29 April 2026

டிங்கோ கொலைகள் (3)

ஆஸ்திரேலியாவின் குற்றவியல் வரலாற்றில் கறை படிந்த ஒரு வழக்கு ‘அஸாரியா (Ch)சேம்பலேன் கொலை வழக்கு’.

“என் குழந்தையை டிங்கோ தூக்கிச் சென்றுவிட்டது” என்று தன்னுடைய இரண்டு மாதக் கைக்குழந்தையை இழந்த லிண்டியின் கதறல் அன்று எவராலும் செவிசாய்க்கப் படவில்லை. அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்றும் தாயே குழந்தையைக் கொன்றுவிட்டு டிங்கோ மீது பழியைப் போடுகிறாள் என்றும் சொல்லி காவல்துறை அவளைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது. ஆயுள் தண்டனையும் பெற்றுத் தந்தது.

உலுருவில் லிண்டி அஸாரியாவுடன் 

அஸாரியா கொலைவழக்கு நடந்துமுடிந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆன பிறகும் கூட, இன்றளவும் பலருடைய ஆத்திரத்தையும் அதிருப்தியையும் பெற்றிருக்கும் போலித்தனமான குற்ற விசாரணையும், ஆட்சி அதிகாரத்தின் ஒரு தரப்பு வாதமும் அதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட அநீதியான தீர்ப்பும் என்றைக்குமே சரி செய்ய முடியாத சட்டச் சீர்கேடு என்பதில் சந்தேகமே இல்லை.

நடந்த எல்லாவற்றுக்கும் மௌன சாட்சியாய், மர்மத்தின் நீட்சியாய், மத்திய ஆஸ்திரேலியாவின் செம்மண் பாலையில் ஒற்றையாய் நின்றுகொண்டிருக்கிறது, 3.6 கி.மீ நீளமும், 1.9 கி.மீ அகலமும், 348 மீ. உயரமும், 9.4 கி.மீ. சுற்றளவும் கொண்ட, 600 மில்லியன் ஆண்டுகாலத் தொன்மை வாய்ந்த உலுரு என்னும் பிரமாண்டமான மணற்பாறை. கண்ணுக்குத் தெரியும் பாறையின் உயரம் மட்டுமே கணக்கு. மண்ணுக்குள் புதைந்திருக்கும் மீதத்தின் அளவு பல கி.மீட்டர்கள் இருக்கலாம் என்று அறியப்படுகிறது.

உலுரு (விக்கிபீடியா)

உலுருவின் உண்மை நிறம் சாம்பல்வண்ணம் என்றாலும் ஏராளமான இரும்புத்துகள்களைக் கொண்டிருப்பதால் தொலைவிலிருந்து பார்க்கும்போது துருவேறியது போல செங்காமட்டை நிறம் காட்டுவது இதன் சிறப்பு. செங்காமட்டை வண்ணம் மட்டுமல்லாது, செந்தழல் சிவப்பு, அடர்சிவப்பு, நீலம், ஊதா என ஒரே நாளில் பலவண்ணங்கள் காட்டி வசீகரிக்கும். சூரிய உதயத்தின்போதும் அஸ்தமனத்தின்போதும் இப்பாறை செக்கச்செவேலென்று காட்சியளிக்கும்.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஒற்றைப்பாறை என்னும் சிறப்பை உடைய உலுரு அப்பகுதியில் வசித்துவரும் ஆஸ்திரேலியப் பூர்வகுடி இனமான அனங்கு மக்களின் பாரம்பரிய மற்றும் ஆன்மீக நம்பிக்கையோடு தொடர்புடையது. உலுருவில் உள்ள குகைகளில். அனங்கு மக்களின் கனவுக்கால கதைகள் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களின் வயது ஐயாயிரம் வருடங்கள் இருக்கலாம். தற்போது உலுரு உலகப் பாரம்பரியக் களங்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

ஏன் உலுருவைப் பற்றி இவ்வளவு பிரஸ்தாபம்? ஏனெனில் லிண்டியின் வாழ்வில் நிகழ்ந்த துயர சம்பவத்துக்கு அதுவே ஆரம்பப்புள்ளி, அதுவே மையப்புள்ளி. அதுவே முற்றுப்புள்ளியும் கூட.

1980-ஆம் ஆண்டு லிண்டியும் மைக்கேலும் ஏடன் (7), ரீகன் (4), அஸாரியா (68 நாள்) என தங்களுடைய மூன்று குழந்தைகளோடு விடுமுறையைக் கொண்டாட குவீன்ஸ்லாந்தின் மவுண்ட் இஸாவிலிருந்து டார்வினுக்குப் புறப்பட்டனர். பதினாறு வருடங்களுக்கு முன்பு தன்னுடைய பதினாறாவது வயதில் ஏற்கனவே ஒரு முறை பார்த்திருந்த உலுருவை மீண்டும் பார்க்க விரும்பினார் லிண்டி. உலுருவின் மீதான ஈர்ப்பு அவரது வாழ்க்கையையே புரட்டிப்போடப் போகிறது என்று அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

உலுருவில் மூன்றுநாள் முகாம் திட்டமிடப்பட்டது. இரண்டாம் நாள் (17 ஆகஸ்ட் 1980) இரவுணவை கூடாரத்துக்குச் சற்றுத் தொலைவில் மைக்கேல் தயார் செய்துகொண்டிருந்தார். அங்கு முகாமிட்டிருந்த மற்றவர்களும் உணவுவேளைக்காக அங்கே கூடியிருந்தனர். லிண்டி குழந்தை அஸாரியாவைக் கூடாரத்தினுள் மென்பஞ்சுத் தொட்டிலில் தூங்கவைத்துவிட்டு உணவருந்த வந்த ஒரு நிமிடத்திலேயே குழந்தையின் அலறல் கேட்டது. லிண்டி கூடாரத்தை நோக்கிச் சென்றபோது டிங்கோ ஒன்று எதையோ வாயில் கவ்வியபடி கூடாரத்திலிருந்து வெளியே ஓடியதைப் பார்த்தார். இருட்டில் என்னவென்று புரியாமல் ஓடிப்போய்த் தொட்டிலைப் பார்த்தபோது அங்கே குழந்தை இல்லை. அடுத்த நொடியே லிண்டி கூக்குரலிட்டார், “என் குழந்தையை டிங்கோ தூக்கிச் சென்றுவிட்டது”

எல்லாப் பக்கமும் தேடப்பட்டது. காவல்துறையும் வந்து தேடியது. எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. குழந்தையின் உடல்கூட கிடைக்கவில்லை.

