26 October 2025

ஆஸ்திரேலியப் பறவைகள் கணக்கெடுப்பும் ஆச்சர்யம் தந்த கங்காரூக்களும்

1. அண்டங்காக்கை (Australian raven)

ஊரே தீபாவளிக் கொண்டாட்டத்தில் தீவிரமாக இருக்க, எனக்கோ கடந்த ஏழு நாட்களும் கண்ணும் கவனமும் பறவைகளின் மீது மட்டும்தான்.  பறவைகள் என்றால் சும்மாவே ஆடுவேன். இதில் கணக்கெடுப்பு என்ற சலங்கையைக் கட்டிவிட்டால் ஆட்டத்துக்கு கேட்கவேண்டுமா? கிளை உரசும் சத்தம் கூட கிளிச்சத்தமோ என்று எண்ணும் அளவுக்கு பறவைப் பித்து ஆட்கொண்டிருந்தது. :) 

வீட்டின் கொல்லைப்புறத்தில் ஆரம்பித்து, சவுக்கும் யூகலிப்டஸ் மரங்களும் அடர்ந்த நடைபாதை, ஓடைக்கரை, சதுப்புநிலம், ஏரிகள், குளங்கள், பூங்காக்கள், இயற்கைக் காப்பகங்கள் என வெவ்வேறு இடங்களுக்குச் சென்று ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று பட்டியலாவது சமர்ப்பித்தேன்.

2. என்னுடைய கணக்கெடுப்பின் முடிவு

ஒரு வார காலத்தின் இறுதியில் 62 பறவையினங்களும் 2016 பறவைகளும் என்னுடைய ஆவணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.  

மேலும் 20-25 பறவையினங்களை அறிவேன். ஏற்கனவே பார்த்து படங்களும் எடுத்திருக்கிறேன். சோதனையாக இந்த ஒரு வார காலத்தில் அவை கண்களுக்கு அகப்படவில்லை. சரி, அடுத்த முறை இன்னும் கூடுதல் முயற்சி செய்தால் பார்த்துவிடலாம். 

இந்த வாரம் கேமராவில் சிக்கிய பறவைகளுள் சில:
3. மைனா (Common myna)

4. பெரிய நீர்க்காகம் (Great cormorant)

5. குட்டிக் கொரெல்லா கூட்டம்  (Little corellas)

6. வெள்ளைக்கண் வாத்து - ஆண் (Hardhead or white-eyed duck)

7. தேவதைச் சிட்டு (Superb fairy wren -male)

8. ஆஸ்திரேலியக் கூழைக்கடா (Australian pelican)

9. கருப்பு அன்னம் (Black swan)

10. பெரிய கருப்பு வெள்ளை நீர்க்காகம் (Australian pied cormorant)

11. பாம்புத்தாரா- ஆண் (Australian darter-male)

12. நெடுங்கால் உள்ளான் (Pied stilt)

13. பெரிய கொக்கு -ஆண் (Great egret - male)

14. மஞ்சள் தாடை ஆள்காட்டி (Masked lapwing)

ஆஸ்திரேலியப் பறவைகள் கணக்கெடுப்பு வாரத்தின் ஐந்தாம் நாள் அன்று, பக்கத்தில் இருக்கும் nature reserve-ஐத் தெரிவு செய்திருந்தேன். ஏற்கனவே இரண்டு முறை போன வனப்பகுதிதான். ஆனால் அதற்குள் கங்காரூக்களும் வல்லபிகளும் வசிக்கின்றன என்பது அன்றுதான் தெரிந்தது. இயல் வாழிடத்தில் அதுவும் வீட்டிலிருந்து மூன்று கி.மீ. தூரத்திலேயே அவை வசிக்க, இத்தனை வருடங்களாக நான் அவற்றைத் தேடி காடு காடாக அலைந்ததை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வந்ததுபோல் பறவை பார்க்கப் போய் கங்காரூக்களைப் பார்த்து ரசித்து வந்தேன். ☺️☺️

ஒரு ஆச்சரியமான தற்செயல் ஒற்றுமை என்ன தெரியுமா? அக்டோபர் 24-ஆம் நாள் உலக கங்காரூ தினமாம். சரியாக அதே நாளில் எதிர்பாராதவிதமாக கங்காரூக்கள் தரிசனம் தந்து என்னை மகிழ்வின் எல்லைக்கே கொண்டுசென்றுவிட்டன.

கேமரா கொண்டுபோகாததால் மொபைலில் முடிந்தவரை zoom செய்து எடுத்திருக்கிறேன்.

14. சாம்பல்நிறக் கங்காரூக்கள் (Eastern grey kangaroos)

15

16

17

18. சதுப்புநில வல்லபி (swamp wallaby)

குடிமக்கள் அறிவியலின் ஒரு பகுதியான பறவைகள் கணக்கெடுப்பில் கலந்துகொள்வது இதுவே முதல்முறை. ஒரு சூழலியல் ஆர்வலராக மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இம்முறை நிறையக் கற்றுக்கொண்டேன். அடுத்த வருடம் இன்னும் அதிகமான பறவையினங்களை ஆவணப்படுத்துவேன் என்று நம்புகிறேன்.

******

12 October 2025

எந்தக் கடவுள்?

 


ஒரு ரொட்டித்துண்டுக்காக

ஒரு மிடறு தண்ணீருக்காக

குழந்தைகளின் கைகளை

ஏந்திப் பிடித்திருப்பது எந்தக் கடவுள்?

 

அவர்களின் பிஞ்சுக் கைகளில்

கஞ்சிக் குவளைகளைத் திணித்து

கலவரத்தோடு அலையவிட்டு

களிப்புடனே பார்த்திருப்பது எந்தக் கடவுள்


பிரேதங்கள் வந்து குவியும்

மயானக் குழிகளின் மத்தியில்

மருளும் விழிகளோடு

மழலைகளை உலவ விட்டு ரசிப்பது எந்தக் கடவுள்?

 

நேற்றுவரை தூக்கிக்கொஞ்சிய அம்மையும் அப்பனும்

விளையாட்டு காட்டிய அக்காளும் அண்ணனும்

இன்று போன இடம் தெரியாமல் 

விக்கித்து அழச்செய்து

வேடிக்கை பார்த்திருப்பது எந்தக் கடவுள்?

