Showing posts with label பேரிடர். Show all posts
Showing posts with label பேரிடர். Show all posts

10 February 2017

கச்சா எண்ணெய்க் கசிவும் வாழ்வாதார நசிவும்










இந்தப் பூவுலகின் அழகைபுவிவாழ் உயிர்களைஇயற்கையின் அதிசயத்தக்கப் படைப்புகளைதனது பொறுப்பின்மையாலும் ஆணவத்தாலும் சுயலாப நோக்காலும் அலங்கோலப்படுத்திவிடுகிறான் மனிதன். இறுதியில் அது அவனுக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என்பதை அறிந்துணரும் அறிவுமின்றி... அலட்சியமாய்க் கடந்துபோகிறான். இயற்கை தன்னால் இயன்றவரை ஒவ்வொரு முறையும் அழிவிலிருந்து தன்னைத்தானே மீட்டெடுத்துக் கொள்கிறது. ஆனால் அந்த சுய மீட்புகள் யாவும் அத்தனை சுலபமாய் அமைவதில்லை. இதோ.. சுற்றுச்சூழலை மாசுபடுத்தியபடி கடல்வாழ் உயிர்கள் மட்டுமல்லாது கடல்சார், நிலம்வாழ், நிலம்சார் உயிர்களின் வாழ்வையும் காவு வாங்கியபடிசென்னைக் கடற்புறத்தில் படிந்துகிடக்கிறது கச்சா எண்ணெய்க் கழிவு.
  

10 December 2015

அன்புதீபம் ஆயுளுக்கும் அணையாதிருக்கட்டும்.



எத்தனை முகங்களின் சாயங்களை
வெளுக்கச்செய்திருக்கிறது இப்பெருமழை..
எத்தனைத் தூய உள்ளங்களைத்
அடையாளங்காட்டியிருக்கிறது இந்த அடைமழை!

கர்ப்பக்கிரகத்திலும் கட்-அவுட்டிலும்
அரசியல்வாதிகளின் காலடிமண்ணிலும்
கடவுளர்களைத் தேடியவர் கண்களுக்கு
மனிதர்களைக் காட்டியிருக்கிறது இம்மாமழை..

பணமே பிரதானமென்று முன்தினம்வரை 
பரபரத்து ஓடிய மனங்களுக்குப்
பணத்தால் ஆவதொன்றுமில்லையென 
பாடம்புகட்டியிருக்கிறது இந்தத் தொடர்மழை..




நில்லென்று மழைநிறுத்தி சுள்ளென்று ஆதவன் ஒளிரட்டும்..
சொல்லொணா துயரிலிருந்து மெல்ல நம் வாழ்வு மலரட்டும்..
அழைக்கும் திக்கெல்லாம் ஓடிக்களைத்த கால்களும்
உதவிக்களைத்த கரங்களும் சற்றே ஓய்வு கொள்ளட்டும்…

நசிந்துகிடக்கும் நிகழ்வாழ்விலிருந்து எதிர்காலம் மீட்கச்செய்யும்
நம்பிக்கையும் ஆன்மபலமும் நம்மைவிட்டு நீங்காதிருக்கட்டும்…
இடர்ப்பாடு களைந்து இயல்புக்குத் திரும்பியபின்னும் நம்
அகத்திலெரியும் அன்புதீபம் ஆயுளுக்கும் அணையாதிருக்கட்டும்.. 

இயற்கையின் மொழியை இப்போதாவது புரிந்துகொள்வோம்..
நீர்வழித்தடத்தை மீண்டும் நீரிடமே ஒப்படைப்போம்..
இனிவரும் சந்ததியேனும் இதுபோல் உணவுக்காய்
இருகையேந்தாவண்ணம் இன்றேயொரு வகைசெய்வோம்.




ஆழி முகந்துவந்த அளவிலா நீரெல்லாம்
ஊழிப்பெருவெள்ளமென ஊரெல்லாம் சூழ
அல்லாடிக்கிடக்கும் நெஞ்சங்களை
அன்பால் தேற்றிடும் அனைவருக்கும் நன்றி

திக்கற்றுத் திகைத்துநிற்கும் மக்களை
பக்குவமாய் மீட்டெடுக்கும் தாயுள்ளங்களுக்கு நன்றி
சாணக்கிய அரசியல்வாதிகளை எதிர்பாராது
சனம் ஒன்றுகூடி நீட்டும் உதவிக்கரங்களுக்கு நன்றி..

மகத்தான உதவிகளை காலத்தே செய்யும்
மனிதம் இன்னும் துறக்கா மனங்களுக்கு நன்றி
சாதிமத இனவேறுபாடுகளை மறந்தும் துறந்தும்
சங்கமித்துதவும் சகோதர உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

இயல்புவாழ்வு மீள நம்மிரு கரங்களையும் தந்துதவுவோம்
இயன்றவழியிலெல்லாம் இடர்ப்பாடு களைய முன்வருவோம்
அன்புவெள்ளத்தின்முன் ஆழிவெள்ளம் காணாமற்போகட்டும்
சின்னாபின்னமான வாழ்வனைத்தும் சீர்பெற்று மீண்டுவரட்டும்.


(படங்கள்: நன்றி இணையம்)