் சார்ந்த வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதும் நம் கடமையாகும்.

கனலியின் அமெரிக்கச் சிறப்பிதழில் (2021) என் மொழிபெயர்ப்பில் வெளியான கடிதத்தை, சர்வதேசப் பழங்குடி தினத்தை முன்னிட்டு இங்கு பதிகிறேன்.

தலைவர் சியாட்டிலிடமிருந்து 

அதிபர் பியர்ஸ்க்கு எழுதப்பட்ட கடிதம், 1885

1851-ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட உடன்படிக்கை ஒன்றினை வாஷிங்டனின் ப்யூஜெட் சவுண்ட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்த சுக்வாமிஷ் மற்றும் பிற செவ்விந்தியப் பழங்குடியினர் எதிர்கொள்ள நேரிட்டது. உடன்படிக்கையின் ஒரு பகுதி, இரண்டு மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பை 150,000 டாலர்களுக்கு விற்க அவர்களை நிர்பந்தித்தது. 

தலைவர் சியாட்டில்
(படம் உதவி Wikipedia) 

செவ்விந்தியப் பழங்குடிகளுள் ஒன்றான சுக்வாமிஷ் பழங்குடியின் தலைவர் சியாட்டில், ஆன்மீக நம்பிக்கையும் தெளிந்த சிந்தனையும் கொண்டவராக இருந்தார். அவர் சுக்வாமிஷ் மொழியில் ஆற்றிய உரைகளை நேரில் கேட்டுக் குறிப்பெடுத்திருந்த கவிஞரும் மருத்துவருமான ஹென்றி ஸ்மித் பிற்காலத்தில் அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அக்கடிதம் சற்றே கவித்துவமாக இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், 'அமெரிக்கப் பூர்வகுடி உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களின் மதிப்புணர்த்தும் சக்திவாய்ந்த, கசப்பான வேண்டுகோள்' என்று பாராட்டப்படுகிறது. 

செவ்விந்தியர் (படம் உதவி Pixabay)


இதோ அந்தக் கடிதம்:

அந்த ஆகாயத்தை, இந்த நிலத்தை, அதன் வெதுவெதுப்பை நீங்கள் எப்படி விற்கவோ வாங்கவோ முடியும்? இந்த யோசனையே எங்களுக்கு விநோதமாக இருக்கிறது. காற்றின் புத்துணர்வையும் நீரின் பளபளப்பையும் நம்மால் சொந்தம் கொண்டாட முடியாதபோது அவற்றை வாங்க மட்டும் உங்களால் எப்படி முடியும்?

இந்த நிலத்தின் ஒவ்வொரு பகுதியும் எங்கள் மக்களுக்குப் புனிதமானவை. ஒளிரும் ஒவ்வொரு பைன் மர இலையும், ஒவ்வொரு மணற் கடற்கரையும், அடர்வனத்தின் ஒவ்வொரு பனித்திவலையும், ஒவ்வொரு பொட்டல்வெளியும், ரீங்கரிக்கும் ஒவ்வொரு பூச்சியும் எங்கள் மக்களின் நினைவிலும் அனுபவத்திலும் புனிதமானவை. 

மரங்கள் தம்முள் நீரைக் கடத்தவில்லை, செவ்விந்தியர்களின் நினைவுகளைக் கடத்துகின்றன.

இறந்துபோன வெள்ளையர்கள், விண்ணுலகம் சென்ற பின், தாங்கள் பிறந்த நாட்டை மறந்துவிடுகிறார்கள். ஆனால் இறந்துபோன எங்கள் முன்னோர்கள் ஒருபோதும் இந்த அழகிய பூமியை மறப்பதே இல்லை. ஏனெனில் இதுதான் செவ்விந்தியரின் அன்னை. நாங்கள் இந்தப் பூமியின் அங்கம், இந்தப் பூமி எங்களின் அங்கம்.

நறுமணமிக்க மலர்கள், எங்கள் சகோதரிகள்; மான், குதிரை, பெருங்கழுகு, இவையெல்லாம் எங்கள் சகோதரர்கள். பாறை முகடுகள், பச்சைப் புல்வெளிகளின் ஈரம், மட்டக்குதிரையின் உடற்சூடு, மனிதன் - யாவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை.

வாஷிங்டனில் உள்ள பெருந்தலைவர் எங்கள் நிலத்தை வாங்க விரும்புவதாகச் சொல்கிறார், எங்களின் ஒரு பகுதியைக் கேட்கிறார். எங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்கித் தருவதாகவும் அதில் நாங்கள் வசதியாக எங்கள் விருப்பம் போல வாழலாம் என்றும் பெருந்தலைவர் சொல்கிறார். அவர் எங்கள் தகப்பனைப் போன்றவர், நாங்கள் அவரது பிள்ளைகளைப் போன்றவர்கள். ஆகையால் நீங்கள் எங்கள் நிலத்தை வாங்குவது குறித்து பரிசீலிப்போம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் இந்த நிலம் எங்களுக்குப் புனிதமானது. 

