8 March 2023

கம்பனைச் சந்திக்காக் கவியேது?



அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கம்பன் விழாவில் இரண்டாம் முறையாகக் கவிதை வாசிப்பு கூடி வந்தது.  கடந்த 2018-ஆம் ஆண்டு 'வாய் தந்தன கூறுதியோ' என்ற தலைப்பில் முதன் முறையாக கம்பன் விழா கவியரங்கில் கவிதை வாசித்தேன்.  2019-ஆம் ஆண்டு 'குகனொடும்  ஐவரானோம்' என்ற தலைப்பு வழங்கப்பட்டிருந்தது. கவிதையெல்லாம் எழுதி வாசிக்கத் தயாராக இருந்த நிலையில் உடல்நலமில்லாது போனதால் கவியரங்கத்தில் பங்கேற்க இயலாது போயிற்று. அதன் பிறகு கோவிட் தலைவிரித்து ஆடத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகளாக இணைய ஒன்றுகூடல் வாயிலாய் விழா நடைபெற்றதால் பெரிதளவு கவன ஈர்ப்பைப் பெறவில்லை. இந்த வருடக் கம்பன் விழா கோலாகலமாக இலக்கிய ஆர்வலர்களோடு இனிதே கொண்டாடப்பட்டது.  


இம்முறையும் கவியரங்கில் கவிதை வாசிக்கக் கேட்டபோது தயங்காமல் ஒத்துக்கொண்டேன்.  சில காலமாகவே கவிதை எதுவும் எழுதவில்லை. கவிதை கைவருகிறதா என்று சோதித்துப் பார்க்கும் பரிசோதனை முயற்சி முதலாவது காரணம். இரண்டாவது, இந்த சாக்கை முன்னிட்டாவது இலக்கியத்தின் பக்கம் கொஞ்ச நேரம் ஒதுங்கலாம். கம்பராமாயணத்தை மீண்டும் வாசித்து ரசிக்கலாம். கூடவே ஔவையைப் பற்றிய ஆராய்ச்சியும். காரணம் கொடுக்கப்பட்ட தலைப்பு அப்படி. 

கம்பனைச் சந்திக்கும் புலவர்கள் என்ற வரிசையில் வள்ளுவன், இளங்கோ, பாரதி மற்றும் ஔவை இருந்தனர். எனக்கு ஔவை வந்தார். எந்த ஔவை என்று கேட்டபோது நீதிநூல் படைத்த ஔவை என பதில் அளிக்கப்பட்டது. எனவே கம்பராமாயணத்தையும் ஔவையின் நீதி போதனைகளையும் ஒப்பிட்டு கவிதைக்கான கருத்துகளை அடுக்கவே இரண்டு வாரங்கள் ஆயிற்று. கடைசி மூன்று நாட்களில் கவிதையை முழு மூச்சாக எழுதி முடித்தேன். கவிதை வடிவமும் கருத்தும் ஓரளவுக்கு நிறைவளித்தன.



கம்பன் விழாவின் ஐந்தாம் நாளான 5-3-23 அன்று மாலை  பேராசிரியர் பிரசாந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் 10 நிமிடக் கவிதையை வாசித்தேன்.  மேடையை விட்டு இறங்கியதும் அறிஞர் பெருமக்களின் பாராட்டுகளும் வாழ்த்துகளும் என்னை மகிழ்வின் உச்சத்துக்குக் கொண்டு சென்றன. ஆகப்பெரும் ஆளுமைகளிடமிருந்து அப்படியான பாராட்டுகளை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தடுமாறினேன். முக்கியமாக கம்பவாரிதி ஜெயராஜ் ஐயாவிடமிருந்து கிடைத்த மனந்திறந்த பாராட்டுகளை என் வாழ்நாளில் மறக்கவே இயலாது.   என் மகோன்னதமான தருணங்களை தன் மொபைலில் படம் பிடித்து ஆவணமாக்கி எனக்கு அளித்து என்னை பெருமகிழ்வில் ஆழ்த்திய தோழி யசோதாவுக்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறி மகிழ்கிறேன். 




கம்பனைச் சந்திக்கும் ஔவை


அறையும் ஆடரங்கும்  மடப் பிள்ளைகள்

தரையில் கீறிடின்  தச்சரும் காய்வரோ?

இறையும் ஞானம் இலாத  என் புன் கவி

முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ என்று

பாவன்மை ஓங்கிய பாவலனும்

நாவன்மை ஓங்காது நயந்திருக்க

ஆன்றோர் நிறைந்த இவ்வரங்கில்

நானுமோர் கவியென   

நாணத்துடன் நாச்சுழற்ற

தயக்கத்துடன் தமிழ்ப்பா மிழற்ற 

முயலும் இச்சிறியவளை

தாயன்ன பரிவுடையீர்!