ஒரு வாரம் கழித்து கூடாரம் இருந்த இடத்திலிருந்து நான்கு கி.மீ. தூரத்தில் குழந்தை அஸாரியா அணிந்திருந்த ஆடைகள் மட்டும் கிடைத்தன, கழுத்துப் பக்கம் இரத்தக் கறையோடு. அதில் எந்த இடத்திலும் டிங்கோவின் பல் பதிந்த தடயம் இல்லை. எனவே ஆடைகளை ஆய்வு செய்த தடயவியல் அதிகாரிகள், யாரோ குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருப்பதாக, தங்களது புதிய கண்டுபிடிப்பைக் கூறினர். லிண்டி மற்றும் மைக்கேல் பக்கம் சந்தேகம் திரும்பியது.

லிண்டி மீண்டும் மீண்டும் சொன்ன டிங்கோ கதையை யாரும் நம்புவதற்குத் தயாராக இல்லை. அதற்கொரு முக்கியக் காரணம் இருந்தது. 

மைக்கேல், செவன்த் டே அட்வென்டெஸ்ட் திருச்சபையில் பாதிரியாராக இருந்தார். லிண்டியும் கடமை தவறாத ஒரு பாதிரியாரின் மனைவியாக திருச்சபைப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். போதாக்குறைக்கு லிண்டியின் அப்பாவும் செவன்த் டே அட்வென்டிஸ்ட் திருச்சபையின் பாதிரியாராக இருந்தவர்தான். இவ்வளவு போதாதா? மைக்கேல் மற்றும் லிண்டி சார்ந்திருந்த மதக்கோட்பாடு குறித்த ஐயப்பாடுகள் பொதுமக்களிடத்தும் காவல்துறையிடத்தும் புதுப்புது யூகங்களை உருவாக்கத் தொடங்கின. ஊடகங்கள் ஊதி ஊதிப் பெரிதாக்கின. குழந்தையை தாயே கொன்று கடவுளுக்குப் பலி கொடுத்திருக்கலாம் என்ற எண்ணங்கள் வலுப்பெற்றன. வழக்கையும் திசைதிருப்பின. டிங்கோவை அனைவரும் புறங்கையால் ஒதுக்கிவிட்டு லிண்டியையே குற்றவாளியாக்கினர்.

டிங்கோக்கள் ஆபத்தற்றவை என அப்போது கருதப்பட்டன

டிங்கோக்களின் வேட்டைக்குணம் பற்றியும் இதற்கு முன்பு சில டிங்கோக்களிடம் கண்டறியப்பட்ட மூர்க்கவியல்புகளையும் சுட்டிக்காட்டி முன்வைக்கப்பட்ட வாதங்கள் யாவும் ஜூரிகளால் நிராகரிக்கப்பட்டன. 15 டிசம்பர் 1980 முதல் 20 பிப்ரவரி 1981 வரை நடைபெற்ற விசாரணையின் முடிவில் லிண்டி குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் நேரடியாக ஒளிபரப்பான நீதிமன்ற நிகழ்வு அதுதான். ஆனால் காவல்துறையால் அத்தீர்ப்பை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

மறுவருடமே (13 செப்டம்பர் 1982) இரண்டாவது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. லிண்டி இந்த முறை தப்பிவிடக்கூடாது என்று அதிகாரிகள் பெருமுயற்சி மேற்கொண்டனர். லிண்டிக்கு எதிராக தடயங்கள் திரட்டப்பட்டன. அல்லது அவர்கள் திரட்டியவற்றைத் தடயங்களாக மாற்றினர். ஒரு பெரிய கதை ஜோடிக்கப்பட்டது.

முதல் விசாரணைக்குப் பிறகு லிண்டியும் மைக்கேலும்

லிண்டி காரில் வைத்துக் குழந்தையைக் கொன்றுவிட்டு, கூடாரத்துக்குச் சென்று ‘டிங்கோ என் குழந்தையைத் தூக்கிச் சென்றுவிட்டது’ என்று கூப்பாடு போட்டு அனைவரையும் திசைதிருப்பிவிட்டு, மீண்டும் காருக்கு வந்து குழந்தையின் உடலை அப்புறப்படுத்தியிருக்கிறார் என்று காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. முகாமில் அவரோடு இருந்த மற்ற சுற்றுலா பயணிகள், உலுரு பகுதியைச் சேர்ந்த பூர்வகுடி மக்கள், டிங்கோக்களைப் பற்றி நன்கறிந்த அப்பகுதியைச் சேர்ந்த தேசியப்பூங்கா பாதுகாவலர்கள் ஆகியோரது சாட்சியங்கள் எவையும் லிண்டியைக் காப்பாற்ற உதவவில்லை.

வழக்கின் முடிவில் (29 அக்டோபர் 1982) லிண்டி குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு அவருக்கு கடுமையான ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மைக்கேல் குற்றத்துக்கு உடந்தை என 18 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.  எனினும் மற்ற இரு குழந்தைகளுக்காக, அது ‘ஒத்திவைக்கப்பட்ட தண்டனை’ என்றானது.

சிறைக்கு அனுப்பப்பட்டபோது லிண்டி நிறைமாத கர்ப்பமாக இருந்தார். இரு வாரங்களுக்குப் பிறகு அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை தாயுடன் இருக்க சட்டம் மறுப்புத் தெரிவித்து, பிறந்த ஒரு மணி நேரத்திலேயே குழந்தையைப் பிரித்து தந்தையிடம் ஒப்படைத்தது. லிண்டி மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார். லிண்டியின் மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டன. வழக்கின் உண்மைத்தன்மையில் சந்தேகம் கொண்ட பொதுமக்கள் சிலர் லிண்டிக்கு ஆதரவாக குரல் எழுப்பத் தொடங்கினர். கமிட்டி அமைக்கப்பட்டு, அஸாரியா கொலைவழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது.

குழந்தை அஸாரியா காணாமற்போய் ஆறு ஆண்டுகள் கழித்து (1986) நம்பமுடியாத ஒரு அதிசயம் நடந்தது. உலுருவின் மீது ஏறும்போது தவறிக் கீழே விழுந்த சுற்றுலாப் பயணியின் உடலை மீட்கச் சென்றவர்களின் கண்ணில் அகப்பட்டது, மண்ணில் பாதி புதையுண்ட நிலையில் ஒரு குழந்தையாடை.

குழந்தைக்கு தான் அணிவித்திருந்ததாக லிண்டி குறிப்பிட்டிருந்த, ஆனால் மற்ற உடைகளோடு கிடைத்திராத ‘மேட்டினி ஜாக்கெட்’ எனப்படும் அந்த குட்டி ஆடை, அஸாரியா கொலைவழக்கில் மீண்டும் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. ஏராளமான டிங்கோக்களின் பதுங்கிடங்கள் காணப்பட்ட இடத்தில் குழந்தையாடை கிடைத்ததாலும், வேறு சில தகவல் சரிபார்ப்பினாலும் லிண்டி குற்றமற்றவர் என நிரூபணமானது. மூன்றரை வருடங்கள் கடுமையான சிறைத்தண்டனை அனுபவித்தப் பிறகு 7 பிப்ரவரி 1986 அன்று லிண்டி விடுதலை செய்யப்பட்டார். தொடர்ச்சியாக நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் 15 செப்டம்பர் 1988 அன்று லிண்டியும் மைக்கேலும் நிரபராதிகள் என்று தீர்ப்பு வெளியானது. 