ஓடைகளிலும் நதிகளிலும் மினுமினுத்துக்கொண்டு ஓடுவது வெறும் நீர் அல்ல, எங்கள் முன்னோர்களின் குருதி.

நாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், இது புனிதமானது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். உங்கள் குழந்தைகளுக்கும் இது புனிதமானது என்பதைச் சொல்லித்தரவேண்டும். ஏரிகளின் தெளிந்த நீரில் தோன்றும் அமானுஷ்யப் பிரதிபலிப்புகள் ஒவ்வொன்றும் எங்கள் மக்களின் வாழ்க்கையில் இடம்பெற்ற நிகழ்வுகளையும் நினைவுகளையும் சொல்லும். நீரின் சலசலப்பு என் பாட்டனின் குரல்.

நதிகள் எங்கள் சகோதரர்கள், அவை எங்கள் தாகத்தைத் தணிக்கின்றன. எங்களது படகுகளை ஏந்திச் செல்கின்றன, எங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கின்றன. நாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், நதிகள் எங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் சகோதரர்கள் என்பதையும், ஒரு சகோதரனிடம் காட்டும் பரிவைப் போன்று நதிகளிடமும் பரிவு காட்ட வேண்டுமென்பதையும் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும், உங்கள் குழந்தைகளுக்கும் அதைச் சொல்லித்தரவேண்டும்.

வெள்ளையர்களால் எங்கள் வாழ்க்கைமுறையைப் புரிந்துகொள்ள முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களைப் பொறுத்தவரை, ஒரு நிலப்பகுதியைப் போலத்தான் இன்னொன்றும். ஏனென்றால் அவர்கள் இரவுநேரத்தில் வந்து அவர்களுக்குத் தேவையானவற்றை நிலத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் அந்நியர்கள். இந்த நிலம் அவர்களுக்கு சகோதரன் அல்ல. மாறாக, அவர்களுடைய எதிரி. நிலத்தை வெற்றிகொண்ட பிறகு அவர்கள் அங்கிருந்து போய்விடுகிறார்கள்.

ஒரு வெள்ளை மனிதன், தான் விட்டுச் செல்லும் அவனுடைய தந்தையின் கல்லறையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவனுடைய குழந்தைகளிடமிருந்து இந்த பூமியைப் பறிக்கிறான், அது குறித்தும் அவன் அக்கறை கொள்வதில்லை. அவனது தந்தையின் கல்லறை, அவனுடைய குழந்தைகளின் பிறப்புரிமை எல்லாமும் மறக்கப்பட்டுவிடுகின்றன. அவன் தன் தாய், இந்த பூமி, தன் சகோதரன், அந்த வானம் எல்லாவற்றையுமே ஆடுகளுக்கும் அலங்கார மணிகளுக்கும் நிகரான, வாங்கவும் பறிக்கவும் விற்கவும் கூடிய பொருட்களைப் போலவே நடத்துகிறான். அவனுடைய ஆறாப்பசி, இந்த பூமியை விழுங்கி, வெற்றுப் பாலையை மாத்திரமே விட்டுவைக்கப்போகிறது.

எனக்குத் தெரியவில்லை. எங்கள் வழிமுறைகள் உங்கள் வழிமுறைகளிலிருந்து மாறுபட்டவை. உங்கள் நகரத்துக் காட்சிகள் செவ்விந்தியனின் கண்களை ரணமாக்குகின்றன. செவ்விந்தியன் ஒரு காட்டுவாசி என்பதால், ஒருவேளை அவனுக்கு அது புரியாமல் இருக்கலாம்.

வெள்ளையர்களின் நகரத்தில் அமைதியான இடம் என்று எதுவும் இல்லை. வசந்தகாலத்தில் துளிர்விடும் இலையின் ஓசையோ அல்லது பூச்சிகளின் இறக்கைகள் படபடக்கும் சத்தமோ கேட்க ஒரு இடமும் இல்லை. நானொரு காட்டுவாசி என்பதால் ஒருவேளை எனக்கு அது புரியாமல் இருக்கலாம்.  இரைச்சல்கள் எங்கள் காதுகளை இம்சிக்கின்றன. 

தனித்து ஒலிக்கும் இராப்பக்கி பறவையின் கதறலையோ, குளத்தோரத் தவளைகளின் கூச்சலையோ ஒருவனால் கேட்க இயலவில்லை எனில் வாழ்க்கையில் பிறகு வேறு என்னதான் இருக்கிறது

நானொரு செவ்விந்தியன் என்பதால் எனக்கு அது புரியவில்லை. குளத்து நீரின் மேற்பரப்பை உரசிப்போகும் காற்றின் சன்ன ஒலியையும், நண்பகல் மழை கழுவிய அல்லது பைன் மர வாசம் சுமந்த அக்காற்றின் மணத்தையுமே ஒரு செவ்விந்தியன் விரும்புகிறான்.