தமிழ்த் தாயன்ன பரிவுடையீர்!

தயவுடனே பொறுத்தருள்வீர்!

 

தெள்ளுதமிழ்ப் பாட்டனாம்

திகட்டாக் கவிப் பூட்டனாம்

கம்பனை சந்திக்காக் கவியேது?

சந்திக்காவிடில்

பைந்தமிழ்ப் புலமைக்குக் கவினேது?

பாரதி இளங்கோ வள்ளுவன் என்றே

நீளும் பட்டியலுக்கு நிறைவேது?

அமிழ்தாய் தமிழ்த்தாய் அவ்வையிலாது

அச்செவ்விய வரிசைக்குதான் சிறப்பேது?

 

கருத்தால்

கவி வளத்தால்

அறத்தால்

பா வடிக்கும் திறத்தால்

புனைவால்

பொலிகின்ற அணிகளால்

உவமையால்

உன்னதப் புலமையால்  

ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளாது

ஒருக்காலும் ஒண்டமிழ் ஒளிராது

 

அரங்கு எதிர்நோக்கும் ஔவையார்

ஒருவரா இருவரா?

அல்லது  ஆய்வு காட்டும் அறுவரா?

அரங்கு எதிர்நோக்கும் ஔவை யார்?

 

ஆதியிலே வந்தவளா?

ஆத்திசூடி தந்தவளா?

அசதிகோவை பாடியவளா?

தன் அன்புக் கோவைப் பாடியவளா?

மையிழைத்த மடவரலா?

மெய்யுரைத்த முதியவளா?

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே என

சங்கத்தமிழில் முழங்கியவளா?

துங்கக் கரிமுகத்துத் தூமணியிடம்

சங்கத்தமிழ் மூன்றும் தாவென வேண்டியவளா?

விறலியா? வித்தகியா?

அறநெறி படைத்த அன்னையா?

அகவல் இசைத்த அம்மையா?

மண்டையைத் துளைத்தன

வண்டு போல் வினாக்கள்!

 

பேதைமை நீங்கிட பெருமை ஓங்கிட

நீதிமுறை உரைத்த அவ்வையே

இவ்வரங்கு எதிர்நோக்கும் கவிமையம்

என்றறிந்து அகன்றது என் ஐயம்!

 

கம்பனும் அவ்வையும்  காலத்தால் நிகரென்றார்

பொன்னுக்கும் கூழுக்கும் கவி பாடி

புவி தொட்டிருந்த நாளிலே

பூனையும் எலியும் என்றார்

பூவுலகு கட்டும் கதைகள்  மெய்யோ?  புளுகோ?

புரட்டோ?  புனைசுருட்டோ?/  

புரியாது தவித்தேன்

கவி புனையாது தவிர்த்தேன்.


எங்ஙனம் நான் கவிபாட?

எண்ணியெண்ணி பன்னாள் ஓட

மீதம் இருந்ததோ அரை நாள்!

ஏதும் செய்ய ஏலுமோ என்னால்?

 

நண்பகல் நேரத்து மயக்கம்

கண்ணயர்ந்து சிறு உறக்கம்

கனவினில் வந்தாள் அவ்வை

கன்னித்தமிழின் தவ்வை

சொன்னேன் கவியரங்கத் தலைப்பை

விடுத்தாள் கம்பனுக்கு அழைப்பை

 

பா ரதமேறி வந்தான் கம்பன்

பாமரரையும் கவர்ந்த அன்பன்

சீதையைக் கண்ட அனுமனைப் போலே

பேதை நான் மகிழ்ந்தேன் பேருவகையாலே

 

அவ்வையே வாழ்க

அதிசயமாய் நீவிர் என்னை நினைக்க

யாது காரணம் கதைக்க

என  பரிகசித்துக் கம்பன் நகைக்க

 

திரட்டுப் பாலென தீந்தமிழால்

திகட்டத் திகட்டக் கவிபுனையும்

கம்பனோடு எனக்கென்ன வம்பு?

கொம்பனைக் கட்டுமோ சிறுதும்பு?

ஐயனே!

ஆஸ்திரேலியக் கம்பன் கழகத்தினின்று 

தூது வரவிலையோ

செந்தமிழ்க் கவிஞரெலாம்  உமைத் தேடும் 

சேதி பெறவிலையோ என்றாள்.

