2 October 2014

பால்டி தாம்ஸன் - ஆஸ்திரேலியக் காடுறை கதை




கரடுமுரடான சதுரவடிவ முகம், சுருள் சுருளான செம்பழுப்பு மயிர் டோப்பா, அடர்புதரென நரைமயிர்ப் புருவங்கள், குறுகுறுக்கும் கண்கள்அனைத்தும் நடிகர் டாம்பியரை நினைவுபடுத்தின. வந்தேறியாய் வந்து, நாடோடியாய் அலைந்துதிரிந்து, கிடைக்கும் வேலையைச் செய்யும் எடுபிடியாளாகி, மந்தையோட்டி, ரோமக்கத்தரிப்பாளன், மேற்பார்வையாளன், தொழில்முனைவோன், புதுப்பணக்காரன், பெரும் நிலச்சுவான்தாரர் என்று கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து இறுதியில் வங்கிமோசடியால் பாதிக்கப்பட்டவரானார். அவர் நுழைந்து வெளியேறிய அத்தனைத் தொழில்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தார். அவர்தான் பால்டி தாம்ஸன்.

அவர் முன்பொருமுறை பாராளுமன்றத்திற்கும் தேர்வாகியிருந்திருக்கிறார். அவருக்கு மறுபடியும் பாராளுமன்றம் போகும் ஆசை இருந்தது. தான் ஒரு முன்னாள் எம்.பி. என்று அவர் சத்தியம் செய்தாலும், மக்கள் நம்பமறுத்தனர். அவருடைய பொழுதுபோக்கு அரசியல் என்றாலும் அவருடைய அரசியலறிவு குறுகியதாக இருந்தது. அவர் எந்நேரமும் எதையாவது எவரையாவது தூற்றிக்கொண்டிருந்தார். அரசையும் வங்கிகளையும் தூற்றாத நேரங்களில் அவர் நாட்டைத் தூற்றிக்கொண்டிருந்தார். தொழிற்சங்கங்களை, அதன் தலைவர்களை விடவும் தன்னால் நன்றாக நடத்தமுடியும் என்று அவர் எண்ணுவதைப் போல் தொழிலாளர்களின் தலைவர்களை அவ்வப்போது தூற்றிக்கொண்டிருந்தார். மேலும் பாராளுமன்றத்தை, பிரதமரை விடவும் தன்னால் நேர்த்தியாக நடத்தமுடியும் என்றும் அவர் நினைப்பதைப் போன்று இருந்தது.

அவர் ஆளுங்கட்சி பற்றி எப்போதும் அதிருப்தி தெரிவித்துக்கொண்டிருந்தார். ஒரு ரோமக்கத்தரிப்பாளனோ எடுபிடியாளனோ நல்ல வாதத்திறமையும் அரசியலில் மிதமான ஈடுபாடும் கொண்டிருந்தவனாயிருந்தால், அவனுக்கு தாம்ஸனின் ரோமக்கத்தரிப்புக் கொட்டகையில் ஒரு அடிமையைப் போல் நாளெல்லாம் வேலை செய்யவேண்டிய அவசியமிருக்காது. ஏனெனில் தாம்ஸன் நாள் முழுவதும் அவனை வேலைசெய்யவிடாமல் அவனுடன் வாதிட்டுக் கொண்டிருப்பதோடு, முடிவில் அவனுக்கு அன்றையக் கூலியையும் கொடுத்தனுப்புவார்.

