11 July 2018

பூக்கள் அறிவோம் 41-50

41 - அலங்கார வாழை 

pink velvet banana (Musa velutina)





கண்ணைப்பறிக்கும் பிங்க் நிறப்பூக்களின் அழகுக்காகவே வீடுகளில் வளர்க்கப்படும் வாழையினம் இது. பிங்க் வெல்வெட் வாழையின் பூக்கள் மட்டுமல்ல.. பழங்களும் காட்சிக்கு அழகு. ஏன் பழத்தை தின்னக்கூடாதா என்றால் தின்னலாம். ஆனால் பழத்திலிருக்கும் கல் போன்ற விதைகள் பல்லைப் பதம் பார்த்துவிடும். துணிந்தவர்கள் தின்னத் தடையில்லை. 

மற்ற வாழைப்பூக்களைப் போல நிலம் நோக்காது வான்நோக்கி வளரும் இதன் பூ. வாழைக்காய்களின் மேலே ரோமம் படர்ந்தாற்போல் இருப்பதால் ரோம வாழை (hairy banana) என்ற செல்லப்பெயரும் உண்டு. 

பழங்கள் பழுக்க ஆரம்பித்தபின் தோல் நாலாபக்கமும் தானாகவே உரியத்தொடங்கும். எழுபதுக்கும் மேற்பட்ட வாழை வகையுள் ஒன்றான இதன் தாயகம் இந்தியா, பர்மா, பங்களாதேஷ் நாடுகள்தானாம். மற்ற வாழையினம் போலவே பூத்து காய்த்து முடித்தபின் தாய்மரம் மடிந்துவிடும். வேர்க்கிழங்கிலிருந்து புதிய கன்றுகள் உருவாகும். மரம் என்று பொதுவாக குறிப்பிட்டாலும் வாழை மரவகை அல்ல.. புல்வகையைச் சார்ந்ததாகும்.

42 - பாதாம் பூக்கள் 

Almond flowers (prunus dulcis)





பாதாம் என்பதை சிலர் தமிழில் வாதுமை என்கின்றனர். வாதுமை என்றதும், அகன்ற பெரிய இலைகளுடன் சிவப்பு, மஞ்சள் வண்ணங்களில் இனிப்பும் புளிப்பும் துவர்ப்புமான சதைப்பற்றுள்ள பழங்களைத் தின்றுவிட்டு, கொட்டைகளைக் கல்லால் உடைத்து உள்ளிருக்கும் பருப்பைச் சுரண்டித் தின்ற பால்யகாலங்கள் பலருக்கும் மீண்டும் நினைவில் வந்தாடும். ஆனால் அந்த வாதுமை மரம் வேறு.. இது வேறு. இரண்டின் வம்சாவழியும் கூட வேறுவேறு. 

நாம் தின்றதெல்லாம் Indian almond tree (Terminalia catappa)  எனப்படுவது. படத்தில் காண்பது பேலியோ டயட்டில் இன்றியமையாததும், கடையில் நாம் காசு கொடுத்து வாங்குவதுமான பாதாம் பருப்புகளைக் காய்க்கும் மரத்தின் பூக்கள். ஆப்பிள், பீச், பேரி, ப்ளம், செர்ரி, ஆப்ரிகாட், பாதாம் அனைத்து மரங்களும் rosaceae என்னும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. 

அராபிய தீபகற்பத்தையும் மேற்காசிய நாடுகளையும் பூர்வீகமாகக் கொண்ட இது தற்போது உலகநாடுகள் பலவற்றிலும் வணிகநோக்கோடு வளர்க்கப்பட்டு பெருத்த லாபம் தருவதாக உள்ளது. பாதாம் காய்கள் காய்க்கும் என்ற கூடுதல் நன்மையோடு பூக்களின் அழகுக்காகவும் இல்லங்களில் இம்மரம் விரும்பி வளர்க்கப்படுகிறது.

43 - கமேலியா 

Camellia japonica



கமேலியா ஆசிய நாடுகளான இந்தியா, சைனா, ஜப்பான், இந்தோனேஷியா, கொரியா நாடுகளைச் சார்ந்தது. தாவரவியல் நிபுணர் Georg Joseph Kamel அவர்களின் நினைவாக கமேலியா என்ற பெயரிடப்பட்டது. கமேலியாவில் அசல் சுமார் 300 வகையும் கலப்பு சுமார் 3000 வகையும் உள்ளன. சிவப்பு, பிங்க், மஞ்சள், வெள்ளை நிறங்களிலும் நிறக்கலவைகளாகவும் பூக்கின்றன. 