செவ்விந்தியர்களுக்கு காற்று ஒரு அரும்பொருள். ஏனெனில் அனைத்துப் பொருட்களுக்கும் அதுதான் ஒரே மூச்சுக்காற்று. விலங்கு, மரம், மனிதன் – அனைவரும் ஒரே காற்றைத்தான் பகிர்ந்து சுவாசிக்கிறார்கள். வெள்ளையர்களோ, தாங்கள் சுவாசிக்கும் காற்றின்பால் கவனம் செலுத்துவதாகக்கூடத் தெரியவில்லை. வெகுகாலமாக மரணப்படுக்கையில் கிடக்கும் ஒருவனுக்கு, வீச்சமும் வாடையும் தெரியாத அளவுக்கு நுகர்திறன் மரத்துப்போய்விடும்.

ஆனால், நாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், காற்று எங்களது அரும்பொருள் என்பதையும், காற்று தன் ஆன்மாவை, அது வாழ்விக்கும் அனைத்து உயிர்களுக்கும் பகிர்ந்தளிக்கிறது என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். 

இந்தக் காற்றுதான் என் பாட்டனாருக்கு முதல் மூச்சைக் கொடுத்தது, அதுவேதான் அவரது கடைசி மூச்சைப் பெற்றுக்கொண்டது.

மேலும் நாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், புல்வெளிப் பூக்களின் நறுமணம் தாங்கிய காற்றை, வெள்ளையர்களும் அனுபவிக்கும் ஒரு தலமாக, தனியாகவும் புனிதமாகவும் அதை நீங்கள் பேணவேண்டும்.

எனவே எங்கள் நிலத்தை வாங்குவது குறித்த உங்கள் முனைவை நாங்கள் பரிசீலிப்போம். அதை ஏற்றுக்கொள்வதென நாங்கள் முடிவு செய்தால் நான் ஒரு நிபந்தனை விதிப்பேன்: வெள்ளையர்கள் இந்த நிலத்தின் உயிரினங்களை தங்கள் சகோதரர்களாக நடத்தவேண்டும். 

நானொரு காட்டுவாசி. எனக்கு வேறெந்த வழியும் தெரியவில்லை.

ஓடும் ரயிலிலிருந்து வெள்ளையர்கள் சுட்டுக் கொன்றதால் புல்வெளிகளில் அழுகிக்கிடக்கும் ஆயிரமாயிரம் எருமைகளை நான் பார்த்திருக்கிறேன். நானொரு காட்டுவாசி. எனக்குப் புரியவில்லை, நாங்கள் உயிரோடு இருப்பதற்காக மட்டுமே கொல்லும் எருமையை விடவும் புகைவிடும் அந்த இரும்புக் குதிரை எந்த விதத்தில் முக்கியமானதாக இருக்க முடியும்?

விலங்குகள் இல்லாவிடில் மனிதன் ஏது? எல்லா விலங்குகளும் அழிந்துவிட்டால், மனிதனும் ஆன்மாவின் பெருந்தனிமையில் அல்லாடி மரித்துப்போவான். விலங்குகளுக்கு என்ன நேர்கிறதோ, அதுதான் விரைவில் மனிதனுக்கும் நேரும். எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

உங்கள் குழந்தைகளிடம், அவர்களுடைய பாதங்களுக்கு அடியிலிருக்கும் மண், அவர்களுடைய பாட்டனார்களின் சாம்பல் என்பதை நீங்கள் சொல்லித்தர வேண்டும். அப்போதுதான் அவர்கள் நிலத்தை மதிப்பார்கள். வாழ்ந்துசென்ற நம் சுற்றத்தாரால்தான் இந்த பூமி வளமாக இருக்கிறது என்பதை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள்.

இந்த பூமி நமது தாய் என்று நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தருவதைப் போலவே, நீங்களும் உங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தாருங்கள். பூமிக்கு என்னவெல்லாம் நேர்கிறதோ, அது எல்லாமும் பூமியின் பிள்ளைகளுக்கும் நேர்கிறது. மனிதர்கள் தரை மீது துப்புகிறார்கள் எனில், அவர்கள் தங்கள் மீதே துப்பிக் கொள்கிறார்கள்.

எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் இதுதான்: இந்த பூமி, மனிதனுக்குச் சொந்தம் இல்லை, மனிதன்தான் பூமிக்குச் சொந்தம். 

குடும்பத்தைப் பிணைக்கும் இரத்த பந்தம் போன்றுதான் எல்லாப் பொருட்களும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. வாழ்க்கைப் பின்னலை மனிதன் நெய்வதில்லை. அவன், அப்பின்னலின் ஒற்றை இழை மட்டுமே. அப்பின்னலுக்கு என்னவெல்லாம் அவன் செய்கிறானோ, அதையெல்லாம் அவன் தனக்கே செய்கிறான்.