 

சிதைக்கப்பட்ட கனவுகளின் பெருவலியை

குருதியும் கண்ணீருமாய்க் கடக்குமாறு

கடுஞ்சாபமிட்டது எந்தக் கடவுள்?

 

வீசியெறியப்பட்ட வாழ்வின் மிச்சத்தை

விரக்தியோடு பார்த்திருக்கும் 

சின்னஞ்சிறு இதயங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு

எந்த நீக்குப்போக்கான பதில்களைத் தர

நித்தமும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர்

உலகின் ஒட்டுமொத்தக் கடவுளர்களும்?

***



2 October 2025

சுயமோக ஆளுமைக் குறைபாடு

தன் அழகின் மீதே சுயமோகம் கொண்டு அழிந்துபோன நார்சிசஸ் பற்றியும் நார்சிசிஸம் பற்றியும் நிறைய பேர் கேள்விப்பட்டிருப்பீர்கள். நார்சிசிஸம் என்றாலே தன் அழகின் மீதான மோகம் என்றே பல பேருடைய மனதில் படிந்துபோயிருக்கும். இந்த வார்த்தைக்குப் பின்னால் இருக்கும் பூதாகரமான உளவியல் சிக்கல் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்காது. 

 


சுயமோகம் என்பது கிட்டத்தட்ட எல்லாருக்குள்ளும் இருக்கும் ஒரு சாதாரண குணம்தான். தோற்றத்தில் சிரத்தை எடுத்துக்கொள்வதுமிகைநேர்த்தியாக உடுத்துவது, கண்ணாடியைப் பார்க்கும்போதெல்லாம் சிகையைத் திருத்துவது, எடை கூடியதை உணர்ந்தவுடன், பார்ப்பவர்களிடமெல்லாம், நான் குண்டா ஆயிட்டேனா என்று கேட்டு, ‘அப்படி ஒண்ணும் இல்ல, லேசாப் பூசினாப் போலத்தான் இருக்கே’ என்ற பதிலை எதிர்பார்த்து சமாதானமடைவது, ‘உனக்கு மட்டும் எந்த ட்ரெஸ் போட்டாலும் பொருத்தமா இருக்கு’ ‘நீ சமைச்சா ஊரே மணக்குது’ ‘உன்னைப் போல ஒருத்தர் இனிமேல் பிறந்துதான் வரணும்’ போன்ற புகழ்ச்சிகளில் புளகாங்கிதமடைவது என ஆண் பெண் பேதமற்று நம் எல்லாருக்குள்ளும் ஒரு சில சுயமோக விருப்புகள் இருக்கத்தான் செய்யும். இருக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் இருக்காது. நம்மையே நமக்குப் பிடிக்காமல் கூட போய்விடலாம். ‘என்னத்த வாழ்க்கை’ என்று ‘என்னத்த கண்ணையா’ போல புலம்ப நேரிடலாம். 

ஒருவரது சுயமோக சுபாவம், யாரையும் பாதிக்காத அளவில் சாதாரண இயல்பாக இருக்கும்வரை பிரச்சனை இல்லை. ஆளுமைக் குறைபாடாக (Narcissistic personality disorder) மாறும்போதுதான் அவரைச் சார்ந்தோருக்கான அச்சுறுத்தல் ஆரம்பமாகிறது. கிட்டத்தட்ட அது ஒரு புதைகுழி போல, நதிச்சுழல் போல, கருந்துளை போல மெல்ல மெல்ல அடுத்தவர்களை உள்ளிழுத்து அவர்களுடைய ஆன்மாவை அழிக்க ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் அந்தச் சுழலுக்குள் மூழ்கடித்து அவர்களுடைய வாழ்வையே மூளியாக்கிவிடுகிறது.

சுயமோக ஆளுமைக் குறைபாட்டைப் பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? அப்போதுதான் அப்படிப்பட்ட மனநிலையுள்ள ஆட்களிடமிருந்து நம்மால் எச்சரிக்கையாக விலகி இருக்கமுடியும். அவர்களுடைய சுயமோகச் சுழலுக்குள் சிக்கிக்கொள்ளாத வகையில் விழிப்புணர்வு பெற முடியும். அப்படியே சிக்கிக்கொண்டாலும் அதிலிருந்து மீண்டுவரும் வழியைக் காணமுடியும். 

 


சுயமோக ஆளுமைக் குறைபாடு உடையவர்கள் எப்படிப்பட்டவர்கள்? தாங்கள் எப்போதும் எங்கும் எவராலும் ஆராதிக்கப்படவேண்டும் என்ற வேட்கை கொண்டவர்கள். எல்லோரையும் விட தாங்களே சிறந்தவர்கள், திறமைசாலிகள், உத்தமர்கள், மேலானவர்கள், மேன்மையானவர்கள், அதி உன்னதமானவர்கள் என்ற மாயச்செருக்கோடும் மமதையோடும் திரிபவர்கள். அவர்கள் தம்மை மட்டுமே எங்கும் எப்போதும் முன்னிறுத்திப் பார்ப்பார்கள். நான், என், எனது, எனக்கு, என்னுடைய, என்னால், என்னை போன்ற வார்த்தைகள் இல்லாமல் எந்த வாக்கியத்தையும் இவர்களால் ஆரம்பிக்கவும் முடியாது, முடிக்கவும் முடியாது. இந்தப் பூமியே தங்களை மையமாக வைத்துச் சுற்றுவதான எண்ணத்தில் ஆழ வேரூன்றியவர்கள்.

சுயமோக ஆளுமைக் குறைபாடுள்ளவர்கள் மற்றவர்களைப் பகடைக்காயாய்ப் பயன்படுத்தும் தந்திரத்தில் கைதேர்ந்தவர்கள். அடுத்தவரை தங்கள் வலையில் விழவைப்பதில் வல்லவர்கள். தங்கள் அலாதியான திறமைகளையும் சாகசங்களையும் பற்றிப் பேசிப்பேசிக் கவர்ந்திழுப்பதில் கெட்டிக்காரர்கள். அவர்களுடைய அதீத தன்னம்பிக்கையோடு கூடிய அபாரமான எதிர்காலத் திட்டங்களைக் கேட்டு எதிரில் இருப்பவரின் சுய மதிப்பீடு ஆட்டம் காண ஆரம்பித்துவிடும். இங்குதான் அவர்கள் சுயமோக ஆளுமைக் குறைபாட்டாளர்களின் வலையில் விழ ஆரம்பிக்கிறார்கள். அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் அதிலிருந்து அவர்களால் மீளமுடியாமலேயே போய்விடுகிறது. 