விடுதலைக்குப் பிறகு லிண்டியும் மைக்கேலும்

ஆனால் ஆண்டுக்கணக்காக நடைபெற்ற வழக்குகளும் வழக்கு தந்த வலிகளும் அனுபவங்களும் சமுதாய அவமதிப்புகளும் கேலிகளும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்களும்  லிண்டியையும் மைக்கேலையும் வெவ்வேறு திசைகளில் நகர்த்திச் சென்றன. இருவரும் 1991-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று வேறு வேறு திருமண பந்தங்களில் இணைந்தனர்.

நீதியின் பேரில் மக்களுக்கு இருந்த நம்பிக்கை பொய்த்துப்போனதை சரிசெய்ய லிண்டி, மைக்கேல் தம்பதியினருக்கு அரசு தரப்பிலிருந்து 1.3 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் நஷ்ட ஈடாகக் கொடுக்கப்பட்டது. மிக முக்கியமாக, கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்குப் பிறகு அஸாரியாவின் இறப்புச் சான்றிதழில் இறப்புக்கான காரணம் ‘டிங்கோ’ என திருத்தி எழுதப்பட்டது.

திருத்தி எழுதப்பட்ட அஸாரியாவின் இறப்புச் சான்றிதழுடன் லிண்டி

வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு லிண்டி சொன்னது, “டிங்கோவை நாம் தாக்கினால் பதிலுக்கு நம்மைத் தாக்குமே தவிர மற்றபடி அதனால் எந்த ஆபத்தும் இல்லை என்று எந்த ஆஸ்திரேலியரும் இனிமேல் சொல்ல முடியாது. டிங்கோக்கள் எப்போதுமே ஆபத்தானவை.”

அஸாரியா கொலைவழக்கை ஆதாரமாகக் கொண்டு 1985-ஆம் ஆண்டு ஜான் ப்ரைசன் என்னும் ஆஸ்திரேலிய எழுத்தாளர், Evil Angels  என்ற நூலை வெளியிட்டார். அதை அடிப்படையாகக் கொண்டு 1988-ஆம் ஆண்டு 'Cry in the dark'  என்ற திரைப்படம் வெளியானது. அதன் பிறகு ஏராளமான புத்தகங்கள், தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

(படங்கள் ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியக இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.) 

23 March 2026

டிங்கோ கொலைகள் (2)

டிங்கோக்கள் தங்களை விட உருவில் பெரிய விலங்குகளை வேட்டையாடும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் மனிதர்களைக் கொல்லுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. பூர்வகுடி மக்களை டிங்கோக்கள் தாக்கியதாக இதுவரை எங்குமே பதிவாகவில்லை. காரணம் பூர்வகுடி மக்களின் வாழ்க்கையும் டிங்கோக்களின் வாழ்க்கையும் இணைகோடுகளாகவே பயணித்தனவே தவிர எந்தப் புள்ளியிலும் ஒன்றோடொன்று குறுக்கிடவில்லை.  

1. (G)கர்ரி தீவின் டிங்கோக்கள்

ஐரோப்பியக் குடியேற்றத்திற்குப் பிறகுதான் டிங்கோக்கள் மனிதர்களைத் தாக்கிய சம்பவங்கள் அங்கும் இங்குமாக அரங்கேறத் தொடங்கின. ஐரோப்பிய மக்களின் வாழ்க்கைமுறையும் டிங்கோக்களை அவர்கள் அணுகிய விதமும்தான் முக்கியக் காரணங்கள் எனலாம். 

டிங்கோக்களின் வாழ் எல்லைக்குள் அவர்களை அறியாமலேயே மனிதர்கள் தங்கள் வாழ்விடங்களை விரிவுபடுத்தினார்கள் அல்லது உணவு எளிதாகக் கிடைப்பதால் டிங்கோக்கள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் ஊடுருவத் தொடங்கின அல்லது இரண்டுமே எனலாம். 

ஐரோப்பிய வாழ்க்கைமுறையில் ஒன்றறக் கலந்தவை trekking, hiking, sailing போன்ற வெளிப்புற நடவடிக்கைகள். தனியாகவோ, இணையாகவோ, குழுவாகவோ, குடும்பமாகவோ  காடு, மலை, கடற்கரை, சமவெளி என ஏதாவதொரு இயற்கையான சூழலில் கூடாரம் அமைத்து முகாமிட்டு (Camping)  சில நாட்கள் தங்கியிருந்து தங்களைப் புதுப்பித்துத் திரும்புவது அவர்களது வழக்கம். முன்னேற்பாடாக அவர்கள் தங்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்களைக் கையோடு கொண்டுசெல்வதும், அந்தப் பகுதியில், இயற்கைச்சூழலில்  வசிக்கும் டிங்கோக்களை நட்பாக்கிக் கொள்ள அவற்றுக்கு உணவளிப்பதும் டிங்கோக்களின் குணத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்கத் தொடங்கின.

2001-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் விடுமுறைக்காலத்தின்போது (G)கர்ரி தீவைத் தெரிவு செய்து மகிழ்வோடு சுற்றுலா சென்றிருந்தது குவீன்ஸ்லாந்தைச் சேர்ந்த ஒரு குடும்பம். ஒன்பது வயது சிறுவன் க்ளின்டன் கேஜூம் அவனுடைய ஏழு வயது தம்பியும் தாங்கள் முகாமிட்டிருந்த இடத்துக்குப் பக்கத்தில் கடற்கரையோர மணல் மேடுகளில் சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு டிங்கோக்கள் சிறுவர்களைத் தாக்கத் தொடங்கின. 

2. டிங்கோவால் உயிரிழந்த சிறுவன் க்ளின்டன் கேஜ்

சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டுப் பெற்றோர் ஓடிவந்து காப்பாற்றுவதற்குள் க்ளின்டன் கேஜ் இரத்தவெள்ளத்தில் கிடந்தான். அவனைக் காப்பாற்றுவது சாத்தியமற்றுப் போனது. கை கால்களில் பலத்த கடிவாங்கியிருந்த அவனது தம்பி ஹெலிகாப்டர் மூலம் குவீன்ஸ்லாந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டான். அந்த இரண்டு டிங்கோக்களும் அரசு உத்தரவின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டன.

(G)கர்ரி தீவில் டிங்கோக்களால் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடைபெற்றாலும் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறுவனின் மரணம்தான் டிங்கோக்களால் ஏற்பட்ட கடைசி மரணமாக இருந்தது, பைப்பர் ஜேம்ஸின் மரணம் வரையிலும். 