 

பெற்றேன் பெற்றேன்

பெரும்பேறு உற்றேன் உற்றேன்

அல்வழி நடந்தோர் திரும்ப

நல்வழி நல்கிய நல்லாளே

தீதுரை கேட்டோர் திருந்த

மூதுரை ஓதிய மூத்தவளே

உம்மிடம் உரையாடவே 

உம் இடம் தேடி வந்தேன்

ஆத்திசூடி அமர்ந்த தேவனையும் 

கொன்றைவேந்தன் செல்வனையும்

ஏத்தி யேத்தித் தொழுது

கொவ்வைக் கவிபாடிய அவ்வையே! அம்மையே!

செவ்விய வாழ்வுக்காய் 

நீர் செப்பிய அனைத்தும் உண்மையே

கவ்விய கவ்வை போக்க

கனிவாய் உரைத்தனை நன்மையே

கம்பன் சொல்லிலே தேன் வார்த்தான் 

சொல்லி முடித்து எனைப் பார்த்தான்.

 

ஈதொரு கவிப்பித்து என்றாள் அவ்வை 

எனைக் காண்பித்து

ஆஸியில் கவிபாடப்போகும் இவளுக்கு

ஆசிகள் தந்து அனுப்ப வேண்டுமாம்

ஆசில்லா நற்கவி பாட

ஐயனே நாம் துணை நிற்க வேண்டுமாம் என்றாள்

 

அங்ஙனமே ஆகட்டும் 

நல்வண்ணமே நடக்கட்டும்

அகரத்திலே தொடங்கட்டும்

அதுவும் அறத்துடனே தொடங்கட்டும்

அறத்தோடு தொடங்குதல்தானே அறம்

அனுமதி கிட்டியது அருங்கவியிடமிருந்து.

 

அறம் வெல்லும்  

அறமே வெல்லும்

அறியாது உலகு எள்ளும்

அறிந்தபின் ஒருநாள் அதுவே சொல்லும்

அதுவரை ஏற்ற அவச்சொல் தள்ளும்

ஆகவேதான் அறம் செய விரும்பு என்றேன் 

நீவிரோ 

அறத்தால் ஆவதே வாழ்வென்று

அறம் தரு வள்ளலை உருவத்தில் காட்டினீர்

 

உடைந்தவர்க்கு உதவான் ஆயின்   

உள்ளது ஒன்று ஈயான் ஆயின்

அடைந்தவர்க்கு அருளான் ஆயின்   

அறம் என் ஆம்?  ஆண்மை என் ஆம்? என்ற

அண்ணல் வாய்மொழி அறப்பெருமை நாட்டினீர்

அறம் பிழைத்தவர்க்கு 

வாழ்மைதான் வாய்க்குமோ என

ராக்கத அண்ணனைக் காயும் 

ரட்சக இளவலைக் காட்டினீர்

 

பிறன் இல் விழைவோர்   கிளையொடும் கெடுப 

என்னும்   பாவிகத்தைப் பறைசாற்ற

ராமகாதையெனும்   காவியத்தைப் படைத்த

கவிச்சக்கரவர்த்தியும் நீவிர் அன்றோ? 


கவினுறு புகழாரம் அணிவித்தாள் அவ்வை

வியனுறு கம்பன் வினயமாய்ச் சொன்னான்

 

பிறன்மனை புகாமை   அறன் எனத் தகும் என்பது  

நும் அறநெறி காட்டும்   செவ்விய மாண்பன்றோ?

மை விழியார் மனை அகல் என்பதும்

நும் பொன்மொழி புகட்டும் நனி நோன்பன்றோ?

 

இடைமறித்தாள் அவ்வை

கம்பரே கவி வேந்தே

மங்கையர் பொருட்டால் எய்தும்  

மாந்தர்க்கு மரணம் என்றல்

சங்கை இன்று உணர்தி என்று  

சத்திய வாக்குப் பறைந்தனை

பெண்கள் பால் வைத்த நேயம்  

பிழைப்பரோ சிறியோர் பெற்றால்? என  

பாழும் நெஞ்சம் பதைத்தனை

 

தூமகேது புவிக்கு எனத் தோன்றிய

வாம மேகலை மங்கையரால் வரும்

காமம் இல்லை எனின்   கடுங்கேடு எனும்

நாமம் இல்லை  நரகமும் இல்லையே

என நேமத்தின் விதிகளை நினைவூட்டினை!

 

இத்தனை வரிகளும் சொல்லாததையா

என் ஒற்றை வரி சொன்னது ஐயா?