 


 சுயமோக ஆளுமைக் குறைபாட்டாளர்களுக்கு அடுத்தவரின் வலி புரியாது. வலி மட்டுமல்ல, அடுத்தவரின் எந்த உணர்வும் புரியாது. தனக்கு வந்தால் ரத்தம், அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னி என்பதான மனப்போக்குதான் இவர்களுடையது.

இவர்கள் தாங்கள் செய்த தவறை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதற்காக மனம் வருந்தி மன்னிப்புக் கோரவும் மாட்டார்கள். தவறை ஒப்புக்கொண்டால்தானே மன்னிப்புக் கேட்கத் தோன்றும்? தாங்கள் பிழை செய்வதற்கு வாய்ப்பே இல்லை என்று நூறு சதவீதம் உறுதியாக நம்புவார்கள். அதனால் இவர்களால் சிறு விமர்சனத்தைக் கூட தாங்கிக்கொள்ள இயலாது. தம் மீது வைக்கப்படும் விமர்சனங்களையும் குறைகளையும் பரிசீலிக்கவோ, நிதானமாக அணுகவோ தெரியாது. ஆக்ரோஷமாக எதிர்கொள்வார்கள். எதிரிலிருப்பவரைப் பேசவிடவே மாட்டார்கள். விதண்டாவாதம் செய்து விஷயத்தைத் திசைதிருப்புவார்கள் அல்லது அவசரமாக அந்த இடத்தை விட்டு ஓடிவிடுவார்கள்.

இவர்களுக்கு வாதத்திறமை குறைவு என்பது அவர்களுக்கே நன்றாகத் தெரியும். அதனால் பிரச்சனைகளை நேருக்கு நேராக எதிர்கொள்ள மாட்டார்கள். தாங்கள் சொல்ல வேண்டியவற்றை எழுத்து, ஒலி அல்லது ஒளி வடிவில் வெளிப்படுத்துவார்கள். அதன் மூலம் அவர்களது கருத்தையே இறுதிக் கருத்தாக்கிவிட முடியும். எதிர்த்தரப்புக் கருத்தைக் கேட்கவேண்டிய அவசியம் கிடையாது. எதிராளி கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் தவிக்க நேரும் சூழலையும் தவிர்த்துவிடலாம்.  

சுயமோக ஆளுமைக் குறைபாடுடையவர்கள், தவறு இழைத்திருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டால் அவ்வளவுதான். தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று தாம் தூம் என்று குதிப்பார்கள். அடுத்தவர்கள் தான் காரணம் என்று இறுதிவரை சாதிப்பார்கள். அடுத்தவர்க்கு உளரீதியான பாதிப்பை உண்டாக்கும் அவர்கள், பிரச்சனை பெரிதாகும்போது சட்டென்று  பாதிக்கப்பட்ட நபராக தம்மை நிறுவுவதற்குப் (victim play) பெருமுயற்சி மேற்கொள்வார்கள். பெரும்பாலும் அதில் வெற்றியும் பெறுவார்கள்.

எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு செய்வார்கள். பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் காரியத்தில் இறங்குவார்கள். நேரத்துக்கொரு பேச்சு பேசுவார்கள். உணர்ச்சியை வெளிக்காட்ட மாட்டார்கள். என்ன நினைக்கிறார்கள், என்ன செய்யப்போகிறார்கள், என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது. மர்மமான வாழ்க்கைமுறை இவர்களுடையது.  

 


சுருக்கமாய்ச் சொல்லவேண்டும் என்றால் தங்களைச் சுற்றி ஒரு மாய உலகை சிருஷ்டித்துக்கொண்டு தங்களைத் தாங்களே கடவுளாக எண்ணி வாழ்பவர்கள். தங்களைச் சார்ந்தவர்களும் அப்படியே எண்ண வேண்டும், எண்ணுவது மட்டுமல்ல, வணங்கித் தொழவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள். அப்படிதான் நடக்கவேண்டும் என்று நாலாபக்கத்திலிருந்தும் நிர்பந்திப்பவர்கள். அப்படி எண்ணப்படாத பட்சத்தில் எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி தண்டனைகளை வழங்கத் தயங்காதவர்கள்.

சுயநலமிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? சுயநலமிகளுக்கு தங்கள் காரியம் முக்கியம். யார் காலைப் பிடித்தாவது காரியத்தை சாதிப்பதில் வல்லவர்கள். யாரையும் கெஞ்சவோ, முகத்துதி பண்ணவோ தயங்கமாட்டார்கள். ஈகோவையெல்லாம் ஓரங்கட்டி எவ்வளவு கீழே இறங்கமுடியுமோ அவ்வளவு கீழே இறங்கி தாங்கள் நினைத்தக் காரியத்தை முடிப்பார்கள்.

சுயமோக ஆளுமைக் குறைபாட்டாளர்கள் அப்படியல்ல. சுயநலமிகளுக்கு எதிர்முனையில் நிற்பவர்கள். ஈகோவின் உச்சத்தில் இருப்பவர்கள். மற்றவர்கள் தன்னை முகத்துதி பண்ண வேண்டும், தன் காலைப் பிடித்துக் கெஞ்ச வேண்டும், ‘ஐயா, உம்மைப் போல இந்த உலகத்தில் யாருமே இல்லை’ என்று புகழாரம் சூட்டவேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பவர்கள். சுயநலமிகளின் இலக்கு காரியம் என்றால் சுயமோக ஆளுமைக் குறைபாட்டாளர்களின் இலக்கு சுயதிருப்தி. அதற்காக எதையும் இழக்கத் தயாராக இருப்பார்கள், ஈகோவைத் தவிர.