ஒரு நண்பனைப் போல இறங்கி வந்து தன்னோடு பேசக்கூடிய கடவுளைக் கொண்டிருக்கும், வெள்ளை மனிதனும் கூட, இந்தப் பொதுவிதியிலிருந்து விலக்கு பெற இயலாது.

என்ன இருந்தாலும் நாம் அனைவரும் உடன்பிறந்தவர்களே. எங்கள் கடவுளும் அதே கடவுள்தான் என்று ஒருநாள் வெள்ளையர்கள் கண்டுகொள்ளக்கூடும் என்பதை நாங்கள் அறிவோம். எங்கள் நிலத்தை நீங்கள் சொந்தமாக்க விரும்புவதைப் போலவே எங்கள் கடவுளையும் சொந்தமாக்க முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது உங்களால் முடியாது. காரணம், அவர் மனிதர்களின் கடவுள். அவருடைய கருணை சிவப்பு மனிதனுக்கும் வெள்ளை மனிதனுக்கும் சமமானது. அவருக்கு இந்த பூமி மிக மதிப்புவாய்ந்த ஒன்று. இந்தப் பூமிக்குக் கேடு விளைவிப்பது என்பது படைத்தவனை அவமதிப்பது போன்றது.

வெள்ளையர்களும் போய்விடுவார்கள். மற்றெல்லாப் பழங்குடியினரையும் விட சீக்கிரமாகவே அது நடக்கலாம். உங்கள் படுக்கையைத் தொடர்ந்து நீங்கள் அசுத்தப்படுத்திக்கொண்டே இருந்தால், ஒருநாள், உங்கள் மூத்திர வாடையே உங்களை மூச்சுத் திணறவைக்கும். 

ஆனால் ஏதோ ஒரு சிறப்புக் காரணத்தை முன்னிட்டு, இந்த நிலத்தின் மீதும், இந்த நிலத்தில் வாழும் செவ்விந்தியர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரத்தைத் தந்த, இந்தப் பூமிக்கு உங்களைக் கொண்டுவந்த கடவுளின் வல்லமையால், உங்கள் அழிவின்போதும் நீங்கள் பிரகாசிப்பீர்கள்.

எல்லா எருமைகளும் கொல்லப்பட்ட பிறகு, காட்டுக் குதிரைகள் யாவும் பழக்கப்பட்ட பிறகு, காடுகளின் ரகசிய மூலை முடுக்கெல்லாம் மனித வாடையால் நிரம்பிய பிறகு, பழங்குன்றுகளெல்லாம் தந்திக் கம்பிகளின் பொருட்டு சிதைக்கப்பட்ட பிறகு, வரவிருக்கும் ஊழ்வினை என்னவாக இருக்கும் என்பது எங்களுக்கு மர்மமாக உள்ளது.

&&&&&

28 July 2024

உலக இயற்கைப் பாதுகாப்பு தினம்

  

1. கடற்கரையோரம் இரைதேடும் கடற்புறா (Silver gull) 

இன்று ஜூலை 28-ஆம் நாள். உலக இயற்கைப் பாதுகாப்பு தினம் (World Nature Conservation Day). இன்றைய தினம்தான் ஆஸ்திரேலியாவில் தேசிய மரங்கள் தினமாகவும் (National Tree Day) கொண்டாடப்படுகிறது. 

2024-உலக இயற்கைப் பாதுகாப்பு தினத்தின் மையக்கரு இதுதான்: இயற்கைப் பாதுகாப்பில் நவீனத் தொழில்நுட்பயைப் பயன்படுத்தி, மனிதர்களையும் இயற்கையையும் இணைத்தல்.

இயற்கையைப் பாதுகாப்பது நம் கடமை அல்லவா? அதற்கொரு தினம் தேவையா? இயற்கையை அதன்போக்கில் இருக்கவிட்டாலே எந்தச் சேதமும் இன்றி சிறப்பும் செழுமையுமாக இருக்குமே! என்றெல்லாம் எண்ணத் தோன்றும். ஆனால் நாம் அதை அப்படி இருக்கவிட்டால்தானே? ஏற்கனவே காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல், கரியமில வாயு உமிழ்வு, பனிப்பாறைகள் உருகுதல், சுற்றுச்சூழல் சீர்கேடு, காடழிப்பு, அழிந்துவரும் உயிரினங்கள், இயற்கைச் சமன் குலைவு என பூமியின் இயல்புத்தன்மையை சீர்குலைக்கும் பல ஆபத்தான காரணிகளுக்கு மனிதர்களாகிய நாம் காரணமாக இருக்கிறோம்.

