28 June 2020

கைகொடுக்கும் காய்கறித்தோட்டம்

தோட்டத்துப் பிரதாபம் - 15




  சென்ற வருடம்தான் தோட்டவளர்ப்பில் மும்முரமாக இறங்கினேன். முதல் முயற்சியிலேயே பலன் எக்கச்சக்கம். கற்றவையும் பெற்றவையும் ஏராளம். 

குட்டித்தோட்டம் என்றாலும் வீட்டுத்தோட்டத்தின் அருமை இப்போது அதிகமாகவே தெரிகிறது. இதிலிருந்து கிடைக்கும் காய்கறிகீரைகள் தயவால் ஊரடங்கு காலத்தில் வெளியில் போகாமல் வீட்டிலேயே ஓரளவு சமாளித்துக்கொள்ள முடிகிறது என்பதும் சிக்கனமாக இருக்கமுடிகிறது என்பதும் மிகப்பெரிய நிம்மதியும் சந்தோஷமும்.

கத்தரிக்காய்கள் இப்போதும் காய்த்துக்கொண்டிருக்கின்றன. பெரிய காய் என்பதால் ஒரு காய் சமைத்தாலே ஒரு பொழுது ஓடிவிடும். தேவைப்படும்போது ஒரு காயை செடியிலிருந்து பறித்து சமைத்துக் கொள்கிறேன். சென்ற வருடம் கத்தரிக்காய்கள் எக்கச்சக்கமாக காய்த்தபோது வற்றல் போட்டு வைத்துக்கொண்டதால் இப்போது நினைத்தவுடன் சட்டென்று ஒரு வத்தக்குழம்பு வைத்துவிடமுடிகிறது. 



  பயித்தங்காய்கள் கிட்டத்தட்ட காய்த்து முடியும் பருவத்தில் இருக்கின்றன. ஏற்கனவே காய்த்தவற்றை ஆசை தீரும்வரை சாப்பிட்டு அனுபவித்தாச்சு. அதிகப்படியாக காய்த்தவற்றை கொடியிலேயே முற்றவிட்டுப் பறித்து உரித்து விதைகளைக் காயவைத்து எடுத்துவைத்திருக்கிறேன். ஊறவைத்து தட்டைப்பயறு காரக்குழம்பு, சுண்டல் என பயன்படுத்தலாம். அடைக்கு ஊறப்போடும்போது கைப்பிடி சேர்த்து ஊறப்போட்டு அரைக்கலாம்.





  தேவைக்கு மேல் காய்க்கும் பயத்தங்காய்களைப் பதப்படுத்திவைக்க வேறு என்ன செய்யலாம் என்று தேடியதில் Blanching & Freezing முறை பற்றி அறிந்தேன். இது காய்கறியில் உள்ள நொதியங்களை (enzymes) செயல்படவிடாமல் தடுக்கும் முறை. இம்முறையில் பதப்படுத்தப்படும் காய்கறிகளை ஒரு வருடம் வரை ஃப்ரீஸரில் வைத்திருந்து பயன்படுத்தமுடியும். மிகவும் எளிய முறைதான்.

1. காய்களைக் கழுவித் துண்டுகளாக்கவேண்டும். 
2. கொதிக்கும் நீரில் மூன்று நிமிடம் போட்டு எடுக்கவேண்டும். 
3. உடனேயே குளிர்ந்த நீரில் இரண்டு மூன்று தடவை அலசி வடிகட்டவேண்டும். 
4. பேப்பர் டவலில் நன்கு துடைத்துவிட்டு காற்று புகாதபடி ziplock கவர்களில் தேவைக்கேற்ற அளவுகளில் போட்டு Freezer-ல் பத்திரப்படுத்தவேண்டும். அவ்வளவுதான். 

முதல்முறை செய்திருக்கிறேன். இனிதான் பார்க்கவேண்டும் எப்படி இருக்கிறதென்று. 