சுயமோக ஆளுமைக் குறைபாடு உடைய பிரபலங்கள் பலர் உண்டு. அவர்கள் எப்போதுமே மக்கள் மத்தியில் தாங்கள் பேசுபொருளாக இருப்பதை விரும்புவார்கள். தாங்கள் மட்டுமே பேசுபொருளாய் இருப்பதை விரும்புவார்கள். தங்கள் முகத்தில் ஊடக வெளிச்சம் தொடர்ந்து பாய்ச்சப்படும்படி பார்த்துக்கொள்வார்கள். அல்லது ஊடக வெளிச்சம் பாயுமிடங்களில் தங்கள் முகத்தை வலிந்துகொண்டுபோய் வைத்துக்கொள்வார்கள். பணம், புகழ், செல்வாக்கு இன்ன பிற சங்கதிகள் மூலம் சமூகத்தில் உயர்ந்த இடத்தைப் பெற்றிருப்பார்கள். என்ன விலை கொடுத்தும் அந்த இடத்தைத் தக்கவைத்திருப்பார்கள். தங்களைத் துதிபாடும் கூட்டமொன்றை எப்போதும் பக்கத்தில் வைத்திருப்பார்கள். போலியான முகத்துதிகள் என்று அறிந்தபோதும் அவற்றை ரசித்து உள்ளுக்குள் மகிழ்ந்திருப்பார்கள்.

 குடும்பம், அலுவலகம், நட்பு வட்டாரம், அக்கம்பக்கம் மட்டுமல்ல, அரசியல், திரையுலகம், இலக்கியம், சமூகம், வணிகம், ஊடகம், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் என விதிவிலக்கின்றி எல்லாத் துறைகளிலும் இப்படிப்பட்ட சுயமோக வெறி கொண்ட வேங்கைகள் உலவுவதை அன்றாடம் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நம்முடைய திறமையை, ஆற்றலை, தன்னம்பிக்கையை, நேரத்தை, உழைப்பை, சேமிப்பை, சுயமரியாதையைக் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி இறுதியில் நம்மை சக்கையாக்கித் தூக்கியெறியும் அத்தகு மனிதர்களை அடையாளம் கண்டறியத் தெரிந்திருக்கிறோமா? குறைந்தபட்சம் உறிஞ்சப்படுகிறோம் என்ற உண்மையையாவது உணர்ந்திருக்கிறோமா?

(படங்கள் உதவி இணையம்)

25 September 2025

சர் டேவிட் அட்டன்பரோவோடு ஒரு கடற்பயணம்

இயற்கையின் காதலர், பல்லுயிர் ஆய்வாளர், இயற்கை வரலாற்றாளர், சூழலியல் வல்லுநர், எழுத்தாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் சர் டேவிட் அட்டன்பரோ 8 மே 2025-ல் அகவை 99-ஐக் கடந்து நூற்றில் நுழைந்திருக்கிறார். இந்த வயதிலும், வயதென்பது எண்ணிக்கை மட்டுமே என்பதை சிந்தனையாலும் செய்கைகளாலும் உணர்த்தி இளமைத் துடிப்போடு இன்னமும் நம்மோடு வளைய வந்துகொண்டிருக்கும் அம்மகான் நமக்கெல்லாம் வாழும் உதாரணம். அன்னாருக்கு நம் வணக்கமும் வாழ்த்தும்.

சர் டேவிட் அட்டன்பரோ

இயற்கை மீதான ஆர்வம் ஏற்கனவே ஓரளவு இருந்தாலும் இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கூர்ந்து கவனிக்கவும் கவனித்தவற்றைப் புரிந்துகொள்ளவும் கூடுதல் தேடல்களில் ஈடுபடவும் முக்கியக் காரணம் டேவிட் அட்டன்பரோவின் ஆவணப்படங்கள்தான்.

நிலம், நீர், கடல், காடு, விலங்கு, பறவை, பூச்சி, தாவரம் என இயற்கை சார்ந்த அவரது ஆவணத்தொடர்கள் பலவற்றைத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். கஜானாவைத் திறந்து பொக்கிஷங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டுவதுபோல இயற்கையின் அதிசயங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் அவர் எடுத்துரைக்கும்போது ஏற்படும் வியப்பும் மலைப்பும் மாற பல காலம் ஆகும்.

Green Planet நிகழ்ச்சியில் 'நடக்கும் புல்விதை' பற்றிச் சொல்லியிருந்தார். நெல் போன்ற விதையின் நுனியில் விறைப்பாக மீசை போல இரண்டு மெல்லிய குச்சிகள் உள்ளன. முதிர்ச்சி அடைந்த விதைகள் நிலத்தில் விழுந்த பிறகு நடப்பதுதான் அதிசயம். ஆம், காற்று வீசும்போது விதையோடு இணைந்திருக்கும் இரண்டு மெல்லிய குச்சிகளும் கால்களாய் மாறிவிடுகின்றன. இரு கைகளும் இல்லாத ஒரு மனிதன் தன்னிரு கால்களையும் மாற்றி மாற்றி ஊன்றி தரையில் தவழ்ந்து செல்வது போல் அவை நகர்ந்து போகின்றன. தாய்ச்செடியை விட்டு வெகுதூரம் சென்ற பிறகு இரண்டு குச்சிகளும் தங்கள் வேலை முடிந்துவிட்டது என்பது போல் உதிர்ந்து விழுந்துவிட, விதை அந்த இடத்தில் ஊன்றி வளரத் தொடங்குகிறது. 

நடக்கும் விதைகள்

புல்விதை நடப்பதைப் பார்க்கவேண்டுமா? இதோ டேவிட் அட்டன்பரோவே விளக்குகிறார் பாருங்க. 

https://www.youtube.com/watch?v=NlUparIDfzE

நிகழ்ச்சியைப் பார்த்த சில நாட்களிலேயே எங்களுடைய தோட்டத்தில் அதே புற்களை, அதே விதைகளை நான் பார்த்தேன். பல வருடங்களாகப் பார்த்த புல் என்றாலும் அதன் சிறப்பு, டேவிட் அட்டன்பரோ நிகழ்ச்சிக்குப் பிறகுதான் தெரிந்தது. 