1999-ஆம் ஆண்டு கமேலியா ஜப்பானிகா மலர் அலபாமா மாகாணத்தின் மாநில மலராக அறிவிக்கப்பட்டது. இலைகளற்ற வெறும் பூவை மட்டும் பார்த்தால் ரோஜா என்றே நம்பவைக்கும் இதற்கு குளிர்கால ரோஜா என்ற செல்லப்பெயர் உண்டு. இதன் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சமையலில் ருசியும் மணமும் கூட்டப் பயன்படுகிறது. நாம் தலைக்கு தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதைப் போல ஜப்பானிய பாரம்பரியத்தில் தலைமுடி வளர்ச்சிக்கும் கூந்தல் பாதுகாப்புக்கும் இந்த கமேலியா எண்ணெயை உபயோகிக்கிறார்கள். 

சீனா, ஜப்பான் நாடுகளில் ஓவியங்களிலும் கலை வேலைப்பாடுடன் கூடிய பீங்கான் பாத்திரங்களிலும் இந்த கமேலியா மலர்களுக்கு சிறப்பான இடம் உண்டு.

44 - பான்சி பூக்கள் 

pansy flowers (Viola tricolor var. hortensis)



எத்தனைப் பூக்களின் மத்தியில் இருந்தாலும் பான்சி பூக்களை அதன் முகம் போன்ற அமைப்பைக் கொண்டு எளிதில் கண்டறியலாம். ஐந்து இதழ்களில் மூன்று இதழ்கள் முகத்தின் வடிவமைப்பைக் கொண்டு காண்போரைக் கவரும் வண்ணங்களில் தோட்டங்களுக்கு அழகு சேர்ப்பவை இந்த பான்சி பூக்கள். இதற்கு துளசி டீச்சர் வைத்த பெயர் நாய்மூஞ்சிப்பூ.. நான் வைத்த பெயர் மீசைக்காரப்பூ.

Pansy என்பது ஞாபகார்த்தம் என்று பொருள்படும் pensée என்னும் பிரெஞ்சு வார்த்தையிலிருந்து உருவானதாம். பான்சி பூக்கள் காதல் நினைவை உண்டாக்கும் என்பது பிரெஞ்சு மக்கள் நம்பிக்கை. வயோலா (viola) இனப்பூக்களுள் கலப்புமுறையில் உருவாக்கப்பட்டவைதான் பான்சி பூக்கள். ஒற்றை வண்ணமாகவோ அல்லது இரண்டு மூன்று வண்ணங்கள் இணைந்தோ.. கண்பறிக்கும் வண்ணங்களில் மலர்ந்து அழகூட்டும் பான்சி மலர் வகைகள் சுமார் ஐநூறுக்கும் மேல் இருக்கலாம். இந்த அழகிய வண்ண வண்ணப்பூக்கள் வாசமில்லா மலர்கள் என்பது ஆச்சர்யம்.

பான்சி பூக்கள் வாசமிழந்த காரணத்தைச் சொல்லும் ஜெர்மானிய நாடோடிக்கதை இது. முந்தைய காலத்தில் புல்வெளியெங்கும் காட்டுப்பூக்களாய் மலர்ந்திருந்த பான்சி பூக்களின் நறுமணம் அவ்வளவு வசீகரமாம். பூக்களின் நறுமணத்தால் கவரப்பட்ட மக்கள் ஆர்வமிகுதியால், அவற்றைக் கொய்வதற்காக புல்வெளிகளில் நடந்து நடந்து புற்களெல்லாம் மடிந்துவிட்டனவாம். மேய ஒன்றுமில்லாமல் கால்நடைகள் பசியால் வாடினவாம். பான்சி பூக்கள் தங்கள் நறுமணத்தாலேதானே இப்படி நடக்கிறது என்று வருந்தி கடவுளிடம் தங்கள் நறுமணத்தை நீக்கிவிடுமாறு வேண்டினவாம். பிரார்த்தனை செவிமடுக்கப்பட்டது. வாசமிழந்துபோயின வசீகர பான்சி மலர்கள்.