அவரிடம் யாராவது வேலை கேட்டு வந்தால் அவர்களிடம் சொல்வார், “இனிமேல் யாரையும் என்னால் வேலைக்கு எடுக்கமுடியாது. வங்கியிலே பணமில்லாதபோது நான் வேலைக்கு எடுக்கும் ஆட்களுக்கு என்னாலும் பணம் தர இயலாது. என் குடும்பத்துக்கு உணவிட மட்டும்தான் எனக்கு வசதியிருக்கிறது. சென்றவருடம் என்னால் சில சுக்கான் பாறைகளையும் புல்விதைகளையும் மட்டுமே விற்பனைக்கு அனுப்பிவைக்க முடிந்தது. அதுவும் வண்டிக்கூலிக்கே போதவில்லை. இப்போது செம்மறியாட்டு மந்தையொன்றை அனுப்பவிருக்கிறேன். அதிலொன்றும் பெரிதாய்க் கிடைத்துவிடப் போவதில்லை, தலைக்கு மூன்று பென்சுகள் கிடைக்கலாம். வங்கி திவாலாகுமுன் என்னிடம் இருபதாயிரம் இருந்தது, ஆனால் இப்போது ஒன்றுகூட இல்லை. நானும் என் பெட்டி படுக்கையை சுருட்டிக்கொண்டு வேலைதேடிப் போகவேண்டிய நிலைமையில்தான் இருக்கிறேன்.” என்பார்.

சரி, பால்டி, ங்களுடைய அழகான படுக்கையை சுருட்டி எடுத்துக்கொண்டு எங்களுடன் வாருங்கள், நாங்கள் உங்கள் கூடவே இருந்து உங்களைக் கடைசிவரை பார்த்துக்கொள்கிறோம்.” என்பார்கள் அவர்கள்.

நீங்கள் நம்பவில்லையென்று தெரிகிறது. நிலைமை என்னவென்று உங்களுக்கு நாளை சுற்றிக்காட்டுகிறேன். நீங்கள் கடைக்குச் சென்று என் கணக்கில் உங்களுக்குத் தேவையான உணவைப் பெற்றுக்கொள்ளுங்கள். இன்றிரவு இந்தக் குடிசையில் தங்கிக்கொள்ளுங்கள். நாளைக் காலை உங்களை சந்திக்கிறேன்.” என்பார்.

ஆனால் பெரும்பாலும் தேநீருக்குப் பிறகு அவர் அந்தக் குடிசைக்கு வெளியே குத்துக்காலிட்டு அமர்ந்து அந்த வழிப்போக்கருடன் தொழிற்சங்கங்கள் பற்றியும் அரசியல் பற்றியும் விவாதிக்க ஆரம்பித்துவிடுவார். அவருடைய கருத்துடன் ஒத்துப்போய், ஆமோதிக்கும்வரை விடியவிடிய வாதிட்டுக் கொண்டிருப்பார்.

பால்டி தாம்ஸனின் ரோமக்கத்தரிப்பு நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் பாதையானது, பலருக்கும் ஒரு நல்ல உணவிடம் அழைத்துச் செல்லும் பாதையாகிப்போனது, முக்கியமாக, பாராளுமன்றம் கலைக்கப்படக்கூடிய அச்சுறுத்தல் இருக்கும் நாட்களில்! இலக்கின்றி வேலைதேடிச் செல்லும் வழிப்போக்கன், பால்டி தாம்ஸனிடம் பேச்சோடு பேச்சாக தன் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதாகச் சொல்லி, பால்டியின் அரசியல் கருத்துகளில் தனக்கு ஆர்வமிருப்பதாக காட்டிக்கொள்வான். முதலில் அவருடைய கருத்துக்களை எதிர்ப்பான், நிறைய குறைநிறைகளை அலசுவான், இறுதியாக பால்டியின் கோணத்தில் யோசித்துப்பார்த்து, அவற்றை ஏற்றுக்கொள்வதாய் சொல்வான். முடிவில் கையில் உணவுப்பொட்டலத்தோடும் வாய் நிறைய சிரிப்போடும் தோழனிடம் மகிழ்வோடு விடைபெற்றுச் செல்வான்.