பூமிப்பந்துக்கும் அதைச் சார்ந்து வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவித்த, விளைவித்துக் கொண்டிருக்கும் நமக்கே அந்த ஆபத்திலிருந்து பூமியை, அதன் இயல்பை, இயற்கையைப் பாதுகாக்கும் பொறுப்பு இருக்கிறது. நம்முடைய காலத்துக்குப் பிறகு இந்தப் பூமியை அதன் இயல்புத்தன்மை கெடாமல் நம்முடைய வருங்கால சந்ததிகளுக்கு ஒப்படைக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. மாசில்லாத சூழல், சுத்தமான காற்று, நீர்வளம், நிலவளம், காட்டுவளம், பல்லுயிர்வளம் என அனைத்து வளங்களையும் எவ்விதச் சேதமுமின்றி அவர்களிடம் கையளிக்கவேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.  

அதனால்தான் ‘உலக இயற்கைப் பாதுகாப்பு தினம்’ என்று ஒரு தினத்தை அடையாளப்படுத்தி, அதன்மூலம் இயற்கையைப் பற்றிய புரிதலையும் இயற்கை வளங்களைச் சிதைக்காமல் பாதுகாக்கவேண்டிய அவசியத்தையும், அவற்றின்மீதான நம் பொறுப்பையும் நாமும் உணர்ந்து மற்றவர்களுக்கும் உணர்த்தவும் வலியுறுத்தவும் வேண்டியிருக்கிறது.

2. மழைக்காடு

இன்றைய தினம் ஆஸ்திரேலியாவின் ‘தேசிய மரங்கள் தினமாகவும்’ கொண்டாடப்படுவது தற்செயல் ஒற்றுமை. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை இத்தினம் கொண்டாடப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் பூர்வீக மரங்களைப் பாதுகாக்கும் முயற்சியாகவும், அவற்றைக் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் முக்கியமாக குழந்தைகளிடம் உண்டாக்கும் முகமாகவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. வீடுகளிலும் வளாகங்களிலும் புதிய மரக்கன்றுகளை நடுதல், ஓவியம், நடனம் மற்றும் ஆவணப்படங்கள் மூலம் பூர்வீக மரங்கள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுதல், தேசியப் பூங்கா மற்றும் வனப்பகுதிகளில் இயற்கை சார்ந்த நடை, உள்ளூர் பூங்காக்களில் உள்ள பூர்வீக மரங்கள், அவற்றின் பயன்கள் மற்றும் அவற்றைச் சார்ந்து வாழும் உயிரினங்கள் குறித்து அறிந்துகொள்ளுதல் என பல வகையிலும் செயல்படுத்தப்படுகிறது.

ஆஸ்திரேலிய தேசிய மரங்கள் தினமான இன்று ஆஸ்திரேலியாவின் பூர்வீக மரங்கள் மற்றும் அவற்றைச் சார்ந்து வாழும் உயிரினங்கள் சிலவற்றின் படங்களைப் பகிர்ந்து மகிழ்கிறேன். 

3. தங்க வாட்டில் மரம்

4. வாட்டில் காய்களைக் கொறிக்கும் Galah பறவைகள்
5. வாட்டில் மரக் காய்களைத் தேடிவந்த காக்கட்டூகள்

6. மேலலூக்கா மரங்கள்

7. மேலலூக்கா மரத்தில் கூடு கட்டி வசிக்கும் பாம்புத்தாரா

8. மேலலூக்கா மரத்தில் ஓய்வெடுக்கும் சிரிக்கும் குக்கபரா

9. யூகலிப்டஸ் மரம்

10. யூகலிப்டஸ் மரங்கள்



11. யூகலிப்டஸ் மரத்தில் வசிக்கும் பழந்தின்னி வவ்வால்கள்

12. யூகலிப்டஸ் பூக்களில் தேன்குடிக்க வந்த ரெயின்போ லாரிகீட்கள்

13. யூகலிப்டஸ் மரப்பொந்தில் முட்டையிட்டுள்ள ரெயின்போ லாரிகீட்
14. யூகலிப்டஸ் மரத்தில் கூடு கட்டி அடைகாக்கும் ஆஸ்திரேலிய மேக்பை 
15. யூகலிப்டஸ் மரத்தின் மீது கட்டப்பட்டுள்ள கரையான் புற்று

16. மகடாமியா மரம்

17. மகடாமியா மரத்தில் வசிக்கும் ஆற்றல்மிகு ஆந்தை

18. வுல்லமி பைன் மரம்

19. குவீன்ஸ்லாந்து பாட்டில் மரம்

20. ரெட் சில்க்கி ஓக் மரம்

21. மார்ட்டன் பே ஆலமரம் (1)

22. மார்ட்டன் பே ஆலமரம் (2)

23. ஆலம்பழம் தின்னும் கந்தகக்கொண்டை காக்கட்டூ

24. மலைச்சவுக்கு மரம்

25. மலைச்சவுக்கு பூக்களுடன் 


26. இலவாரா தீச்சுவாலை மரம் (1)

27. இலவாரா தீச்சுவாலை மரம் (2)

28. நார்ஃபோக் தீவு பைன் மரங்கள்

29. சவுக்கு மரத்தில் வசிக்கும் பழந்தின்னி வவ்வால்கள்


‘பள்ளிக்கூட மரங்கள் தினம்’ ஜூலை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதன்படி இவ்வாண்டு கடந்த வெள்ளியன்று (ஜூலை 26) கொண்டாடப்பட்டது. இத்தினத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு மரங்களின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டு, மரக்கன்றுகளை உருவாக்குவது, அவற்றை நடுவது, பராமரிப்பது, மரங்களை வகைப்படுத்தி அறிவது போன்ற பல்வேறு செயல்பாடுகளின் மூலம் அவர்களுடைய பங்கும் கடமையும் உணர்த்தப்படுகிறது. 