3. டிங்கோ, செந்நாய் & ஓநாய் ஒப்பீடு

டிங்கோக்களும் ஓநாய்களையும் செந்நாய்களையும் போன்ற காட்டு விலங்குகளே. செந்நாய்களையும் ஓநாய்களையும் பார்த்தால் எப்படி மிகுந்த எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருப்போமோஅப்படிதான் டிங்கோக்களிடமும் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்கவேண்டும். நாய்தானே என்ற அலட்சியத்தினாலேதான் பல ஆபத்துகள் நிகழ்கின்றன. 

4. கர்ரி தீவின் எச்சரிக்கை அறிவிப்பு
இயல் வாழிடத்தில் காட்டு விலங்குகளுக்கே உரிய மூர்க்கத்தோடும் வேட்டையாடும் இயல்போடும் வாழும் டிங்கோக்களிடமிருந்து எச்சரிக்கையாக விலகியே இருக்குமாறும் டிங்கோக்களை ஈர்க்கும் எந்தச் செயலிலும் ஈடுபடாதிருக்குமாறும் (G)கர்ரி தீவின் சுற்றுலா பயணிகள் எப்போதும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.  

  • தனியாகப் போகாதீர்கள்.  குழுவாகச் செல்லுங்கள்.  தற்காப்புக்காக எப்போதும் கையில் ஒரு குச்சியை வைத்திருங்கள். 

  • குழந்தைகளை எப்போதும் கையெட்டும் தொலைவிலேயே வைத்திருங்கள். ஒருவர் மாற்றி ஒருவர் குழந்தைகளை எல்லா நேரமும் கண்காணித்துக்கொண்டே இருங்கள்.

  • டிங்கோக்களுக்கு மறைமுகமாகவோ நேரடியாகவோ  உணவளிக்காதீர்கள். 

  • ஓடாதீர்கள் (உடற்பயிற்சிக்காக என்றாலுமே). ஓடுவது டிங்கோக்களின் கவனத்தை ஈர்த்து அவை துரத்த ஆரம்பிக்கலாம். ஓடினால் துரத்துவது என்பது பொதுவாகவே நாய்களின் இயல்பு. கூட்டமாய் வேட்டையாடும் காட்டுநாய்களுக்குச் சொல்ல வேண்டுமா?
  •    
  • கம்பிவேலியிடப்பட்ட பகுதிக்குள்ளேயே முகாம் இடுங்கள்.  உணவு உண்ணுங்கள். மிச்சமீதி உணவுகளை அப்படியே விட்டுச் செல்லாதீர்கள். 

  • கம்பிவேலிக்கு வெளியில் கூடாரம் அமைத்து முகாமிட்டிருப்பவர்கள் தாங்கள் கொண்டுவரும் உணவுப் பொருட்களைக் கண்ட இடத்தில் போட்டுவைக்காமல், அவற்றின் வாசம் பரவாமல் தகுந்த பாத்திரங்களில் அல்லது பாதுகாப்பான உணவுப் பெட்டியில் பத்திரப்படுத்துங்கள். 

  • உண்ட பிறகான உணவுமீதங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துங்கள்.  


தூண்டிலிட்டு மீன்பிடிப்பவர்கள் கூட ஒருவராகச் செல்லாமல் இருவராகச் செல்வதே அத்தீவின் வழக்கம். காரணம், ஒருவர் தூண்டிலில் கவனத்தைக் குவித்திருக்கும்போது, ஏற்கனவே பிடித்துவைத்திருக்கும் மீன்களை டிங்கோக்கள் திருட்டுத்தனமாகவோ, முரட்டுத்தனமாகவோ கவ்விக்கொண்டு செல்வது அங்கு வழக்கமான நடக்கும் விஷயம் என்கிறார்கள்.

5. டிங்கோ 

டிங்கோக்களுக்கு மட்டுமல்ல, எல்லா விலங்குகளுக்கும் அவற்றால் உண்ணக்கூடிய எல்லாமே உணவுதான். முக்கியமாக காட்டுவிலங்குகள். அவை எந்தக் கட்டுப்பாட்டுக்கும் பழக்கப்படாதவை. எந்த ஆணைகளுக்கும் உடன்படாதவை. 

உணவுக்காக டிங்கோக்கள் மனிதர்களின் முகாம்களைச் சுற்றிவரத் தொடங்கின.  உணவு கிடைக்காதபோது மனிதர்களைத் தாக்கவும் துணிந்தன.  கூடாரங்களைத் தங்களுடைய கூரிய பற்களால் கிழித்து உள்ளே புகுந்து கிடைப்பதைக் கவ்விச் செல்லவும் அவை தயங்குவதில்லை, அது பச்சிளம்சிசுவாக இருந்தாலும். ஆம். அப்படியொரு சம்பவம் 1980-ஆம் ஆண்டு நடைபெற்றது. டிங்கோக்களை அவ்வளவு சாதாரணமாக எடைபோட்டுவிடக்கூடாது என்பதைப் பொட்டில் அறைந்தாற்போல் உணர்த்திய அதிபயங்கர சம்பவம் அது.  

நினைத்தாலே நெஞ்சு பதறும் அச்சம்பவம் பற்றி விரிவாக அடுத்தப் பதிவில்.

தொடரும்...

(படங்கள் உதவி Pixabay)


14 March 2026

டிங்கோ கொலைகள் (1)

டிங்கோ கொலைகள் என்று மொட்டையாய்ச் சொன்னால் என்ன புரியும்? டிங்கோக்கள் கொல்கின்றனவா அல்லது கொல்லப்படுகின்றனவா? பதிவின் சாரம் இரண்டுக்கும் பொருந்துவதால் இத்தலைப்பு.

பரிதாப மரணமடைந்த பைப்பர் ஜேம்ஸ் (படம்- இணையம்)

இரண்டு மாதங்களுக்கு முன்பு 19-01-2026 அன்று , ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த (G)கர்ரி தீவில் (முந்தைய பெயர் ஃப்ரேஸர் தீவு) டிங்கோ கூட்டத்தால் சூழப்பட்ட நிலையில் ஒரு இளம்பெண்ணின் பிரேதம் கண்டுபிடிக்கப்பட்டது. கனடாவைச் சேர்ந்த பைப்பர் ஜேம்ஸ் என்னும் 19 வயதே ஆன இளம்பெண்ணின் துர்மரணம் ஆஸ்திரேலியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. காலை ஐந்து மணிக்கு எழுந்து நண்பர்களிடம் கடலில் நீந்தப் போவதாகச் சொல்லிச் சென்ற பெண்ணை ஆறரை மணி வாக்கில், கடற்கரையில் பிரேதமாக, பத்துப் பன்னிரண்டு டிங்கோக்களுக்கு மத்தியில் குதறப்பட்டக் காயங்களுடன் காண நேர்வது எவ்வளவு கொடுமை!