புல்லுருவிக் குருவி பற்றியும் டேவிட் அட்டன்பரோ நிகழ்ச்சியின் மூலமே அறிந்து வியந்தேன். டேவிட் அட்டன்பரோ நிகழ்ச்சியைப் பார்த்திராவிட்டால், தோட்டத்து மரத்தில் வந்தமர்ந்திருந்த, தையல்சிட்டை விடவும் மிகச்சிறிய புல்லுருவிக் குருவியை என்னால் அடையாளம் கண்டுகொண்டிருக்கவே இயன்றிருக்காது.   புல்லுருவிக் குருவியின் தனித்துவமான விதைபரப்பல் பற்றியும் தெரிந்திருக்காது. 

புல்லுருவிக் குருவி

டேவிட் அட்டன்பரோ தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளுக்கு கணக்கே கிடையாது. அவருடைய குரல் உணர்வு மயமானது. அக்குரலில் ஆச்சர்யம், மகிழ்ச்சி, துக்கம், வருத்தம், ஆதங்கம், கோபம், ஏமாற்றம் எல்லாமும் வெளிப்படும்.

நமக்கு ஆச்சர்யம் தரும் புதுமையான தகவல்களை அவர் பகிரும்போது அவரது குரலிலும் அதே அளவுக்கு ஆச்சர்யம் வெளிப்படும். இயற்கையின் அதிசயங்களை அவர் குழந்தையின் குதூகலத்தோடு நம்மோடு பகிர்ந்துகொள்வார். சில பதிவுகளில் நகைச்சுவைக்கும் பஞ்சம் இருக்காது. எந்தத் தலைக்கனமும் இல்லாத மிக மிக எளிமையான மனிதர் டேவிட் அட்டன்பரோ.

களத்தில் டேவிட் அட்டன்பரோ

நேரடியாகக் களத்துக்குச் செல்வதும் தகவல்களைச் சேகரித்துத் தொகுத்தளிப்பதும் பாமர மக்களுக்கும் புரியும் விதத்தில் எளிமையாய் விவரிப்பதும், விழிப்புணர்வு ஊட்டுவதும் அவரது சிறப்புகள். அவரிடம் இந்த பூமிப்பந்தின் மீதான உண்மையான அன்பும் அக்கறையும் தெரியும். அதன் எதிர்காலம் குறித்த கவலையும் ஆதங்கமும் வெளிப்படும். இயற்கையைச் சீரழிக்கும் மனித குலம் மீதான ஆத்திரமும் ஏமாற்றமும் வெளிப்படும் அதே சமயம், அதன் மீதான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தவறாது.

இயற்கைக்கு எதிராய் மனிதர்கள் செயல்படும்போதெல்லாம் அதனால் விளையவிருக்கும் அபாயங்களைப் பற்றியும் பேராபத்துகளைப் பற்றியும் எச்சரிக்கை விடுத்தவாறே இருக்கிறார்.

ஐயோ, மனிதர்களே... நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இந்த பூமியை நன்றாக வைத்துக்கொள்ளுங்கள். இயற்கையின் சார்புச் சங்கிலியில் ஒரு கண்ணி விடுபட்டாலும் மொத்த இயற்கையும் வலுவிழந்து ஒன்றோடொன்று தொடர்பறுந்து போய்விடும். அவ்வாறு தொடர்பறுந்து போய்விட்டால் உங்களுடைய வாழ்வும் முடிவுக்கு வந்துவிடும். எனவே நீங்கள் வாழும் இந்தப் பூமியையும் அதன் பல்லுயிர் வளத்தையும், நீர்வளத்தையும், நில வளத்தையும் வளிமண்டலத்தையும் சிதைவுறாமல், மாசடையாமல் பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை” என்று அவர் கதறுவது புரியும். இவ்வளவு அற்புதங்கள் நிறைந்த இயற்கையை அழித்தொழிக்கும் முயற்சிகளில் நீங்கள் ஈடுபடுவது சரிதானா? என்று அவர் கேட்காமல் கேட்கும் கேள்விகள் உறைக்கும்.

மனிதர்களின் அறியாமை, அலட்சியம், இறுமாப்பு, பேராசை, சுயலாப நோக்கு போன்றவற்றால் அழிவின் அபாயங்களை சந்திக்கும் இந்தப் பூமியையும் அதன் பல்லுயிர் வளத்தையும் மீட்டுக் காப்பாற்றும் போராட்டத்தில் தன் வாழ்நாள் முழுமையையும் அர்ப்பணித்துள்ள டேவிட் அட்டன்பரோவை சிறப்பிக்கும் விதமாக அவரது 99-ஆவது பிறந்தநாளை ஒட்டி குறிப்பிட்ட நாட்கள் மட்டும் திரையரங்குகளில் Ocean with David Attenborough என்ற ஆவணத்திரைப்படம் திரையிடப்பட்டது. இதுவே அவரது இறுதி ஆவணப்படமாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.  

திரைப்பட போஸ்டர்

தலைப்பைப் பார்த்ததும் மீண்டுமொரு ஆழ்கடல் அதிசயத்தைப் பற்றிய ஆவணப்படமாக இருக்கும் என்று ஆவலும் எதிர்பார்ப்புமாய்ச் சென்ற எனக்கு இது ஒரு துன்பியல் படம் என்பது சற்று நேரத்திலேயே புரிந்துவிட்டது. ஒரு சாமான்யனின் வாழ்வில் பேரிடியாய் வந்திறங்கும் வில்லன்களின் அராஜக அட்டூழியத்துக்கு நிகராக, அழகு, அமைதி, வளமை என அதனதன் இயல்பில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இனம்பெருக்கி மடிந்து மக்கிப்போவதோடு அல்லாமல் இந்த பூமிக்கும் பூமிவாழ் மனிதர்க்கும் கூட பற்பல நன்மைகளை நல்கும் கடலுயிரிகளின் அற்புதத்தைக் காட்ட ஆரம்பித்து நம்மை ஆச்சர்யத்தின் உச்சியில் நிறுத்தி, அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக தற்போதைய அவலநிலையை பொட்டில் அடித்தாற்போலக் காட்டி படம் முடியும்போது அந்த அவலநிலைக்கு மனிதர்களாகிய நாமே காரணம் என்னும் குற்றவுணர்வும் இயற்கையைச் சீரழிப்பதில் மனிதகுலத்தின் பங்கு எவ்வளவு கொடூரமாக உள்ளது என்னும் உண்மையும் மனம் சுடுகிறது.