30. ஆலமரத்தின் அண்டைவேரில் தலைசாய்த்திருக்கும் குழந்தை

இயற்கையை நேசிக்கவும் இயற்கையோடு இயைந்து வாழவும்  அனுபவத்தின் வாயிலாகவே குழந்தைகள் அறிந்துகொள்ள இது போன்ற தினங்களும் கொண்டாட்டங்களும் நல்லதொரு வாய்ப்பாக அமைகின்றன. 

******

23 July 2024

அசத்தும் அழகு ஆர்க்கிட் மலர்கள் -1 (பூக்கள் அறிவோம் 111-114)

 ஆர்க்கிட் மலர்கள் (Orchids) 

உலகின் மிகத் தொன்மையான தாவரங்களுள் ஆர்க்கிட் தாவரமும் ஒன்று. ஆர்க்கிட் தாவரங்கள் நிலத்திலும் வளரும், மரத்திலும் வளரும். பாறை இடுக்கிலும் வளரும். ஒரு ஆய்வுக்கட்டுரையே சமர்ப்பிக்கும் அளவுக்கு அதிசயத்தன்மைகள் நிறைந்த ஆர்க்கிட் மலர்க்குடும்பத்துக்கு கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலான வாழ்வியல் வரலாறு இப்புவியில் உண்டு.  அது கண்டறியப்பட்ட விதமே ஆச்சர்யமானது. 

1. விதவிதமான ஆர்க்கிட் மலர்கள் 

சுமார் 15 மில்லியனுக்கு முந்தைய ஆர்க்கிட் மகரந்தம் சுமந்த தேனீயின் புதைபடிமத்தை ஆய்வு செய்ததன் மூலம் ஆர்க்கிட் தாவர இனம் சுமார் நூறு மில்லியன் ஆண்டுகள் தொன்மையானது என்று அறியப்பட்டுள்ளது. மீப்பெரு கண்டமாக கண்டங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து இருந்த காலத்திலேயே ஆர்க்கிட் தாவர இனம் உருவாகியிருக்கலாம் என்றும் அதனால்தான் நீக்கமற அனைத்துக் கண்டங்களிலும் ஆர்க்கிட் தாவரங்கள் காணப்படுகின்றன என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.  

ஆர்க்கிட் பூக்கள் அழகு மட்டுமல்ல, செழுமை, உறுதி மற்றும் கம்பீரத்தின் அடையாளமாக விளங்குகின்றன. அன்பு, காதல் உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளின் தீவிர வெளிப்பாட்டுக்கு ஆர்க்கிட் பூக்கள் பரிசாக அளிக்கப்படுகின்றன. 

அண்டார்டிகா தவிர்த்து உலகின் எந்தப் பகுதியிலும் வாழும் தன்மையிலும், இரண்டு மி.மீ. முதல் இரண்டரை மீ. வரையிலுமாக பூக்களின் அளவுகளிலும்சில மாதங்கள் முதல் நூறு வருடங்கள் வரையிலான செடிகளின் ஆயுட்காலத்திலும்சில மணி நேரங்கள் முதல் ஆறு மாதங்கள் வரையிலான பூக்களின் வாடா இயல்பிலும்... என பல்லாயிரக்கணக்கான வகைகள் ஆர்க்கிட் குடும்பத்தில் இயற்கை மற்றும் செயற்கை வழிகளில் உருவாகியுள்ளன. இப்போதும் கூட வருடத்துக்கு நூறு புதிய கலப்பின வகைகளாவது உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நாம் இனிப்புகளில் சுவையும் மணமும் கூட்டப் பயன்படுத்தும் வெனிலா எசன்ஸ் தயாரிக்கப் பயன்படும் வெனிலா மலரும் ஆர்க்கிட் மலரினம்தான். Orchid என்பதன் மூலவார்த்தையான orkhis கிரேக்க மொழியில் ஆணின் விதைப்பையைக் குறிக்கிறதாம். இதன் வேர்க்கிழங்குகளின் வடிவம் விதைப்பையை ஒத்திருப்பதால் இப்பெயர் இடப்பட்டுள்ளது. ஆர்க்கிட் செடியின் ஒரே ஒரு விதைநெற்றுக்குள் கோடிக்கணக்கான விதைகள் இருந்தாலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சில மட்டுமே அடுத்த தலைமுறையை உருவாக்கும் வீரியமுள்ளவை.  இந்த விதைகளை நுண்ணோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும். அந்த அளவுக்கு மிகவும் நுட்பமானவை. 