சிரித்தபடி வினவினாள் அவ்வை

சிரத்தையொடு விடையிறுத்தான் கம்பன்

 

ஒற்றை வரியா?  

நல்வழியின் மற்றை நான்கு வரிகளை 

மறந்தீரே, சரியா?

நற்றமிழ்க் கவி அம்மையே?

நண்டு சிப்பி வேய் கதலி நாசமுறும் காலத்தில்

கொண்ட கரு அளிக்கும் கொள்கைபோல்- ஒண்டொடீ

போதம் தனம் கல்வி பொன்றவருங்காலம்

அயல் மாதர்மேல் வைப்பார் மனம்

என அழகுற ஆபத்தை உரைத்தீரே?

 

நன்மக்கள் குறித்து நீவிர்

நவின்ற வரிகளை நினைவுகூர்கென  

நற்கவி மக்களின் நடுவில்

நானும் புகுந்து நயமிலாது கேட்க  

ஏவா மக்கள் மூவா மருந்தென  பாவால் பகன்றாள் அவ்வை

சொல் மறா மகப் பெற்றவர்  அருந்துயர் துறந்தார் என்று

தானுமதை ஆமோதித்தான்  தசரத மொழியால் கம்பன்

 

இன்னல் இலாது வாழ இன்னாது ஒழிகவென

எந்நாளும் இயம்பினோம் யாம்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமென

சொற்பதம் தந்து அவ்வை எச்சரிக்க

தீயது தீயவர்க்கு எய்தல் திண்ணம்

என்  வாயது கேள் என  திரிசடை வாயிலாய்

வாய்மை புகட்டினேன் என்றான்

தேய்விலா தேன்கவி

 

சூது பற்றியும் ஏதோ சுட்டியதாய் நினைவு என்றேன்

சூடானான் கம்பன்

விளையாட்டல்ல சூதாட்டம்

வனத்தீயின் சூடாட்டம்

வெந்தணலாடும் புழுவாட்டம்

வாழ்வுநிலை பெரும் போராட்டம்!

 

சூது விரும்பேல் 

இது  அவ்வையின் ஆதி அறிவுரை!

போதாது போதாதென்று

சூதும் வாதும் வேதனை செய்யும் என்று

அழுத்தி இயம்பினார் அடுத்தும் ஒரு முறை!

 

சூது முந்துறச் சொல்லிய மாத் துயர்

நீதி மைந்த! நினக்கு இலை  ஆயினும்,

ஏதம் என்பன யாவையும் எய்துதற்கு

ஓதும் மூலம் அவை என ஓர்தியே

இது  வசிட்டனின் வாயுரை! 

அதுவே அடியேனின் தாயுரை!

 

தப்பும் சரியும் தப்பாமல் செப்பிடும்

ஒப்புமைப் பாக்களை இருவரும் ஓர்மித்து நோக்க

காலத்தை மறந்து நானும் கதைபோலதைக் கேட்க

நெஞ்சுக்குள் மணி அடித்தது

அஞ்சு மணி ஆனதென்று லறியது

 

போதும் போதும் பொழுது சாய்ந்துவிட்டது

காதோரம் ஓதினர் கம்பனும் அவ்வையும்

ஓடு ஓடு கவியரங்கு ஓடு

பாடு பாடு நீ கண்டதைப் பாடு என்றனர்

கண்டதைப் பாடினால் கல்லெறிய மாட்டாரோ?

கலங்கினேன்

கண்டதையும் பாடினால் கல்தான் விழும்

நீ கனவில் கண்டதைப் பாடினால் கள் அல்லவோ எழும்?

ஆம்! 

ரசிப்புகள் 

தலையசைப்புகள் 

அன்புகள் 

ஆமோதிப்புகள்

உவப்புகள்

உணர்வின் சிலாகிப்புகள்

சிறப்புகள்

சிறு அங்கீகரிப்புகள்!

அடடா அடடா!

தெளிந்து நானும் தேறினேன்

கனவின் காட்சியை நனவின் நீட்சியாக்கி

துணிந்து மேடை ஏறினேன்

கவிஞர் பெருமக்களை அதன் சாட்சியாக்கி!

*****

 2018 ஆம் ஆண்டு கம்பன் விழா கவியரங்கில் வாசித்த கவிதை

வாய் தந்தன கூறுதியோ

2019-ஆம் ஆண்டு கம்பன் விழா கவியரங்குக்காக எழுதிய கவிதை

குகனொடும் ஐவரானோம்




 

3 comments:

  1. கவிதை நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  2. அருமையான கவிதை.வாழ்த்துகளும் பாராட்டுகளும் கீதா!

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.