மாசடையும் கடலை வேதனையோடு பார்த்திருக்கும் டேவிட் அட்டன்பரோ

ஆவணப்படத்தின் இறுதியில் அதன் நான்காண்டு கால உருவாக்கம் பற்றிக் காட்டப்படுகிறது. பின்னணியில் எவ்வளவு உழைப்பு! எவ்வளவு அர்ப்பணிப்பு! எவ்வளவு தொழில்நுட்பம்! ஒவ்வொரு காட்சியையும் படமாக்க எவ்வளவு சிரத்தை! எவ்வளவு மெனக்கெடல்!

பிரமாண்டமான இயந்திர மீன்பிடிக் கப்பல்களால் ஆழ்கடல் படுகைக்கு விளைவிக்கப்படும் பெரும் சேதத்தைப் பார்க்கும்போது அடிவயிறு கலங்குகிறது. ஒரு மீன் வகைக்காக ஒட்டுமொத்த ஆழ்கடல் படுகைப் பரப்பையும் தோண்டியெடுப்பது கலங்கடிக்கும் உண்மை. யாராவது ஒரு பூவைப் பறிக்க ஒட்டுமொத்தத் தோட்டத்தையே ஜேசிபி வைத்துத் தோண்டி எடுப்பார்களா? அதுவும் ஒரு முறை இருமுறை அல்ல, காயத்தை ஆறவிடாமல் கீறிக்கொண்டே இருப்பதைப் போல இடைவிடாத தொடர் மீன்பிடிப்பு. கனத்த இரும்புச்சங்கிலிகளில் கோர்க்கப்பட்ட இரும்பு ஆணிகளால் கடற்பரப்பைச் சுரண்டி, சேதப்படுத்தி, பவளப்பாறைகளை அழித்து, பற்பல கடலுயிரிகளைக் கொன்று, காசு பார்க்கின்றன பெருந்தனக்கார வியாபார முதலைகள். அவர்களுக்கு எந்த அரசாங்கமும் தடை விதிப்பதில்லை. மாறாக ஊக்கத்தொகை அளித்து உத்வேகம் அளிக்கின்றன என்பதைச் சொல்லும்போது டேவிட் அட்டன்பரோவின் குரலில் வெளிப்படும் இயலாமையும் ஆத்திரமும் ஆதங்கமும் மனம் பிசைகிறது. சூப்பர் மார்க்கெட்களில் ஒரு டாலருக்கும் இரண்டு டாலருக்கும் டின்களில் அடைக்கப்பட்ட ட்யூனா, சார்டைன்ஸ் போன்ற விதவிதமான மீன்களைப் பார்க்கும்போது இனி சேதமுற்ற கடற்படுகையும் அநாவசியமாய்க் காவு வாங்கப்பட்ட கடலுயிரிகளும் நினைவுக்கு வருவதை இனி தவிர்க்க முடியாது.

மீன்பிடி கப்பல்

ஆழ்கடல் நடுவே நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருக்கும் பென்னம்பெரிய கப்பல்கள் கடல்நீரை வடிகட்டி டன் டன்னாக இறால்களைப் பிடிக்கின்றன. அக்கப்பல்களுக்குள்ளேயே அவற்றைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இறால்கள் உடனுக்குடன் தோல் நீக்கி, சுத்தப்படுத்தப்பட்டு, அரைவாசி வெந்த நிலையில் பதப்படுத்தப்பட்டு டின்களில் அடைக்கப்படுகின்றன. நிரந்தரத் தொழிற்சாலையாக ஆழ்கடல் நீரில் மிதந்தவண்ணம் அக்கப்பல்கள் செயல்பட, மற்ற சரக்குக் கப்பல்கள் பதப்படுத்தப்பட்ட டின்களை டன் டன்னாக ஏற்றிக்கொண்டு கரை திரும்பி வியாபாரச்சந்தையில் இறக்குகின்றன. இறால்கள் முதிர்ச்சி அடையவும் கால அவகாசம் தரப்படாமல் தொடர்ச்சியாக கடல்நீரை வடிகட்டி வடிகட்டி ஒட்டுமொத்த இறால்களையும் பிடிப்பதொரு பக்கம், சுத்தப்படுத்தப்பட்ட பிறகான இறால் கழிவுகள் சாக்கடை போல அக்கடலிலேயே கொட்டப்படுவதொரு பக்கம் என காட்சிகள் மனிதப் பேராசையால் ஏற்படும் சமுத்திரச் சீர்கேட்டுக்கு மற்றுமொரு உதாரணம்.

கரியமில வாயு வெளியீடு, காலநிலைச் சீர்கேடு, பனிப்பாறை உருக்கம், கழிவுகளைக் கடலில் கலத்தல், இயந்திர மீன்பிடிப் படகுகளால் நிகழும் படுகைச் சேதம், அதீத மீன்பிடிப்பால் கடலுயிரிகளுக்கு ஏற்படும் உணவுத் தட்டுப்பாடு, இயற்கைச் சமநிலை பாதிப்பு என மனிதர்களால் கடல் மற்றும் கடலுயிரிகளுக்கு உண்டாகும் அழிவைத் தடுக்கவும், அழிந்துவரும் கடல் வளத்தை மீட்டெடுக்கவும் பாதுகாப்பான கடற்பகுதிகளை (marine reserves) அமைப்பதொன்றே ஒரே வழி என்பதை மிகவும் ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். இப்போது மொத்தக் கடற்பரப்பில் சுமார் 3%-க்கும் குறைவான கடற்பரப்பே ‘பாதுகாக்கப்பட்டப் பகுதி’ என்றிருக்கும் நிலையில் அடுத்த மாதம் (ஜூன் 2025) பிரான்சில் நடைபெற உள்ள மூன்றாவது ஐக்கிய நாடுகள் மகாசமுத்திர உச்சிமாநாட்டில் மொத்தக் கடற்பரப்பில் சுமார் 30% பகுதிகள் பாதுகாக்கப்பட்டப் பகுதிகளாக அறிவிக்கப்பட உள்ளன என்ற நம்பிக்கை தரும் தகவலோடு திரைப்படம் முடிகிறது.