45 - காட்டு லில்லி 

(bush lily)  Clivia miniata


சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்களில் கொத்தாய் மலர்ந்து மணம் பரப்பும் இப்பூக்கள் தோட்டங்களையும் பூங்கொத்துகளையும் அலங்கரிக்க விரும்பி வளர்க்கப்படுகின்றன. Clivia என்ற பெயர் நார்த்தம்பர்லேண்ட் சீமாட்டியும் தோட்டக்கலையில் பெரும் ஈடுபாடு கொண்டவருமான charlotte Floretia Clive-இன் நினைவாக இடப்பட்டதாம். 

கிளைவ் என்றதும் கிழக்கிந்திய கம்பெனியின் மூலம் இந்தியாவை பிரித்தானிய அரசு ஆள்வதற்கு வழிவகுத்த ராபர்ட் கிளைவின் நினைவு வருகிறதா? அப்படியானால் அது சரிதான். அந்த ராபர்ட் கிளைவின் மகன் வயிற்றுப் பேத்திதான் இந்த சார்லட் கிளைவ். இதற்கு Natal lily, bush lily, kaffir lily என்ற பெயர்களும் உண்டு. 

தென்னாப்பிரிக்காவின் KwaZulu-Natal மாகாணத்தின் காட்டுப்பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்டது என்பதால் natal lily, bush lily என்ற பெயர்கள் பொருத்தம். அதென்ன kaffir lily? Kaffir என்பது ஆப்பிரிக்க மக்களை இனவெறியோடு குறிப்பிடும் ஒரு அநாகரிகச் சொல்லாம். இந்தப் பெயரில் குறிப்பிடுவதை ஆப்பிரிக்கர் எவரும் விரும்புவதில்லையாம். தன்மானமுள்ள யார்தான் விரும்புவார்கள்?

46 - மரத்தாமரை 

magnolia grandiflora




அமெரிக்காவின் தென்கிழக்குப் பிரதேசங்களைப் பூர்வீகமாகக் கொண்ட மேக்னோலியா இனம் தேனீ இனம் உருவாகுமுன்னரே அதாவது சுமார் ஒன்பதரை கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானது என்கின்றன ஆய்வுகள். அதனால் வண்டுகள் மூலமாகவே மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. 

மேக்னோலியா குடும்பத்தில் சுமார் 210 வகைகள் உள்ளன. செண்பக மரமும் இந்தக் குடும்பத்தைச் சார்ந்ததுதான். செண்பகப் பூக்களைப் போலவே மேக்னோலியா பூக்களும் மனங்கவரும் நறுமணத்தைக் கொண்டவை. செண்பக மரத்தைப் போலவே இந்த மரங்களும் உறுதியும் கடினமும் கொண்டவை என்பதால் மரச்சாமான்கள் செய்யப் பயன்படுகின்றன. 

மேக்னோலியா மரங்கள் நூறு வருடங்களைக் கடந்தும் வாழக்கூடியவை. இதன் இலைகள் மேற்புறம் அடர்பச்சையாகவும் அடிப்புறம் பளபளக்கும் பழுப்புநிறத்திலும் காணப்படும். படத்தில் காணப்படுவது magnolia grandiflora வகை. லத்தீன் வார்த்தையான grandiflora என்பதற்கு பெரிய பூ என்று பொருள். இவற்றைப் பார்க்கும்போது வெள்ளைத் தாமரைப்பூக்கள் மரத்தில் மலர்ந்திருப்பதைப் போலவே இருப்பதால் தமிழில் மரத்தாமரை எனப்படுகிறது. 

Magnolia grandiflora பூவுக்கு மிசிசிப்பி மற்றும் லூசியானா மாநிலங்களின் மாநில மலர் என்ற பெருமையும் ஹூஸ்டன் நகரத்தின் நகர மலர் என்ற சிறப்பும் இதற்கு உண்டு.  Magnolia sieboldii எனப்படும் இன்னொரு வகைப்பூ வடகொரியாவின் தேசிய மலராம்.

47 - லில்லி மேக்னோலியா 

(magnolia liliiflora)




லில்லி மேக்னோலியாவின் தாயகம் சீனா என்றபோதும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஜப்பானிலும் அறிமுகமாகி வேரூன்றிவிட்டக் காரணத்தால் இதற்கு ஜப்பானிய மேக்னோலியா என்ற பெயரும் உண்டு. சீனா, ஜப்பான் நாடுகளின் கலை, கலாச்சாரங்களில் மேக்னோலியா மலர்களுக்குத் தனியிடம் உண்டு. 