ஆஸ்திரேலியாவைச் சுற்றிப் பார்க்கும் பெருத்த ஆர்வத்தோடும் வாழ்நாள் கனவோடும் ‘Working Holiday Visa’ எனப்படும் ஒரு வருட கால,  பணி மற்றும் சுற்றுலாவுக்கான நுழைவாணை பெற்று கனடாவிலிருந்து (G)கர்ரி தீவுக்கு வந்த இளம்பெண்தான் பைப்பர் ஜேம்ஸ். ஆஸ்திரேலியாவின் அழகிய தீவான (G)கர்ரிக்கு வந்து ஆறு வாரங்களே பணியாற்றிய நிலையில் இப்படியொரு துர்மரணம் சம்பவித்தது அனைவரையுமே இன்றுவரை  அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பைப்பர் ஜேம்ஸின் மரணத்துக்கு டிங்கோக்கள் காரணமா? வேறு யாரும் காரணமா? இயற்கை மரணமா? என பல கோணங்களிலிருந்தும் துப்பு துலக்கப்பட்டது. அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அவரது மரணத்துக்கு மனிதர் யாரும் காரணமில்லை என்பது மட்டுமல்ல, டிங்கோக்களே காரணம் என்பதும் பிரேதப் பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது. 

டிங்கோ

ஆறு வார கால விசாரணையின் இறுதியில் சென்ற வாரம் மரண விசாரணை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறிக்கையில் டிங்கோக்கள் தாக்கியதாலோ அல்லது டிங்கோக்களிடமிருந்து தப்பிக்கமுயன்றோ காயமுற்ற பைப்பர் ஜேம்ஸ் நீந்த இயலாமல் நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணம் என்று மரணத்துக்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கர்ரி தீவு டிங்கோக்களின் வேட்டை உத்திகளுள் ஒன்று, இரையைச் சுற்றி வளைத்து, தப்பிவிடாமல் இருக்க, கடலை நோக்கித் தள்ளிய பிறகு, கூட்டமாய் சூழ்ந்து வேட்டையாடுவது. அதுவே பைப்பர் ஜேம்ஸ் விஷயத்திலும் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பைப்பர் ஜேம்ஸ் மரணத்துக்கு டிங்கோக்களே காரணம் என்ற முதல் கட்ட விசாரணையின் முடிவில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை முன்னிறுத்தி, பைப்பர் ஜேம்ஸைத் தாக்கிய டிங்கோ கூட்டத்தை ஒட்டுமொத்தமாக (கருணைக்)கொலை செய்ய அவசர அரசாணை பிறப்பிக்கப்பட்டு மறு வாரமே பத்து டிங்கோக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டுவிட்டன.  

உண்மையிலேயே டிங்கோக்கள்தான் பைப்பர் ஜேம்ஸ் மரணத்துக்குக் காரணமா என்பது உறுதி செய்யப்படாத நிலையில், பத்து டிங்கோக்களைக் கொல்ல அரசு உத்தரவிட்டதும் உடனடியாக எட்டு டிங்கோக்கள் கொல்லப்பட்டிருப்பதும் பலருக்கும் அதிருப்தியையும் கோபத்தையும் உண்டாக்கியுள்ளது. பைப்பர் ஜேம்ஸ் மரணம் நேர்வதற்கு மூன்று நாட்கள் முன்பும் (16-1-26) ஒரு டிங்கோ சுற்றுலா பயணிகளை மூர்க்கமாகத் தாக்குவதாகச் சொல்லி கொல்லப்பட்டது.

(G)கர்ரி தீவின் ஒட்டுமொத்த டிங்கோக்களின் எண்ணிக்கை சுமார் 200 மட்டுமே என்றும் சுமார் 20-30 குழுக்களாக அவை வசிக்கின்றன என்றும் அறியப்படுகிறது. (G)கர்ரி தீவின் மிக முக்கிய உயிரினமாக அறியப்படும் டிங்கோக்களைக் கொன்ற அரசின் செயலுக்கு, அத்தீவின் பாரம்பரிய உரிமையாளர்களான ‘பட்சல்லா’ பூர்வகுடியினர் பெரும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். தங்களைச் சற்றும் கலந்தாலோசிக்காமல் குவீன்ஸ்லாந்து அரசு எடுத்த இந்த அவசர நடவடிக்கை, கடைசி நிமிடத்தில்தான் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் அதில் தங்களுக்கு துளியும் உடன்பாடில்லை என்றும் பட்சல்லா பூர்வகுடி தலைவர் கருத்துத் தெரிவித்துள்ளார். 

(G)கர்ரி தீவின் சுற்றுலா பயணிகள் மூலம் குவீன்ஸ்லாந்து மாநில அரசுக்கு ஆண்டுதோறும் கிடைக்கும் மில்லியன் கணக்கான வருவாயை, டிங்கோக்கள் காரணமாக அவ்வளவு எளிதில் இழக்க விரும்புமா என்ன? 2024-ஆம் ஆண்டில் (G)கர்ரி தீவின் சுற்றுலா பயணிகள் மூலம் ஈட்டிய வருமானம் சுமார் 876 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஐயாயிரத்து அறுநூறு கோடி) என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

டிங்கோ - கேள்விப்படாத பெயராக இருக்கிறதே. அப்படி என்றால் என்ன என்று கேட்பீர்கள். டிங்கோ என்பவை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வெகு மூர்க்கமான காட்டு நாயினம். பார்ப்பதற்கு சாதாரண வளர்ப்பு நாய்கள் போலத் தெரிந்தாலும் அவற்றின் குணம் முற்றிலும் மாறுபட்டது. சாதாரண நாய்களைப் போல இவற்றைப் பழக்க இயலாது. ஓநாய்களைப் போலவும், செந்நாய்களைப் போலவும் கூட்டம் கூட்டமாக இரையைத் துரத்தி, சாதுர்யமாக வளைத்து வேட்டையாடும் இயல்புடையவை.

டிங்கோக்களின் வசிப்பிடங்கள் (படம் - இணையம்)

ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில் குறிப்பிட்ட சில பகுதிகள் தவிர்த்து பெரும்பாலான பகுதியிலும், முக்கியமாக பிரிஸ்பேனுக்கு வடக்கே சுமார் 250 கி.மீ. தூரத்தில் உள்ள (G)கர்ரி தீவிலும் காணப்படுகின்றன. வசிக்கும் இடத்தின் பூர்வகுடி மொழியைப் பொறுத்து Boolomo, Dwer-da, Joogoong, Kal, Kurpany, Maliki, Mirigung, Noggum, Papa-inura, Wantibirri என பல்வேறு பூர்வகுடிப் பெயர்கள் உள்ளன. (G)கர்ரி தீவில் அதன் பெயர் வோங்காரி (Wongari).  ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியின் பூர்வகுடி மொழியான தாருக் மொழியில் குறிப்பிடப்படும் ‘டிங்கோ’ (Dingo) என்ற சொல்லே ஐரோப்பியக் குடியேறிகளால் பொதுச்சொல்லாகப் புழங்கப்பட்டு, ஆங்கிலத்திலும் ஏற்கப்பட்டுள்ளது. Canis lupus dingo என்பது இதன் அறிவியல் பெயர்.