இந்தப் பதிவை எழுதி வைத்ததோடு சரி, வெளியிட மறந்தே போனேன். இப்போது அந்த மூன்றாவது மகாசமுத்திர உச்சிமாநாடும் நடந்து முடிந்துவிட்டதால் அதைப் பற்றியும் எழுதலாம் என்று தோன்றுகிறது.

மூன்றாவது மகாசமுத்திர உச்சிமாநாடு லோகோ

கடந்த ஜூன் (2025) மாதம் நைஸ் மாநகரில் கோஸ்டா ரிகாவுடன் இணைந்து பிரான்ஸ் நடத்தி முடித்த ஐந்துநாள் மாநாட்டில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர். விஞ்ஞானிகளும், கடலியல் ஆய்வாளர்களும், கடற்பாதுகாவலர்களும், சூழலியல் ஆர்வலர்களுமாக சுமார் 15,000 பேர் பங்கேற்ற அம்மாநாட்டில் சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்களும் பங்கேற்றிருந்தனர். 

கடற்பாதுகாப்பை விரிவுபடுத்துதல், கடல் மாசைக் கட்டுப்படுத்துதல், ஆழ்கடல் மீன்பிடி செயல்பாடுகளைக் கண்காணித்து ஒழுங்கமைத்தல், சர்வதேச நீர்வாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல் மற்றும் கடலோரத்தீவுகளுக்கான நிதியுதவியை மேம்படுத்துதல் போன்றவை குறித்து மாநாட்டில் பேசப்பட்டன.

பால்டிக் மற்றும் வட கடல்களில் இருந்து நீருக்கடியில் வெடிமருந்துகளை அகற்ற ஜெர்மனி 100 மில்லியன் யூரோ திட்டத்தைத் தொடங்கியது. கடல் நிர்வாகத்தை வலுப்படுத்த நியுசிலாந்து 52 மில்லியன் டாலர் திட்டத்தை அறிவித்தது. ஸ்பெயின் ஐந்து புதிய கடற்பாதுகாப்புப் பகுதிகளை அறிவித்தது. பனாமா மற்றும் கனடா தலைமையிலான 37 நாடுகள் கடலுக்கடியில் ஒலிமாசுபாட்டைக் கையாண்டு அமைதியான மகாசமுத்திரத்தை உருவாக்கும் உயர் இலட்சியக் கூட்டமைப்பை உருவாக்கின. இந்தோனேஷியாவும் உலகவங்கியும் பவளப்பாறைப் பாதுகாப்புக்கு நிதியுதவி செய்யும் ‘பவளப்பாறை ஒப்பந்தப் பத்திரத்தை’ அறிவித்தன.  

மகாசமுத்திர உச்சிமாநாட்டில் ஒரு கருத்தரங்கம்

இம்மாநாட்டின் கருத்தரங்குகளில் வல்லரசு நாடான அமெரிக்காவின் பிரமுகர்களோ அரசுப் பிரதிநிதிகளோ கலந்துகொள்ளவில்லை. வெறும் பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்றனர். ‘பல சிறிய நாடுகளும் பெரிய முடிவுகளை எடுக்கும்போது பெரிய நாடுகள் சிறிய முயற்சி கூட எடுக்காமலிருப்பது துரதிர்ஷ்டமானது’ என்று மாநாட்டின்போது தனது வருத்தத்தைத் தெரிவித்தார் ஃபிஜி தீவின் பிரமுகர் ஒருவர்.

டேவிட் அட்டன்பரோ குறிப்பிட்டதுபோல் மாநாட்டில் கடற்பரப்புப் பாதுகாப்பு குறித்தத் தீர்மானமும் இயற்றப்பட்டது.      

2020-ஆம் ஆண்டின் இறுதியில் 10% கடற்பரப்பு பாதுகாக்கப்பட்ட கடற்பரப்பாக இருக்கும் என்று இயற்றப்பட்ட தீர்மானம் தோல்வியுற்றிருந்தாலும் 2030-ஆம் ஆண்டுக்குள் 30% கடற்பரப்பு பாதுகாக்கப்பட்ட கடற்பரப்பாக இருக்கும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் தற்போது நிர்ணயிக்கப்பட்ட புதிய இலக்குடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

கடற்பின்னணியில் டேவிட் அட்டன்பரோ

பூமியின் காதலர் டேவிட் அட்டன்பரோவின் வாழ்நாளிலேயே அந்தத் தீர்மானம் செயலாக்கம் பெற்று வெற்றி பெறும் என்று நம்புவோம். 

 *****

(புல், புல்லுருவிக் குருவி தவிர்த்த ஏனைய படங்கள் யாவும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை)

27 July 2025

தித்திக்குதே (4) மேப்பிள்

தேன், சர்க்கரைப் பாகு போலவே மேப்பிள் சிரப்பும் இனிப்புக்குப் பிரசித்தமானது. உலகளவில் பலராலும் விருப்பத்துடன் உணவில் பயன்படுத்தப்படுவது. மேப்பிள் சிரப்பை அப்படியேயும் பயன்படுத்தலாம். மிட்டாய், குக்கீஸ், கேக், டோநட் (doughnut) , பை (pie), புட்டிங்  (pudding), மில்க் ஷேக் போன்றவற்றில் இனிப்பூட்டியாகவும் பயன்படுத்தலாம்.

1. பான்கேக்கும் மேப்பிள் சிரப்பும்

எங்கள் வீட்டில்  Pancake செய்தால் மேப்பிள் சிரப் கட்டாயம் இருந்தாக வேண்டும். மேப்பிள் சிரப் பார்ப்பதற்கு தேன் போல இருந்தாலும் சுவை மாறுபடும்.  

2. மேப்பிள் மரத்தில் இனிப்பு நீர் வடித்தல்

மேப்பிள் சிரப் எங்கிருந்து கிடைக்கிறது தெரியுமா? மேப்பிள் மரத்தின் தண்டிலிருந்துதான். மேப்பிள் மர வகை நூற்றுக்கு மேல் இருந்தாலும் சிரப் தயாரிப்பதற்கு சில்வர் மேப்பிள், கருப்பு மேப்பிள், சிவப்பு மேப்பிள், மனிடோபா மேப்பிள், பேரிலை மேப்பிள், சுகர் மேப்பிள் என குறிப்பிட்ட சில மரங்களே உதவுகின்றன. இவற்றுள் முக்கியமானது Sugar maple எனப்படும் இனிப்பு மேப்பிள் மரம். இம்மரச் சாற்றில் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருப்பதாலேயே இந்தப் பெயர் இடப்பட்டுள்ளது. இதன் அறிவியல் பெயர் Acer saccharum.