பூக்கள் அறிவோம் தொடரின் தொடர்ச்சியாக, இப்பதிவில் அசத்தும் அழகு ஆர்க்கிட் மலர்கள் பற்றி அறிந்துகொள்வோமா? இப்பதிவில் இடம்பெற்றுள்ள படங்கள் அனைத்தும் சிட்னி & வுல்லங்காங் தாவரவியல் பூங்காக்களில் 2018 முதல் தற்போது வரை அவ்வப்போது என்னால் எடுக்கப்பட்டவை. 


111. லேடீஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட்


குட்டிக் குழந்தைகளின் பாதணி போல அழகான பையுடன் வசீகரிக்கும் இந்த வகை ஆர்க்கிட் பூக்களுக்கு "Ladies slipper orchid" என்று பெயர்இவை பெரும்பாலும் உள்ளரங்க அலங்காரச் செடியாக வளர்க்கப்படுகின்றன. தேனெடுக்க வரும் பூச்சிகள் இந்தப் பைக்குள் விழுந்து எழுந்து தடுமாறி வெளியேறுவதற்குள் மகரந்தப் பொடிகளைத் தந்தும் பெற்றும் மகரந்தச் சேர்க்கையை வெற்றிகரமாக்கிவிடுகின்றன.

2. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (1)

3. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (2)

4. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (3)

5. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (4)

6. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (5)

7. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (6)

8. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (7)

லேடீஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் இனத்தில் ஐந்து பெரும் பிரிவுகள் உள்ளன. படத்திலிருப்பதுவீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட்இது paphiopedilum பேரினத்தைச் சேர்ந்தது. வீனஸுக்கு நிகரான காதற்கடவுள் அப்ரோடிட் அவதரித்த இடத்தின் பெயர் paphos என்பதாகும். கிரேக்க மொழியில் pedilon  என்றால் பாதணி என்று பொருள். இரண்டையும் சேர்த்து இவ்வழகிய பூக்களுக்கு paphiopedilum என்ற பெயர் இடப்பட்டுள்ளது. 

9. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (8)

பொதுவாக ஆர்க்கிட் பூக்களில் ஒரே ஒரு மகரந்தப்பை தான் இருக்கும். ஆனால் லேடீஸ் ஸ்லிப்பர் வகை ஆர்க்கிட் பூக்களில் இரண்டு மகரந்தப்பைகள் இருக்கும். இவற்றின் பூர்வீகம் இந்தியாசீனாதென்கிழக்காசிய நாடுகள் போன்றவை. இவற்றின் விநோதமான அமைப்பால் கவரப்பட்டுதோட்ட ஆர்வலர்களால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.


112. சிட்னி ராக் ஆர்க்கிட்

ஆஸ்திரேலிய ஆர்க்கிட் வகையான இது, சிட்னி சார்ந்த பகுதிகளில் காணப்படுவதாலும் உயரமான மலைகளிலும் பாறைப்பகுதிகளிலும் காணப்படுவதாலும் இது 'சிட்னி ராக் ஆர்க்கிட்' என்று குறிப்பிடப்படுகிறது. இதற்கு cane orchid, rock lily என்ற பெயர்களும் உண்டு. 

10. சிட்னி ராக் ஆர்க்கிட் (1)

11. சிட்னி ராக் ஆர்க்கிட் (2)

12. சிட்னி ராக் ஆர்க்கிட் (3)

13. சிட்னி ராக் ஆர்க்கிட் (4)

14. சிட்னி ராக் ஆர்க்கிட் (5)

15. சிட்னி ராக் ஆர்க்கிட் (6)

இதன் இலைகள் பன்னிரண்டு வருடம் வரை வாடாதவை. ஒரு பூந்தண்டில் சுமார் இருநூறு பூக்கள் வரை பூக்கும். முதலில் வெள்ளை நிறத்தில் காணப்படும் பூக்கள் மெல்ல மெல்ல மஞ்சள் நிறத்துக்கு மாறும். இது Dendrobium பேரினத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் Dendrobium speciosum என்பதாகும். Speciosum என்றால் லத்தீனில் 'வசீகரமான' என்று பொருள். இவை தொங்குதொட்டியில் வளர்க்கவும் தோதானவை. 

113. காக்‌ஷெல் ஆர்க்கிட்

பார்ப்பதற்கு வாய் திறந்திருக்கும் சிப்பி போன்றிருப்பதால் cockleshell orchid, clamshell orchid என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது. Prosthechea பேரினத்தைச் சேர்ந்தது. இப்பேரினத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன. படத்தில் இருப்பது Prosthechea cochleata மலராகும்.

மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த Belize நாட்டின் தேசிய மலர் என்ற சிறப்பு இதற்கு உண்டு. அங்கு இதன் பெயர் கருப்பு ஆர்க்கிட்.