குளிர்காயும் நேரங்களில் பேசப்படும் கதைகளில் முதிய பால்டி தாம்ஸனைப் பற்றிய கதைகள் நிறைய பேசப்பட்டன. ஒரு புத்தாண்டு தினத்தின் நள்ளிரவில் ரோமக்கத்திரிப்பாளர்கள், பால்டி தாம்ஸனை எழுப்பி ரோமக்கத்தரிப்புக் கொட்டகை தீப்பற்றி எரிவதாக பொய் சொன்னார்களாம். சட்டையை அணிந்துகொண்டு வெளியே ஓடிவந்த பால்டி தாம்ஸன், டோப்பா அணிய மறந்துபோயிருந்தாராம். தொழிலாளிகள் செய்த குறும்புவேலைக்காக அவர்களனைவரையும் அங்கேயே அப்போதே வேலைநீக்கம் செய்தாராம். ஆனால் மறுநாள் அவர்கள் அதை அலட்சியப்படுத்தி அவருடைய ரோமக்கத்தரிப்புக் கொட்டகைக்கு வழக்கம்போல வேலை செய்யச்சென்றனராம்.

காடுறை வாழ்க்கையின் நகைச்சுவைகள் யாவுமே இதுபோன்று வருத்தமும் பச்சாதாபமும் வரவழைக்கும் நையாண்டி வேடிக்கைகள்தாம். தற்செயலாகவோ, வலிந்தோஎல்லா காடுறை நகைச்சுவைகளிலும் ஒரு மெல்லிய சோகம் இழையோடுவதைக் காணலாம்.

பால்டி தாம்ஸன் பற்றிய மற்றொரு கதை. ரோமக்கத்தரிப்புத் தொழிலில் பயிற்சிபெற்ற புதியவன் ஒருவன், பால்டி தாம்ஸனை ரோமக்கத்தரிப்பு நிலையத்தின் தொழிலாளி என்று நினைத்து அவரிடம் பால்டி தாம்ஸனைப் பார்க்கவிரும்புவதாக சொல்லியிருக்கிறான். இவர் கேட்டிருக்கிறார்,

நீ ஏன் அவரைப் பார்க்கவேண்டும்? வேலை தேடிக்கொண்டு வந்திருக்கிறாயா?”

ஆமாம். எனக்கு ஏதாவது வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறதா? பால்டி தாம்சன் எப்படிப்பட்ட முதலாளி?”

நீ இங்கிருந்து அடிலெய்டுக்கு நடையைக் கட்டு. அங்கிருந்து வடக்கில் ஏதேனும் ஒரு வளைகுடா நாட்டுக்குப் போனாலும் அவ்வளவு கஷ்டமிருக்காது. பால்டி தாம்ஸன்தான் ஆஸ்திரேலியாவிலேயே மிகவும் மோசமான ஒரு முதலாளி. பாழாய்ப்போன கிழ ஜந்து! ஒரு அடிமையைப் போல ஐம்பது வருடங்களுக்கும் மேலாக அவன் கூடவே இருந்திருக்கிறேன். (பால்டியின் வயது அறுபதுக்கு மேல்) ஆனாலும் அந்த கிழட்டு கஞ்சன் எனக்குத் தரவேண்டிய இரண்டு காசோலைகளைத் தராமல் இழுத்தடிக்கிறான். கேட்டால் அவனுடைய பணத்தையெல்லாம் வங்கி எடுத்துக்கொண்டுவிட்டது என்கிறான். இதையே தான் பலவருடங்களாக சொல்லி அழுதுகொண்டிருக்கிறான், நாசமாய்ப்போன நயவஞ்சகன். அவனுடைய மனைவி, குடும்பம், உறவு அனைத்தையும் வசதியாக வைத்துக்கொள்ள நான் இதுவரை தேவைப்பட்டேன். கடவுள் கிருபையால் நான் கடந்த முப்பது நாப்பது வருடங்களை ஓட்டிவிட்டேன். ஒருபோதும் நாடோடியாய்த் திரிந்து கஷ்டப்பட்டு வேலைசெய்திருக்காத அந்த அற்பத்தனமான கிழட்டுத் திமிங்கலத்திடமிருந்து வெளியேறி, நாளை நானும் நடையைக் கட்டப் போகிறேன். நான் இவ்வளவு சொன்னபிறகுமா நீ அந்த நீசன் தாம்ஸனிடம் வேலைகேட்கப் போகிறாய்? அதற்காக நீ மிகவும் வருத்தப்படுவாய். அவனிடம் வேலைசெய்வதற்கு பதில் நீ நரகத்துக்குப் போகலாம்.”