3. இனிப்பு நீர் சேகரிப்பு

ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்திற்கு முன்பு மேப்பிள் மரங்களின் தண்டு, கிளை, வேர் போன்ற பகுதிகளில் மாவுச்சத்து இனிப்பு நீராக சேமிக்கப்பட்டிருக்கும். மேப்பிள் சிரப் தயாரிப்பவர்கள், வசந்த காலத்தில் மேப்பிள் மரத் தண்டுகளில் துளைகள் இட்டு, சொட்டுச் சொட்டாக வடியும் இனிப்பு நீரை குழாய்கள் மூலம் கொண்டுவந்து மரப் பீப்பாயில் சேகரிப்பார்கள். பிறகு அது நன்கு காய்ச்சப்படும். நீர் முழுவதும் ஆவியான பிறகு கொழகொழப்பான சுவையான மேப்பிள் சிரப் கிடைக்கும். சுமார் 40 லிட்டர் இனிப்பு நீரைக் காய்ச்சினால் கிடைக்கும் சிரப்பின் அளவு எவ்வளவு தெரியுமா? ஒரு லிட்டர் மட்டுமே.

4. மேப்பிள் பட்டர்

தேன் போன்று அடர்த்தியான மேப்பிள் சிரப்பை தொடர்ச்சியாக சூடுபடுத்திக் கிளறிக்கொண்டே இருந்தால் கிடைப்பதுதான் மேப்பிள் சர்க்கரை. தூளாகவும் வெல்லம் போல் கட்டியாகவும் கடைகளில் கிடைக்கும். சிரப்பை விடவும் அதிக நாள் கெடாமல் இருக்கும். பாகுக்கும் சர்க்கரைக்கும் இடையே கிடைப்பது மேப்பிள் பட்டர் (maple butter) அல்லது மேப்பிள் க்ரீம். வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் பாகை குறிப்பிட்ட வேகத்தில் கடையும்போது வெண்ணெய் போல திரண்டு வரும் இந்த மேப்பிள் வெண்ணெயை சாதா வெண்ணெய் போல பிரட்டில் தடவி உண்ணலாம். 

5. விற்பனையில் மேப்பிள் பட்டர்

மேப்பிள் மரத்திலிருந்து சிரப், சர்க்கரை போன்றவற்றை முதலில் தயாரித்த  பெருமை அமெரிக்கப் பூர்வகுடிகளையே சேரும். அமெரிக்க மற்றும் கனடா வாழ் பூர்வகுடியினர் ஆதிகாலத்திலிருந்தே இவற்றைத் தயாரித்து வருகின்றனர்.

மேப்பிள் சிரப்புக்கு அரசியல் பங்களிப்பும் உண்டு. அமெரிக்காவில் அடிமைமுறை ஒழிப்புப் போராட்டம் அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு வித்திட்டபோது, நாடு முழுவதும் பரவலாக கரும்புச் சர்க்கரைக்குப் பதிலாக மேப்பிள் சர்க்கரை பயன்பாட்டுக்கு வந்தது. 


6. லுக்ரிடியா மோட்

அமெரிக்கச் சீர்திருத்தவாதியும் அடிமை முறை எதிர்ப்பாளரும் பெண்ணுரிமைப் போராளியுமான லுக்ரிடியா மோட், அடிமை முறை ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக மேப்பிள் சர்க்கரையால் செய்யப்பட்ட மிட்டாய்களை பொதுமக்களுக்கு வழங்கினார். மிட்டாயைச் சுற்றியிருக்கும் தாளில் ‘நண்பனே, இதைத் தின்பதில் உனக்கு எந்தக் குற்ற உணர்ச்சியும் தேவையில்லை, ஏனெனில் இதன் உருவாக்கத்தில் எந்த அடிமையும் ஈடுபடுத்தப்படவில்லை’ என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டிருந்தது.  

7. இலையுதிர்கால மேப்பிள் இலைகள்

பருவ காலத்துக்கு ஏற்றபடி இலைகள் வண்ணமயமாகக் காட்சியளிக்கும் அழகுக்காகவே மேப்பிள் மரங்கள் பூங்காக்களிலும் பெரும் வளாகங்களிலும் வளர்க்கப்படுகின்றன. பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, அரக்கு என இலையுதிர்காலத்தில் மேப்பிள் மர இலைகள் நிறம் மாறுவது அவ்வளவு அழகாக இருக்கும். இலையுதிர்காலத்தின் இறுதியில் மரம் இலைகளை முழுவதுமாக உதிர்த்துவிடும்.

8. கனடாவின் தேசியக்கொடி

கனடா நாட்டின் தேசியக்கொடியில் இருப்பது மேப்பிள் இலையே. கனடாவின் தேசிய மரமும் மேப்பிள் மரம்தான். இனிப்பு மேப்பிள் மரம் அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த நியூயார்க் உள்ளிட்ட சில மாநிலங்களின் மாநில மரமாகவும் உள்ளது. 

மேப்பிள் மரத்திலிருந்து சிரப், சர்க்கரை, வெண்ணெய் போன்றவை மட்டுமல்ல, மேப்பிள் மரத்தின் கட்டைகள் பேஸ்கட் பால் மட்டை, கூடைப்பந்து தளம் போன்றவற்றைத் தயாரிக்கவும், கிடார், வயலின், பியானோ போன்ற இசைக்கருவிகளின் பாகங்களைத் தயாரிக்கவும் பயன்படுகின்றன.

பொதுவாக மேப்பிள் மரங்கள் 200 முதல் 300 வருடங்கள் வரை வாழும். கனடாவிலுள்ள ஓன்டோரியா மாகாணத்தில் உள்ள 500 வயது மேப்பிள் மரம்தான் உலகின் மிகப் பழமையான மேப்பிள் மரமாகும்.

(படங்கள் உதவி: Pixabay & wikipedia)