வாம்பேட், கொவாலா, கங்காரூ & க்வோக்கா

கங்காரூ, வாம்பேட், கோவாலா போன்ற பூர்வீக விலங்குகளைப் போல டிங்கோக்களுக்கு ஆஸ்திரேலியாவில் பன்னெடுங்கால வரலாறு கிடையாது. டிங்கோக்கள் ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்புக்கு அறிமுகமாகி சுமார் ஐயாயிரம் வருடங்கள் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஆனால் குறைந்தது மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளாவது இருக்கலாம் என்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது. அது என்ன கணக்கு? மூவாயிரத்து ஐநூறு? ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில் கிடைத்துள்ள மிகத் தொன்மையான டிங்கோ எலும்புப் படிமத்தின் வயது மூவாயிரத்து ஐநூறு. எனவே மூவாயிரத்து ஐநூறு என்பது உறுதியான கணக்கு. அதற்கு முந்தைய டிங்கோ காலம் பற்றித் துல்லியமாக வரையறுக்க இயலவில்லை.


டிங்கோக்கள்

ஆஸ்திரேலியாவின் கானுயிர் சமன்பாட்டுக்கு உதவக்கூடிய கொன்றுண்ணிகளுள் தற்போது பெரிய அளவில் பங்கு வகிப்பவை என்றால் அவை டிங்கோதான். ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில், மக்கள் வசிக்காத பொட்டல்களிலும், புதர்க்காடுகளிலும்வளர்ப்பாரற்றுத் திரியும் ஆயிரக்கணக்கான ஆடு, மாடு, மான், முயல் போன்ற அந்நிய விலங்குகளின் எண்ணிக்கை, டிங்கோக்களால்தான் பெருமளவு கட்டுப்படுத்தப்படுகிறது. அதே சமயம், ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில் வாழ்ந்திருந்த மிகப்பெரிய கொன்றுண்ணி இனங்களான தைலாஸினும், டாஸ்மேனிய டெவிலும் (ஐரோப்பியர் குடியேறியபோது இவ்விலங்கினம் டாஸ்மேனியா தீவில் மட்டுமே காணப்பட்டதால் ‘டாஸ்மேனிய டெவில்’ என்ற பெயர் இடப்பட்டது.) ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில் முற்றிலுமாக அழிந்துபோனதற்கு முக்கியக் காரணம் டிங்கோக்கள் என்ற மறுக்கமுடியாத உண்மையும் உள்ளது.

டாஸ்மேனிய டெவில்
தொடரும்...

28 February 2026

என் ஜன்னலுக்கு வெளியே...

கோடைக்காலத்தின் கடைசி நாள் இன்று. கடந்த சில நாட்களாகவே கோடை மழை விட்டுவிட்டுப் பெய்துகொண்டிருக்கிறது. இந்நாட்களில் தினமும் காலையில் சமையலறையின் ஜன்னல்திரையை விலக்கியவுடனேயே நான் காணும் அழகிய காட்சி ஒன்று உண்டு.

1. பெரிய வலைக்கு மத்தியில் தோட்டத்துச் சிலந்தி

ஜன்னலுக்கு மேலே உள்ள sunshade-க்கும் fence-க்கும் நடுவில் இழைகள் இழுக்கப்பட்டு சந்துப்பக்கம் gate போட்டது போல் பின்னப்பட்டிருக்கும் பென்னம்பெரிய சிலந்திவலை. குறுக்களவு சுமார் ஒன்றரை மீட்டராவது இருக்கும். சமைக்கும்போதும், சமையலறைப் பக்கம் வரும்போதும் போகும்போதும் ஜன்னல் வழியே அதை வேடிக்கை பார்ப்பதும் படம் எடுப்பதும் சுவாரசியமான பொழுதுபோக்கு.

2. எவ்வளவு அழகான நுட்பமான பின்னல் திறன்

முன்பெல்லாம் சிலந்திகள் மீது பயம் இருந்தது. ஆனால் அவற்றைப் பற்றி நன்கு அறிந்துகொண்ட பிறகு பயம் போய் பாசம் வந்துவிட்டது. எரிச்சல் போய் எச்சரிக்கை உணர்வு மட்டுமே எஞ்சியிருக்கிறது. 

3. சிலந்தி வலையில் மழைத்துளிகள்

மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு என்றார் கவிஞர். நான் சிலந்திவலைப் பின்னலை அழகென்பேன். லேசான மழையெனில் கடுகு போன்ற நுண்ணிய நீர்த்திவலைகள் மணிமணியாய் ஒட்டிக்கொண்டிருக்கும். சற்றுப் பெருமழை எனில் இன்னும் கொஞ்சம் பெரிய நீர்த்திவலைகள். சில சமயம் பொட்டுப் போல் சொட்டும் நீர்த்துளிகள்!

4. நீர்த்துளிகளின் கனம் தாளாமல் தொங்கும் சிலந்தி வலை

5. மணிச்சரம் போல எவ்வளவு அழகு

6. நீர்த்துளிகளோடு சூரிய ஒளியில் ஒளிரும் சிலந்தி வலை

7. இயற்கையின் அற்புதத்தை என்னவென்று சொல்வது? 

8. மழைத்துளிகளோடு சிலந்திவலையைப் பார்க்கும்போது
இந்த ஆபரணம்தான் நினைவுக்கு வருகிறது
(படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது)

முத்துமுத்தாய் நீர்த்துளிகளோடு வலைப்பின்னல் காற்றில் அசையும்போது முத்துச்சரம் கோர்த்த அலங்காரத் தோரணவாயில் போல்... அழகுநடைப் பெண்டிர் இடையணிந்த முத்துமணி மேகலை போல்... அழகோ அழகு.   

9. வலையில் சிக்கிய இரை

சந்துப் பக்கம் போகவேண்டும் என்றால் கவனமாகக் குனிந்துதான் போகவேண்டும். இல்லையென்றால் சிலந்தி வலைப்பின்னலில் நாமும் சிக்கிக்கொள்வோம். சிலந்திக்கு இரையாகும் வாய்ப்பில்லை என்றாலும் கடினமாகவும் ஒட்டும்தன்மையுடனும் இருக்கும் இழைகளை அறுத்து விடுபடுவது அவ்வளவு சுலபமாக இருக்காது. நமக்கே இப்படி என்றால் சிறு பூச்சிகளுக்கு சொல்லவே வேண்டாம். அந்தப் பக்கமாகப் பறக்கும் எந்தப் பூச்சியும் சிலந்திவலைக்குள் சிக்கிவிடும்.