  பரங்கிக்காய் கொடி (இது முன்பிருந்த Kent pumpkin வகை இல்லை. Queensland Blue pumpkin என்னும் வேறு வகை) போன தடவை எக்கச்சக்கமாய்க் காய்த்தவற்றை (20-25 இருக்கலாம்) அக்கம்பக்கத்திலும் நட்புகளுக்கும் கொடுத்துத் தீர்த்தேன். அதற்கு மேலும் காய்த்தவற்றை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். பரங்கிக்காய்களை வெட்டாமல் ஈரப்பதமற்ற உலர்வான இடத்தில் பத்திரப்படுத்தினால் மூன்று முதல் ஆறு மாதங்களுக்குக் கெடாமல் இருக்குமாம். இனி அதிகமாகக் காய்த்தால் கவலையில்லை. பத்திரப்படுத்திவைத்துக் கொள்ளலாம்.

புதினா அதிகமாக விளைந்திருந்தபோது பறித்து நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்திருக்கிறேன். துவையல், ரசம், புலவு, குருமா, பிரியாணி என முடிந்தவரை உணவில் சேர்த்துக்கொள்கிறேன். வல்லாரைக்கீரை பறித்து நிழலில் காயவைத்து எடுத்து வைத்திருக்கிறேன். சூப், துவையல், பொடி என பயன்படுத்திக் கொள்ளலாம். முடிந்தால் லேகியம் கூட செய்துவைத்துக் கொள்ளலாம்.




  பச்சை மிளகாய் அதிகமாய்க் காய்த்தபோது பறித்துக் கழுவி காம்பைக் கிள்ளிவிட்டு ziplock கவரில் போட்டு freezer-ல் வைத்துவிட்டேன். கொஞ்சத்தை மோர்மிளகாய் போட்டுவைத்திருக்கிறேன். அதற்கும் மேல் காய்த்த மிளகாய்களை பழுக்கவிட்டுப் பறித்து காயவைத்து மிளகாய் வற்றலாக்கினேன். பிறகு வறுத்து, பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள பூண்டுமிளகாய்ப்பொடி செய்து வைத்திருக்கிறேன். மூன்று மாதங்களுக்கு மேல் வரும். 



  எலுமிச்சை மரத்தில் முதல் காய்ப்பாக எண்ணி பத்துப் பழங்கள். மொத்தம் 2 கிலோ இருக்கின்றன. பாதியை ஊறுகாய் போட்டுவைத்திருக்கிறேன். பெரிய பழங்கள் என்பதால் இதுவே ஒரு வருடத்துக்கு வரும். மீதியை சாறு எடுத்து சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சி பத்திரப்படுத்த எண்ணியுள்ளேன். தேவைப்படும்போது தண்ணீரில் இரண்டு ஸ்பூன் கலந்தால் போதும், எலுமிச்சை ஜூஸ் தயார். 

தோட்டத்தில் எதிர்பார்த்த விளைச்சலைக் கொடுக்காதவை வெங்காயமும், உருளையும்தான். முதலில் சுணக்கமாக இருந்த முள்ளங்கி கூட இப்போது பலன் தர ஆரம்பித்துவிட்டது. 

வீடடைந்துகிடக்கும் இந்த நாட்களில் தோட்ட வளர்ப்பும் அதில் செலவழிக்கும் நேரமும் உடலுக்கும் உள்ளத்துக்கும் மிகுந்த பயனைத் தருவதை அனுபவபூர்வமாய் உணர்கிறேன். தற்போது குளிர்காலம் என்பதால் குளிரில் முடங்கியபடி காத்திருக்கிறோம் வசந்தம் மற்றும் கோடையின் வரவுக்காக நானும் என் தோட்டமும். 

(பிரதாபங்கள் தொடரும்)

18 comments:

  1. எலுமிச்சை மரம் பார்க்கவே பரவசமாக உள்ளது...

    ஆகா...! இவையெல்லாம் எந்தளவு பலன் தரும் என்பதை விட, மன மகிழ்ச்சியே முக்கியம்... வாழ்த்துகள் பல...

    ReplyDelete
  2. தோட்டம் ரொம்பவே நல்ல விஷயம். நேரம் போவதே தெரியாமல் தோட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையே. நன்றி வெங்கட்.