சீனாவில் பெண்மையின் அடையாளமாக மேக்னோலியா மலர்கள் கருதப்படுகின்றன. சீனப் பெண்குழந்தைகளுள் முலன் என்ற பெயர் பிரசித்தம். முலன் என்றால் சீனமொழியில் மேக்னோலியா மலர் என்று பொருள். இதற்கு ஜப்பானிய மேக்னோலியா, லில்லி மேக்னோலியா தவிர, பர்ப்பிள் மேக்னோலியா, சிவப்பு மேக்னோலியா, மர ஆர்கிட், ஜேன் மேக்னோலியா, துலிப் மேக்னோலியா, முலன் மேக்னோலியா என்ற பெயர்களும் உண்டு. 

குளிர்கால இறுதியில் இலையற்ற கிளைகளில் பூக்க ஆரம்பித்து வசந்தகாலம் முழுவதுக்குமாய்ப் பூத்துக்குலுங்கி வசீகரிக்கும் மேக்னோலியா மரங்கள் ஜப்பானிய, சீனத் தோட்டங்களில் தவறாமல் இடம்பெறுபவை.

48 - வண்ணத்துப்பூச்சி அமரிலிஸ் 

Butterfly amaryllis (Hippeastrum papilio)



வண்ணத்துப்பூச்சி இறக்கை விரித்தாற்போல அழகு காட்டுவதால் இதற்கு  butterfly amaryllis என்ற பெயர். Amaryllis பிரிவிலிருந்து சமீபத்தில்தான் (1997) hippeastrum பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பதால் பழைய பெயரே தொடர்ந்து நீடிக்கிறது. பெயர்க்குழப்பமும் நீடிக்கிறது. இரண்டு பிரிவுகளுமே Amaryllidaceae என்னும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவைதான். Hippeastrum பிரிவில் அசல் 90 வகையும் கலப்பு 600-க்கு மேலும் உள்ளனவாம்.  

பிரேசிலைப் பூர்வீகமாகக் கொண்ட இத்தாவரம் இப்போது உலக நாடுகள் பலவற்றிலும் வணிக நோக்கோடும் அழகுக்காகவும் பரவலாக வளர்க்கப்படுகிறது. வெளிர் பச்சை அல்லது அடர் பச்சையில் மெரூன் வண்ணக் கோடுகளைக் கொண்ட பூக்களைப் பார்த்த மாத்திரத்திலேயே அடையாளம் கண்டுகொள்ள முடியும். பெரும்பாலும் இரட்டையராகப் பூக்கக்கூடியவை. 

அதிக கவனிப்பு தேவைப்படாமல் நன்கு வளரக்கூடியது. மற்ற hippeastrum பூக்களைப் போல கண்ணைப் பறிக்கும் வண்ணம் இல்லை என்றாலும் இதற்கென்று ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது.

49 - துலிப் மலர்கள் 

tulips



உலகத்தில் எத்தனை வண்ணங்கள் உள்ளனவோ அத்தனை வண்ணங்களிலும் துலிப் மலர்கள் பூக்கும் என்ற பெருமைக்கு ஒரு விள்ளல் குறைவெனும்படியாக கருப்புவண்ணம் மட்டுமே மீதமிருந்தது. தொடர் ஆராய்ச்சியின் விளைவாக 1986-ல் கருவண்ணத்திலும் துலிப் மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டு மலர்ச்சந்தையில் அறிமுகமாகிவிட்டன. 

லில்லி குடும்பத்தைச் சேர்ந்த துலிப் மலர்களில் சுமார் மூவாயிரம் வகைகள் உள்ளன. நெதர்லாந்துதான் உலகிலேயே அதிக அளவில் (சுமார் 300 கோடி) துலிப் கிழங்குகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபம் ஈட்டுகிறது. துலிப் கிழங்குகள் வெங்காயத்துக்கு பதிலாக சில நாடுகளில் உணவில் பயன்படுத்தப்படுகின்றனவாம்.

துலிப் மலர்களுக்கு ஒளி மிகப்பிரியம். ஒளி வரும் பக்கம் நோக்கி அதன் காம்புகள் வளைந்தும் நெளிந்தும் நிமிர்ந்தும் வளருமாம். துலிப் மலரைக் கொய்து பூச்சாடியில் வைத்தபின்னும் ஒரு அங்குலமாவது வளரும் என்பதும்  பூச்சாடியிலும் அதன் காம்புகள் வெளிச்சம் நோக்கி நீண்டு வளரும் என்பதும் வியப்பாக உள்ளதல்லவா?