16. காக்‌ஷெல் ஆர்க்கிட் (1)

17. காக்‌ஷெல் ஆர்க்கிட் (2)

18. காக்‌ஷெல் ஆர்க்கிட் (3)

19. காக்‌ஷெல் ஆர்க்கிட் (4)

நறுமணமிக்க இந்த வகை ஆர்கிட் மலர்கள் மாதக்கணக்காக வாடாதவை என்பதோடு எளிதில் பூச்சித்தாக்குதலுக்கு ஆளாகாதவை என்ற சிறப்பும் உடையவை. பூங்கொத்தின் பூக்கள் ஒரே சமயத்தில் பூக்காமல் ஒவ்வொன்றாகப் பூப்பதால் வருடம் முழுவதும் செடி பூக்களுடனேயே காட்சியளிக்கும். அதனாலேயே உள் அலங்காரச்செடிகளாக விரும்பி வளர்க்கப்படுகின்றன.  

114. போட் ஆர்க்கிட்

Cymbidium பேரினத்தைச் சேர்ந்த இவை ‘Boat orchids’ என்றழைக்கப்படுகின்றன. ‘cymba’ என்றால் லத்தீன் மொழியில் 'படகு' என்று பொருள். இந்தப் பேரினத்தில் சுமார் அறுபது சிற்றினங்கள் உள்ளன. 

பொதுவாக கடைகளில் சரியான தட்பவெப்பத்தில் முறையான பராமரிப்போடு, விற்பனைக்கென பொத்திப் பொத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆர்க்கிட் பூந்தொட்டிகளையும் ஆர்க்கிட் பூங்கொத்துகளையும் பார்த்திருக்கிறேன். ஆனால் இயற்கைச்சூழலில் காற்று, மழை, புழுதி, வெயில், பூச்சித்தாக்குதல் எல்லாவற்றையும் தாங்கி, மண்ணில் வளர்ந்து கொத்துக்கொத்தாய்ப் பூத்துக் காட்சியளிக்கும் ஏராளமான போட் ஆர்க்கிட் செடிகளைப் பூங்காவில் பார்த்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  

20. போட் ஆர்க்கிட் (1)

21. போட் ஆர்க்கிட் (2)

22. போட் ஆர்க்கிட் (3)

23. போட் ஆர்க்கிட் (4)

24. போட் ஆர்க்கிட் (5)

25. போட் ஆர்க்கிட் (6)

26. போட் ஆர்க்கிட் (7)

27. போட் ஆர்க்கிட் (8)

28. போட் ஆர்க்கிட் (9)

29. போட் ஆர்க்கிட் (10)

30. போட் ஆர்க்கிட் (11)

போட் ஆர்க்கிட் செடிகள் ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளைத் தாயகமாகக் கொண்டவை. கொத்துக் கொத்தாகப் பூக்கும் இவற்றின் அழகு காரணமாக உலக நாடுகள் பலவற்றிலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. 

திருமணத்துக்கான மலர் அலங்காரங்களிலும் பூங்கொத்துகளிலும் இவை பெரிதும் இடம்பிடிக்கின்றன. செடியில் இருந்தால் பல வாரங்களுக்கு வாடாமல் அன்றலர்ந்த மலர் போலவே காணப்படுவது இவற்றின் சிறப்பு. உள்ளரங்கத்திலும் வெளியிலும் வளரும் தன்மை இவற்றின் இன்னொரு சிறப்பு.

படகு ஆர்க்கிட் பூக்கள் காதல், அழகு, செழுமை, வனப்பு போன்றவற்றின் குறியீடாகப் பார்க்கப்படுகின்றன. ஆர்க்கிட் மலர்களைப் பரிசாகப் பெறுவதென்பது நற்பேறாகவும் வளமையின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

31. போட் ஆர்க்கிட் (12)

32. போட் ஆர்க்கிட் (13)

33. போட் ஆர்க்கிட் (14)

34. போட் ஆர்க்கிட் (15)

35. போட் ஆர்க்கிட் (16)

அழகு மட்டுமல்லாது, ஆசிய நாடுகளின் கலாச்சாரத்தோடு மிகத் தொன்மையான தொடர்புடைய படகு ஆர்க்கிட், சீனா, ஜப்பான் போன்ற தென்கிழக்காசிய நாடுகளின்  கலாச்சார அடையாளமாகவும், பாரம்பரிய மருத்துவத் தாவரமாகவும் விளங்குகிறது.

******

டான்சிங் லேடி ஆர்க்கிட், பைன் கூம்பு போன்ற ஆர்க்கிட், மோத் ஆர்க்கிட், கைட் ஆர்க்கிட் என இன்னும் சில வித்தியாசமான ஆர்க்கிட் மலர்களைப் பற்றி அடுத்தப் பதிவில் பார்க்கலாம். 
(தொடரும்)