      Delete
  3. கீதா தோட்டம் அட்டகாசம் போங்க!! ஹையோ எல்லாமே வீட்டிலேயே கிடைத்துவிட்டது இல்லையா. ரொம்பவே எல்லாமே பச் பச் என்று செழுமையா இருக்கு. தோட்டத்தில் என்பதால் எல்லாமே நல்ல தரமானதாக இருக்கும். தோட்டம் என்பதே பயன் தரும் அதே சமயம் மனதிற்கு மிக மிக மகிழ்வைத்தரும்

    எனக்கும் தோட்டம் என்றால் மிகவும் பிடிக்கும் ஆனால் தொடர்ந்து ஒரே ஊரில் இல்லாததால் போட முடியவில்லை. இப்போது பங்களூரில் அத்தனை ஈரப்பதம் அல்லாத காலநிலை என்பதால் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை எல்லாம் நன்றாகக் கழுவி ஈரம் போக டவலில் துடைத்து வைத்துவிட்டால் தானாகவே உலர்ந்துவிடும். அதைப் பொடி செய்து வைத்துக் கொண்டுவிடுவேன்.

    எலுமிச்சை இருக்கிறதெ ஆஹா பார்க்கவே அம்சமாக இருக்கு. இலைகளைப் பறித்து வேப்பிலைக்கட்டி/நார்த்தை இலைப் பொடி என்று நாங்கள் சொல்லும் பொடியைச் செய்து வைத்துக் கொள்ளுங்கள் கீதா. எலுமிச்சை இலை, காரத்திற்குத் தேவையான வற்றல் மிளகாய், ஓமம், கொஞ்சம் பெருங்காயம் உப்பு இவ்வளவுதான் எல்லாம் அப்படியே பொடித்து உருட்டியோ அல்லது பொடியாகவோ வைத்துக் கொள்ளலாம். உடம்பிற்கும் நல்லது. ஜீரணத்திற்கும் உதவும்.

    மிகவும் ரசித்தேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கு அன்பும் நன்றியும் கீதா. வேப்பிலைக்கட்டி என்றால் வேப்பிலையில் செய்வது என்றல்லவா நினைத்திருந்தேன். ஒமம் மட்டும் வாங்கவேண்டும். நிச்சயம் செய்துபார்க்கிறேன்பா. ரெசிபிக்கும் மிக்க நன்றி.

      Delete
  4. அருமையான தோட்டம். ம்கிழ்வான விஷயம். நன்றாகப் பராமரிக்கிறீர்கள் என்றும் தெரிகிறது. உங்கள் உழைப்பிற்கேற்ற பலனும் மகிழ்ச்சியும்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

      Delete
  5. பிரமாதம். உங்கள் உழைப்புக்கேற்ப விளைச்சலும் அமோகம். வாழ்த்துகள்.
    அதிகப்படியான காய்கனிகளை எதிர்காலத்திற்கெனச் சேமித்துக் கொள்ளும் குறிப்புகளும் நன்று.

    ReplyDelete
    Replies
    1. நம் ஊராய் இருந்தால் அக்கம்பக்கத்தில் கொடுத்துவிடலாம். இங்கே அதுவும் கொரோனா காலத்தில் நிச்சயம் வாங்க மாட்டார்கள். பதப்படுத்திவைப்பது ஒன்றுதான் வழி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  6. பார்க்கவே ஆசையாயிருக்கிறது. பாராட்டுகள் கீதா!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி அக்கா.

      Delete
  7. உங்கள் உழைப்பு புரிகிறது .Blanching & Freezing முறை செய்து பார்க்கணும் கேள்விப்பட்டிருக்கிறேன் . ஒர்க் அவுட் ஆனால் தெரியப் படுத்துங்கள் .செயல் படுத்திவிடுவோம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா. இன்னும் சமைத்துப் பார்க்கவில்லை. சமைத்துப் பார்த்துவிட்டு சொல்கிறேன்.

      Delete
  8. இலமென் றசைஇ இருப்பாரைக் காணின் என்னுங் குறள் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  9. நம்மூரில வீட்டில விளைஞ்சா பிடி கறிவேப்பிலை கூட கொடுக்க மாட்டாங்க... நீங்க தெருவுக்கே காய்கறி கொடுத்திருக்கீங்க.. வாழ்த்துக்கள்..!

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.