காதலுக்கு சிவப்பு, நட்புக்கு மஞ்சள், மன்னிப்பு கேட்க வெள்ளை, மகிழ்ச்சிக்கு பிங்க், உண்மைக்கு ஊதா என துலிப் மலர்க்கொத்துகளைத் தேர்ந்தெடுத்துப் பரிசாகக் கொடுப்பது வழக்கம். மேலும் பதினொன்றாவது திருமண நாளின் அடையாளமலர் என்ற சிறப்பும் இதற்கு உண்டு.

50 - அபுடிலான் 

(Abutilon)




அபுடிலான் மலர்கள் பார்ப்பதற்கு செம்பருத்திப் பூக்களைப் போல இருந்தாலும் செம்பருத்தி அல்ல.. ஆனால் இரண்டுமே malvaceae என்னும் ஒரே மூதாதைக் குடும்பத்தின் வழித்தோன்றல்களே. அபுடிலான் இனத்தில் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, பிங்க் என பலவண்ணங்களில் பூக்கும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. வருடம் முழுவதும் பூக்கும் தன்மைக்காகவும், மணிபோன்ற வடிவத்தில் தலைகவிழ்ந்துதொங்கும் பூக்களின் அழகுக்காகவும் வீடுகளிலும் பூங்காக்களிலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. 

படத்திலிருப்பது abutilon pictum flower. இதற்கு சீன லாந்தர் (Chinese lantern) என்ற செல்லப்பெயரும் உண்டு. செம்பருத்திப் பூக்களைப் போல இந்தப் பூக்களையும் அப்படியேயோ அல்லது சமைத்தோ உண்ணும் வழக்கம் சீன மக்களிடத்தில் உள்ளது.

(மலரும்)

8 comments:

  1. படங்கள் தெளிவு, அழகு. இவ்வளவு சுவாரஸ்யமான விவரங்கள் அளிக்க உங்களாலும், சகோதரி ராமலக்ஷ்மியாலும்தான் முடியும்.

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். புகைப்படக் கலையிலும் புகைப்படங்களின் வாயிலாக பேசும் கலையிலும் ராமலக்ஷ்மிதான் என் முன்னோடியும் வழிகாட்டியும். அவர்களோடு என்னைக் குறிப்பிட்டிருப்பது பெரிய அங்கீகாரம். மிக்க நன்றி. :))

      Delete
  2. வியக்க வைக்கும் தகவல்கள்... படங்கள் அனைத்தும் அழகோ அழகு...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      Delete
  3. கமேலியா பூக்கள் செமைக்கா..

    பாதாமும், வாதுமை மரமும் வேறுவேறுன்னு இன்றுதான் தெரிந்துக்கொண்டேன்.

    பிங்க் நிற வாழை சூப்பர். புதுசாவும் இருக்கு. கத்தியால் சீவி விதையை எடுத்துட்டு சாப்பிடலாம்தானே?!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி. பல விவரங்களைத் தேடல் மூலம்தான் அறிந்துகொள்ள முடிகிறது. என்னை வியக்கவைத்தவற்றை அனைவரோடும் பகிர்ந்துகொள்வதில் எனக்கும் மகிழ்ச்சி.
      \\கத்தியால் சீவி விதையை எடுத்துட்டு சாப்பிடலாம்தானே?!\\ பழங்களிலேயே மிக எளிதாக சாப்பிடக்கூடிய பழம் வாழைப்பழம்தான். அதை இவ்வளவு கஷ்டப்பட்டு சாப்பிடணும் என்றால் யார்தான் துணிவார்கள்? :))

      Delete
  4. அப்பப்பா எத்தனை வகைப் பூக்கள் ! பான்சிப் பூ காதல் நினைவை உண்டாக்கும் என்பது பிரஞ்சுக்காரர்கள் நம்பிக்கை என்ற செய்தி நான் அறியாதது .

    ReplyDelete
    Replies
    1. பூக்கள் குறித்த தகவல்களைத் தேடும்போது புதிய விவரங்கள் பல கிடைக்கின்றன. பான்சிப்பூ பற்றி பிரெஞ்சுக்காரர்களின் நம்பிக்கை தாங்கள் அறியாத செய்தி என்பது வியப்பளிக்கிறது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.