10. சென்ற ஆண்டின் சிலந்தி

பார்க்கத்தான் இந்தச் சிலந்திகள் பயங்கரமாகத் தோற்றம் தருகின்றனவே தவிர, விஷம் கிடையாது. இவற்றால் நமக்கு எந்த ஆபத்தும் கிடையாது. சொல்லப்போனால் மிகப்பெரும் நன்மை உண்டு. இந்தச் சிலந்திகள் வீட்டுக்குள்ளோ கட்டிடங்களுக்குள்ளோ வாழாது. மரம் செடிகள் அடர்ந்த இடங்களிலும், வனப்பகுதிகளிலும் பூங்காக்களிலும் மட்டுமே காணப்படும். பெரிய சக்கரம் போன்ற வலையைப் பின்னுவதாலும் ஆஸ்திரேலியத் தோட்டந்தோறும் தவறாமல் காணப்படுவதாலும் Australian Garden orb weaver என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் அறிவியல் பெயர் Hortophora transmarina. ‘Orb weaver’ வகை சிலந்திகள் தமிழில் ‘வட்ட நெசவுச் சிலந்திகள்’ என்று குறிப்பிடப்படுகின்றன.

பெண் சிலந்தி உருவத்தில் பெரியது. அது சுமார் 2.5 செ.மீ. உடல்நீளம் கொண்டிருக்கும். அதோடு ஒப்பிடும்போது ஆண் சிலந்தி அதில் பாதியளவுதான் இருக்கும்.

11. வித்தியாசமான நிறங்களில் தோட்டச் சிலந்திகள்

இந்தத் தோட்டத்துச் சிலந்திகளிடம் ஒரு சிறப்புத்தன்மை உண்டு. இவை வளர் உருமாற்றத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் புற வன்கூட்டை (exoskeleton) உரிக்கும் தன்மை உடையவை. அதுவல்ல விஷயம். அப்படி புற வன்கூட்டை உரிக்கும் ஒவ்வொரு முறையும், பகல் பொழுதுகளில் தான் மறைந்து வசிக்கும் இடத்தின் பின்னணிக்கேற்ப தன்னுடைய நிறத்தை பழுப்பு, சாம்பல், அடர்பழுப்பு, அடர்சாம்பல் என பொருத்தமாக மாற்றிக்கொள்ளும் வல்லமை படைத்தவை. அப்போதுதானே எதிரிகளின் கண்ணில் படாமல் இருக்க முடியும்? அவ்வளவு பெரிய வலையைப் பின்னி வைத்தாலும் வலையில் காவலுக்கு இல்லாததன் காரணமும் அதுதான். யார் அந்த எதிரி? வேறு யார்? பூச்சி பிடிக்கும் பறவைகள்தாம்.

 

12. உலர்ந்த பூவில் உறங்கும் சிலந்தி

மேலே இருக்கும் படத்தில் காய்ந்த பூ மட்டுமே கண்ணுக்குத் தெரியும். தோட்டத்துச் சிலந்தியும் இருக்கிறது என்று நான் சொல்லாவிடில் உங்களுக்குத் தெரியாது. அவ்வளவு துல்லியமான உருமறைப்புத்திறன்!

13. இவ்வளவு பெரிய வலையை தினமும் பின்னுவதென்றால்
எவ்வளவு ஆற்றல் தேவைப்படும்!

தோட்டத்துச் சிலந்தி ஒவ்வொரு நாளும் மாலை இருள் கவியத் தொடங்கும் நேரத்தில் புதிய வலையைப் பின்னும். இரவுநேரப் பூச்சிகள் அதில் சிக்கி உணவாகும். சிதைவுற்ற வலையை மறுநாள் விடியற்காலையில் பகல்வேட்டைக்குச் சீரமைக்கும் அல்லது புதிதாய்ப் பின்னும். தோட்டத்துச் சிலந்தியை பகல் பொழுதுகளில் எப்போதாவதுதான் வலைக்கு மத்தியில் பார்க்கமுடியும். தரையைப் பார்த்தபடி தலைகீழாகக் காட்சியளிக்கும். பெரும்பாலும் வலையை ஒட்டி ஏதாவது ஒரு செடியில் அல்லது சுவரோரம் அல்லது எங்காவது இடுக்கில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்.

14. இலைமீது ஓய்வெடுக்கும் தோட்டச் சிலந்தி

15. சுவரோரம் பகல்பொழுது உறக்கம்

ஆண் தோட்டச் சிலந்திகள் இவ்வளவு பெரிய வலை பின்னுவதில்லை. அவை பருவ முதிர்ச்சி வரும்வரை குட்டியாக வலை பின்னி அதில் கிடைக்கும் பூச்சிகளைத் தின்று வளரும். பருவ முதிர்ச்சி அடைந்தவுடன் பெண் சிலந்திகளைத் தேடிச் சென்று அவற்றின் பெரிய வலையின் ஒரு மூலையில் அவற்றுக்குத் தெரியாமலேயே வாழத் தொடங்கிவிடுகின்றன. வலையில் சிக்கும் இரையைத் திருடித் தின்றும் ஈரப்பசையுள்ள வலையின் இழைகளைத் தின்றும் தங்களுக்குத் தேவையான உணவையும் சத்துக்களையும் பெறுகின்றன. 

ஏன் ஒளிந்துவாழ வேண்டும்? ஏன் திருடித் தின்னவேண்டும்? நேருக்கு நேர் சென்றால் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் முன்பே இணைக்கு இரையாகிவிடுவோம் என்பது ஆண் சிலந்திக்கு நன்றாகவே தெரியும். எப்படியும் இரையாகப் போவது உறுதி. அதற்கு முன்பு தன்னுடைய வம்சத்தை விருத்தி செய்யவேண்டும் என்ற இலக்குடனும் பொறுமையுடனும் காத்திருக்கும். தக்க சமயம் வரும்போது செயலில் இறங்கும். கலவியின்போதே ஆண் சிலந்தி பெண் சிலந்திக்கு இரையாகிவிடும். இந்த இயற்கை நியதி பெரும்பாலான சிலந்தி இனங்களிடம் காணப்படுகிறது. தோட்டத்துச் சிலந்தியும் விதிவிலக்கல்ல.

 

16. கௌபாய் வண்டு

படத்தில் காணப்படுவது Cowboy beetle எனப்படும் மிகப்பெரிய வண்டினம். கௌபாய்களின் இடைவார் போலக் காணப்படுவதால் இப்பெயராம். சுமார் ஒரு அங்குல நீளத்தில் பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில் காணப்படும். இவற்றின் உணவு பூக்களின் தேன். ஆனால் இவற்றின் லார்வாக்களின் உணவோ மக்கிய பொருட்கள். எனவே இந்த வண்டுகள் மண், மக்கிய இலைதழைகள், மரச்செதில்கள் போன்றவற்றுக்குள் தங்கள் முட்டைகளை இடும். முட்டைகள் பொரிந்து லார்வாக்கள் மண்ணுக்குள்ளேயே மக்கியப் பொருட்களைத் தின்று வளரும். வளர்ந்தபின் கூட்டுப்புழுவாகி கோடைக்காலத்தில் வண்டுகளாக வெளிவரும். 