நல்லது.. நான் இங்கிருந்து போய்விட எண்ணுகிறேன். எனக்கு இங்கு  ஏதாவது உண்ணக் கிடைக்குமா?”

அவனா? அவன் நாய்க்கு ஒரு காய்ந்த ரொட்டித்துண்டு கூட போடமாட்டான். நீ இங்கு இருப்பதைப் பார்த்தாலே அவனுடைய இடத்தில் நீ அத்துமீறி நுழைந்துவிட்டதாக சொல்வான். நீ என்னோடு கடைக்கு வா, நான் உனக்கு நீ தொடர்ந்து செல்வதற்குப் போதுமான அளவு உணவை வாங்கித் தருகிறேன்.” இப்படித் தொடரும் கதைகள் ஏராளம்.

அவர் கலை இலக்கியத்திலும் ஆர்வமுள்ளதுபோன்று காட்டிக்கொள்வார், ஆனால் எல்லாமே அரைகுறை! ஒருமுறை நாங்கள் வேலையின்றியிருந்தபோது எங்கள் உணவுத் தட்டுப்பாட்டைப் போக்க, பால்டி தாம்ஸனின் ரோமக்கத்தரிப்பு நிலையத்தில் அவரை சந்தித்து, அவருடைய சொந்தக் கருத்துக்களையே எங்கள் கருத்துக்களென சொல்லி அவரை மகிழ்வித்த நிகழ்வை நினைத்துக் கொள்கிறேன். அவருடைய நிலையத்தில் பணிபுரிந்த எங்கள் தோழன் ஒருவனால் அவை முன்பே எங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டவை. அவர் எங்களுக்கான உணவை வாங்கித் தந்ததோடு அன்றிரவு குடிசையில் தங்க அனுமதித்து மறுநாள் காலை எங்களை வந்து பார்ப்பதாக சொல்லிச் சென்றார்.

மறுநாள் காலை அவரைப் பார்த்தபோது மறுபடியும் பேச்சு தொடர்ந்ததுஅவருடைய கருத்துக்களோடு ஒத்துணர்வு கொண்டு உடனடியாக ஏற்றுக்கொண்டோம். ஒன்றிரண்டு கேள்விகளுக்கான பதில்களிலேயே சமாதானமாகிப்போனோம். அவருடன் சேர்ந்து ஒத்த குரலில் எல்லாவற்றையும் தூற்றினோம். பேச்சோடு பேச்சாக, ஒரு அரசியல் பத்திரிகையில் கூடிய சீக்கிரமே எங்களுக்கு ஏதாவது வேலை கிடைக்குமென்று எதிர்பார்ப்பதாக சொன்னோம்

இறுதியாக அவர் உள்ளே சென்று ஒரு பவுண்டு நாணயத்தைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு சொன்னார், “இதை ஒரு தாளில் மடித்துப் பத்திரமாய் சட்டைப்பையில் வைத்துக்கொள்ளுங்கள். தொலைத்துவிடாதீர்கள்.”

பால்டியின் நன்மதிப்பைப் பெற்று, அவரிடம் வேலையும் பெற்று அவர் கூடவே இருக்க ஒரே வழி, அவரது கருத்துகளுக்கெல்லாம் மாற்றுக்கருத்து சொல்லி எதிர்ப்பைத் தெரிவிப்பதொன்றுதான் என்பதை பின்னாட்களில்தான் புரிந்துகொண்டோம்.