17. தோட்டச்சிலந்தியின் வலையில் சிக்கிய கௌபாய் வண்டு

கடந்த சில நாட்களாகவே தோட்டத்துப் பக்கம் போகும்போது தலையை ஒட்டி விர்..விர்..என்று இந்த வண்டுகள் பறந்துபோய்க் கொண்டிருந்தன. நம்மை ஒன்றும் செய்யா என்றாலும் அந்தச் சத்தமும் நம் தலையையும் முகத்தையும் ஒட்டி அவை பறக்கும் வேகமும் பயத்தில் உடல் சிலிர்க்கவைக்கும். அப்படிப் பறக்கும் வண்டுகளுள் தினமும் ஒன்றிரண்டாவது இந்தத் தோட்டச் சிலந்தியின் வலையில் மாட்டிக்கொள்ளும். வண்டு சிக்கிய மறு நொடியே சிலந்தி ஓடிவந்துவிடும். இல்லையென்றால் வண்டு தப்பித்துவிடுமே. 

18. இரையை கிடுகிடுவென்று சுருட்டும் சிலந்தி

சிலந்தி வலை பின்னும்போது ஒற்றை இழையையும் இரையைச் சுருட்டும்போது எண்ணற்ற இழைகளையும் பயன்படுத்துவதைக் கவனித்தேன். எத்தனை இழைகள் என்று எண்ண முடியவில்லை. அவ்வளவு வேகம்!

19. எத்தனை இழைகள் என்று கணிக்க முடிகிறதா?

கிடுகிடுவென்று
பொட்டலம் கட்டுவதுபோல் தன் உடலிலிருந்து வெளிப்படும் எண்ணற்ற இழைகளைக் கொண்டு இரையைப் பொட்டலம் கட்டி பத்திரப்படுத்திவைத்துவிட்டு பழையபடி தன்னுடைய மறைவிடத்துக்குத் திரும்பிவிடும். பிறகு வந்து ஆசுவாசமாகத் தின்னும்.

ஒரு தடவை cowboy வண்டு சிக்கிக்கொண்டபோது எப்போதும் போல சிலந்தி பாய்ந்துவந்து இழைகளால் சுற்றிப் பத்திரப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டது. சிக்கிய வண்டின் கால்கள் அசைந்துகொண்டே இருந்தன. அது உயிருடன் இருப்பது தெரிந்து அதன் காதலனோ நண்பனோ தெரியவில்லை, இன்னொரு வண்டு வந்து அதைக் காப்பாற்ற என்னென்னவோ முயற்சி செய்தது. 

20. சிக்கிய வண்டைக் காப்பாற்றும் முயற்சியில் மற்றொன்று

21. தானும் வலையில் சிக்கிவிடாமல் வெகு கவனமாக...

22. எவ்வளவு முயற்சி செய்தும் பலன் இல்லை

ஒரு பக்கம் பாவமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆச்சர்யமாகவும் இருந்தது. சிலந்தி அந்த இன்னொரு வண்டை எதுவுமே செய்யவில்லை. வெகுநேரம் முயற்சி செய்துவிட்டு எந்தப் பலனும் இல்லாததால் அந்த இரண்டாவது வண்டு பறந்துபோய்விட்டது. 

தோட்டச் சிலந்திகளிடம் சிக்கிய பூச்சிகளுள் 

என் கேமராவில் சிக்கிய சில...

23. இரையாக பூவண்டு

24. இரையாக சில்வண்டு

25. இறக்கை வைத்த எறும்புகள்

26. இரையான ஐரோப்பியத் தேனீ

27. சிலந்தியின் இரையை மொய்க்கும் திருட்டு ஈக்கள்

28. இரையான வண்டும் திருட்டு ஈக்களும்

29. வலையில் சிக்கிய ராணி எறும்பு

30. இரையாக ஐரோப்பியத் தேனீயும் திருட்டு ஈக்களும்
31. வலையில் சிக்கித் தொங்கும் சோல்ஜர் வண்டு

சிலந்திகள் இரையைக் கடித்துத் தின்பதில்லை. திரவ ஆகாரம் மட்டுமே. எனவே பூச்சிகளின் உடலிலுள்ள சாற்றை உறிஞ்சிவிட்டு சக்கையை கீழே போட்டுவிடும்.

கோடைக்காலம் முடியும் தருவாயில் பெண் சிலந்தி பட்டுப்போன்ற இழைகளால் ஒரு பையை உருவாக்கி அதற்குள் முட்டைகளை இடும். முட்டைப்பை கீழே விழுந்துவிடாமல் ஏதேனும் கிளை அல்லது பொருளோடு பசைகொண்ட இழைகளால் இணைக்கப்பட்டிருக்கும். 

32. தோட்டச் சிலந்திக் குஞ்சுகள் கலையும் தருணம்

33. எள்ளளவே ஆன தோட்டச் சிலந்திக் குஞ்சுகள்

இலையுதிர்காலத்தில் முட்டைகள் பொரிந்து ஆயிரக்கணக்கான சிலந்திக் குஞ்சுகள் வெளிவரும். அதற்குள் தாய்ச் சிலந்தி இறந்துபோயிருக்கும். சிலந்திக்குஞ்சுகள் முதலில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து பந்துபோல் காட்சியளிக்கும். பிறகு அவை தனித்தனியாகப் பிரிந்துசென்று ஏதேனும் மரம் செடிகளுக்கிடையில் குட்டியான வலைகளைப் பின்னி, முடிந்தவரை இரைகளைப் பிடித்து குளிர்காலத்தைக் கழிக்கும். ஆயிரக்கணக்கான முட்டைகளிலிருந்து வந்தாலும் குறிப்பிட்டக் கட்டத்தைக் கடந்து முழு வளர்ச்சி அடையும் சிலந்திகளின் எண்ணிக்கை வெகு குறைவாகவே இருக்கும். வசந்த காலத்தில் அவை விரைவாக வளர்ச்சி அடைந்து கோடைக்காலம் தொடங்கும்போது பருவ முதிர்ச்சி அடைந்திருக்கும். மற்றுமொரு வாழ்க்கைச் சுழற்சி ஆரம்பமாகும்!    

34. அழகிய வட்ட நெசவு வலைப்பின்னல்

கடந்த பத்தாண்டுகளாக தோட்டத்தில் இவற்றைப் பார்க்கிறேன். ஒரு வருட காலம்தான் இவற்றின் வாழ்நாள். அதற்குள் தோட்டத்துக்கு எவ்வளவு நன்மையைச் செய்துவிட்டுச் செல்கின்றன!

இந்தப் பதிவில் வழக்கத்துக்கு மாறாக ஏராளமான படங்களை இணைத்திருக்கிறேன். எல்லாமே தோட்டத்துச் சிலந்தி தொடர்பான படங்கள். இன்னும் கூட ஏராளமாக உள்ளன. சரி, போதும் என்று என்னை நானே கட்டுப்படுத்தி நிறுத்திக் கொள்கிறேன். :)))

*****