**********
(படம்: நன்றி இணையம்)

10 comments:

  1. //இறுதியாக பால்டியின் கோணத்தில் யோசித்துப்பார்த்து, அவற்றை ஏற்றுக்கொள்வதாய் சொல்வான். முடிவில் கையில் உணவுப்பொட்டலத்தோடும் வாய் நிறைய சிரிப்போடும் தோழனிடம் மகிழ்வோடு விடைபெற்றுச் செல்வான்.// :)

    //பால்டியின் நன்மதிப்பைப் பெற்று, அவரிடம் வேலையும் பெற்று அவர் கூடவே இருக்க ஒரே வழி, அவரது கருத்துகளுக்கெல்லாம் மாற்றுக்கருத்து சொல்லி எதிர்ப்பைத் தெரிவிப்பதொன்றுதான் என்பதை பின்னாட்களில்தான் புரிந்துகொண்டோம்.//

    :))

    சுவாரஸ்யமான எளிமையான நகைச்சுவைகள் நிறைந்த, அன்றைய ஏழை எளிய மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பிரதிபலிக்கும் கதைகளின் தொகுப்பு.

    தமிழாக்கம் அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தெரியாத தகவல்கள். நன்றி சகோதரி.

    ReplyDelete
  3. சிறுகதை சிறப்பு. நன்று.

    ReplyDelete
  4. சிறந்த பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  5. பால்டியின் நன்மதிப்பைப் பெற்று, அவரிடம் வேலையும் பெற்று அவர் கூடவே இருக்க ஒரே வழி, அவரது கருத்துகளுக்கெல்லாம் மாற்றுக்கருத்து சொல்லி எதிர்ப்பைத் தெரிவிப்பதொன்றுதான் என்பதை பின்னாட்களில்தான் புரிந்துகொண்டோம்.//

    ஆமாம் சாமி போடாமல் மாற்று கருத்து சொன்னால் வேலை நீடிப்பு
    நல்ல வழிதான்.

    ReplyDelete
  6. வாழ்க்கையில் சில நிகழ்வுகள் கற்பனையை விட சுவாரசியமாக இருக்கும். நம்மில் பெரும்பாலோரிடம் பால்டி தாம்சனின் குணாதிசயங்கள் இருக்குமே. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அறியாத, சுவையான 'கதை'!

    அருமை!

    ReplyDelete
  8. / பால்டி தாம்ஸனை எழுப்பி ரோமக்கத்தரிப்புக் கொட்டகை தீப்பற்றி எரிவதாக பொய் சொன்னார்களாம். சட்டையை அணிந்துகொண்டு வெளியே ஓடிவந்த பால்டி தாம்ஸன், டோப்பா அணிய மறந்துபோயிருந்தாராம். தொழிலாளிகள் செய்த குறும்புவேலைக்காக அவர்களனைவரையும் அங்கேயே அப்போதே வேலைநீக்கம் செய்தாராம். ஆனால் மறுநாள் அவர்கள் அதை அலட்சியப்படுத்தி அவருடைய ரோமக்கத்தரிப்புக் கொட்டகைக்கு வழக்கம்போல வேலை செய்யச்சென்றனராம். /

    அழகிய குணாம்சம் இல்லையா கீதா? - புரிந்துணர்வின் அழகு அது!!

    நல்ல மொழிபெயர்ப்பு கீதா. இறுதியில் யாருடய கதை? எதிலிருந்து பெற்ருக் கொண்டீர்கள்? எத்தனையாம் ஆண்டு போன்ற வரலாற்று விபரங்களையும் தந்திருந்தால் நல்லாவணமாய் அமையும் போல தோன்றியது.( வழக்கமாக இவை எல்லாம் உங்கள் பதிவில் தவறாமல் இடம் பெறுபவை )

    பாராட்டுக்கள் கீதா!! அன்பார்ந்த வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  9. ஒரு மொழிபெயர்ப்பை அது மொழி பெயர்ப்புதான் என்ற கவனம் ஏற்படுத்தாமல் செய்வதே சிறந்த ஒன்றாகும். உங்கள் இயல்பான கதையாடலாய் நகர்த்தி சென்றிருக்கிறீர்கள். என் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள் கீதா.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.